" உடனடியாக நீர் கிடைக்க இதுவரை எந்த யோசனையும் கிடைக்கவில்லை, இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு புத்தி கூர்மையாக வேலை செய்யும். பெண்களில் ஒருவர்கூட பேசாமல் இருப்பது ஏன்? உம்! முனியம்மா! நீங்க சொல்லுங்க! என்ன செய்யலாம்?"
முனியம்மா சேலைத் தலைப்பை இழுத்து உடலை மூடிக்கொண்டு, முதுமையின் காரணமாக உடல் நடுங்க, எழுந்தாள்.
" கும்பிடறேன், பெரியவங்களே! எழுதப் படிக்கத் தெரியாதவ நான், ஊர்உலக நடப்பும் அறியாதவ, எனக்குத் தெரிந்தது, இந்த பூங்காவன கிராமந்தான்!
நம்ம வீடுங்களிலே கிணறு வற்றிப் போய்விட்டது, உண்மைதான்! ஆனா, இந்த கிராமத்திலேயே எல்லா கிணறுகளும் வற்றிவிட்டதா என்ன? சொல்லுங்க!........"
எல்லோரும் கிழவி என்ன தெரிவிக்க நினைக்கிறாள் எனப் புரியாமல் விழித்தனர். அவளையே பார்த்தனர்.
" கோவிலுக்குப் பக்கத்திலேயே, இருக்கிற பொதுக் கிணறிலே இன்னும் தண்ணீர் வற்றவில்லை, சேரிசனங்க அதிலிருந்து குடம் குடமா நிறைய தண்ணீர் எடுத்துச் சென்று தண்ணீர் பற்றாக்குறை இல்லாம வாழறாங்க! அது ஏன் யார் கண்ணிலும் படலே?"
கூடியிருந்த அத்தனை மக்களும் சொல்லிவைத்தாற் போல, அதிர்ச்சியில், ஒருசேர எழுந்து நின்றனர்.
" ஆத்தா! என்ன சொல்றே? உனக்கு புத்தி கெட்டுப் போயிடுத்தா?"
கூட்டத்தலைவர் எல்லோரையும் கட்டுப்படுத்திவிட்டு, பேசிய கிழவியைக் கேட்டார்.
"முனியம்மா! உனக்கு ஊர் கட்டுப்பாடு மறந்து போயிடுத்தா? அந்தப் பொதுக் கிணற்றிலே, காலம் காலமா, சேரிசனங்க தண்ணீர் சேந்தி உபயோகிக்கிறாங்க, மேல்சாதிக்காரங்க நாம எப்படி அந்தக் கிணற்றுத் தண்ணீரை உபயோகிக்க முடியும்?"
செட்டியார் தொடர்ந்தார்.
" அதுமட்டுமில்லே, தேவர் ஐயா! சேரி சனங்களும் மேல்சாதிக்காரங்க நாமும் ஒரே கிணற்றுநீரை உபயோகிக்கமுடியுமா? கிழவி பேசறது, எரிச்சலாயிருக்கு! அப்படியெல்லாம் உயிர் வாழறதைவிட, செத்துத் தொலைக்கலாம்!"
"ஆமாம்!" என கூடியிருந்தோர், கோரஸ் பாடினர்.
முனியம்மாவின் வயது காரணமாக, அவளை அடிக்காமல் விட்டனர்.
கூட்டத் தலைவர் தேவர் ஐயா, மீண்டும் கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டு, சிறிது நேரம்