இந்த வீட்டிலே இனிமேல் நம்ம ரெண்டு பேரிலே யாராவது ஒருத்தர்தான் இருக்க முடியும். அந்த ஒருத்தர், நீயா, நானா?"
வள்ளி பொங்கிவந்த கேவலை, வாயில் சேலைத் தலைப்பால் அழுத்திக்கொண்டு, தலை குனிந்து வெளியேறினாள்!
அவமானத்துடன் வெதும்பிக்கொண்டிருந்த சுகுணாவின் காதருகில், ஒரு அன்பான குரல் பேசியது:
" நாகரிகம் தெரியாது, சில பேருக்கு! அதற்காக நாம் வருந்தவேண்டியதில்லை; விட்டுத் தள்ளுங்க, சிஸ்டர்!"
அதிர்ச்சியில் தலை நிமிர்ந்து பார்த்தாள், சுகுணா! ஒரு பெண்!
" என் பெயர் ப்ரியா! நானும் நேர்காணலுக்குத்தான் வந்திருக்கிறேன், சுகுணா!"
" என் பெயர் தங்களுக்கு எப்படி......?"
" நீங்கள் அந்த திமிர் பிடித்தவளுடன் பேசியது, என் காதில் விழுந்தது......."
" மிக்க நன்றி, ப்ரியா! இதுதான் என் முதல் நேர்காணல் அனுபவம்!"
" இதுவே கடைசியாகவும் இருந்து, உங்களுக்கு இந்த வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்."
சுகுணாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
" ப்ரியா! உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! இருவருக்குமே இங்கு வேலை கிடைத்து, நாமிருவரும் சேர்ந்து வேலை செய்து நமது நட்பு நீடிக்க பிரார்த்திக்கிறேன்....."
" சுகுணா! தப்பா நினைக்கலேன்னா, ஒன்று சொல்கிறேன், எப்போதும் நாம் நிகழ்காலத்திலேயே நம் மனதை செலுத்தவேண்டும், நல்லதோ கெட்டதோ, நிகழ்வதை சலனமின்றி ஏற்று பொறுமையாக வாழவேண்டும். ஏன் தெரியுமா? எதிர்பார்ப்புகள் இருந்தால், கூடவே ஏமாற்றத்தையும் ஏற்கவேண்டும். ஆனால், நம் மனது, ஏமாற்றத்தை ஏற்காமல், நம் இதயத்தை துயரத்தால் நிரப்பும்........."
" ப்ரியா! இந்த வயதிலேயே, இத்தனை மனப்பக்குவம் உங்களுக்கு எப்படி வந்தது?"
" அதுவா! நான் படித்தது, கல்லூரியில் அல்ல, நல்லது, கெட்டது கலந்திருக்கும் சமுதாயத்திலே!"
" என்ன சொல்றீங்க, ப்ரியா?"
" அந்த கதையை வேறொரு நாள் தமாஷா பேசலாமே, இப்ப நேர்காணலுக்கு தேவையான மனநிலைக்கு மாறுவோமே! சுகுணா! இந்த வங்கியைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
" விளம்பரத்தைப் பார்த்து மனு போட்டேன், நேர்காணலுக்கு அழைப்பு வந்தது........வேறெதுவும் தெரியாது......"