"நேர்காணலின்போது, இப்போதெல்லாம், எல்லா ஸ்தாபனங்களிலும் இந்தக் கேள்வியை கேட்டு மடக்குகிறார்கள், எந்த ஸ்தாபனத்தில் பணியாற்றப் போகிறோம் என்னும் விவரங்களைக்கூட தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லையான்னு கோபமா கேட்கறாங்க, அதனாலே, நாம அந்த விவரங்களை சேகரித்துத்தான் ஆகவேண்டும், சுகுணா!"
" இந்த நேரத்தில், என்ன செய்வது?"
" கவலைப்படாதீங்க! இதோ இந்த பேப்பரிலே இந்த வங்கியைப் பற்றிய விவரங்கள் இருக்கு, படிங்க!"
" ரொம்ப நன்றி, ப்ரியா!" என்று அவசரமாக, அந்த பேப்பரில் கவனத்தை செலுத்தினாள், சுகுணா!
அப்பப்பா!
வங்கியின் மூலதனம், எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது, கிளைகள் எத்தனை, சென்ற ஆண்டு லாபம் எத்தனை கோடி ரூபாய், என ஒரு பெரிய அட்டவணையே அந்த பேப்பரில் இருந்தது!
" ப்ரியா! யு ஆர் கிரேட்! நிச்சயமா உங்களுக்கு இங்கு வேலை கிடைக்கும்....."
" சுகுணா! நீங்க இன்னமும் பக்குவப்படலை! இவ்வளவு விவரங்கள் தயாரித்து தெரிந்துகொண்டு, நேர்காணலுக்கு நம்பிக்கையுடன் போனால், அங்கு அவர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமா?"
" சொல்லுங்க, ப்ரியா!"
" இந்த வங்கியின் சேர்மனின் பெயர் என்ன? ன்னு கேட்பார்கள், அந்த விவரம் இந்தப் பேப்பரில் இல்லை, இங்கு வந்தபிறகுதான் கேட்டுத் தெரிந்துகொண்டேன், அவர் பெயர் பூனாவாலா! பார்சி!"
சுகுணா மலைப்பில் வாய் பிளந்து ப்ரியாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
" சுகுணா! இப்படி நாம் முடிந்த அளவு தெரிந்துகொண்டு போனால், சம்பந்தமே இல்லாமல், வேறு கேள்வியை கேட்டு, நம்மை நிராகரிக்க முயற்சிப்பார்கள். ஏன் தெரியுமா? நேர்காணல் போர்டிலே உள்ள நான்கு அதிகாரிகளும் ஏற்கெனவே தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வேலை தருவது என முடிவுடன் வந்திருப்பார்கள். அதனால் நமக்கு பதில் தெரியாத கேள்வியாகத் தேடி கேட்பார்கள், இப்படித்தான், சென்ற முறை ஒரு நேர்காணலில் மிக நன்றாக தயார் செய்துகொண்டு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே சென்றேன், அவர்கள் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?"