புத்தி சொல்லி, அந்த மேனாமினுக்கியை முதல்லே வீட்டைவிட்டு விரட்டு! கிளம்பு!"
" இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்! முழுக்க யோசிக்காமலே, எடுத்தேன், கவிழ்த்தேன்னு எதையாவது அவசரத்திலே தவறா செய்து கையை சுட்டுக்கப்படாது! பொறுமை! ஒரு வாக்குறுதி, தரேன்! உன் விருப்பப்படி, அந்த மேனாமினுக்கியிடமிருந்து, உன் புருஷனை உனக்கு முழுசா மீட்டுத்தரேன். அதுக்கு முன்பாக, கொஞ்ச நேரம் நாம மனசுவிட்டுப் பேசி, சில விஷயங்களை புரிஞ்சிப்போமா?"
" பாட்டி! உன் வாக்குறுதியை நம்பறேன். நீ சொல்லவேண்டியதை சொல்லு!"
" உன் புருஷன் அந்த வேசியை கூட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தவுடனேயே, நீ வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாக மனம் ஒடிந்து, வருத்தம், கோபம், ஆத்திரத்திலே உன்னையே இழந்துட்டே, சரியா?"
" எந்தப் பெண்ணுமே தன்னை இழக்கத்தானே செய்வாள், பாட்டி?"
" அப்படியா? இழந்தபிறகு, என்ன செய்தே? உன் புருஷனை கண்டபடி திட்டிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கே கிளம்பிட்டே! இதை நீ செய்யலே, உன் அவசர புத்தி, உன் தன்மானம், எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைத்து ஏற்பட்ட சோகம், பழி வாங்கும் ஆத்திரம், உன்னை விழுங்கிவிட்டது, நீ நீயாக இல்லை, அந்த ஆத்திரமாகவும், சோகமாகவும், கோபமாகவும் உரு மாறியவளாக மாறிவிட்டாய்......"
" பாட்டி! புரியும்படியாகப் பேசு!"
" உன் புருஷன் தான் செய்த காரியத்துக்கு ஒரு காரணம் சொன்னானே, அதை நினைச்சுப் பார்த்தியா? அதை மறுக்கமுடியுமா? அதுக்கு சமாதானமா உன் புருஷனுக்கு என்ன சொல்லி அவனை திருத்தலாம்னு யோசிச்சியா?
வசந்தா! நாம எல்லோருமே செய்கிற தப்பு இதுதான்! எதிரில் இருப்பவர் எது பேசினாலும், அதற்கு உடனே பதில் பேசியே தீரவேண்டும் என்கிற அவசரம், எதிராளி தவறு செய்தால் அதனால் கோபமடைந்து நாமும் அதே தப்பை செய்கிறோம், ஏன் தெரியுமா? நம் மனம், அறிவு, தெளிவு எல்லாவற்றையும் 'தான் அவமானப்பட்டுவிட்டோமே' என்கிற ஆத்திரமும், அவமானமும், கோபமும் விழுங்கிவிடுகிறது......."
" பாட்டி! நீ சொல்வது கொஞ்சம் புரிகிறமாதிரி இருக்கு........"
" வசந்தா! யோசித்துப் பார்! உன் ஆசை என்ன? உன் புருஷன் உன்னுடன் தொடர்ந்து வாழணுங்கிறதுதானே, ஆனா நீ செய்யவிருந்த காரியம் அதை தவிடுபொடியாக்கிடுமே, என்கிற தெளிவை இழந்துவிட்டாய், இல்லையா?"
" ஆமாம், பாட்டி!"