"இன்னும் ஒரு படி மேலே போய் பேசுவோம், புருஷனை விபத்தில் இழக்கலாம், ஏதோ ஒரு காரணத்தில் இழக்கலாம், அதற்காக மனைவி தன் வாழ்வையே இழந்துவிடுகிறாளா?....
இன்னொரு கோணத்தில் பார்ப்போம், உன்னை வேண்டாம் என வெறுக்கிற புருஷனுடன் சேர்ந்து வாழ்வதில் என்ன நிம்மதி கிடைக்கும்? அதைவிட, தனியாக வாழ்வதே நிம்மதி இல்லையா?
வசந்தா! நாம் எல்லோருமே தனியாகத்தான் பிறக்கிறோம், தனியாகத்தான் இறக்கிறோம், தனியாகத்தான் சிலகாலம் வாழ்வோமே, அதிலென்ன பெரிய நஷ்டம்?"
" பாட்டி! என் புத்தியை செருப்பாலே அடிச்சிக்கணும், நீ சொல்றது இப்பத்தான் விளங்குது! சரி, பாட்டி! நடப்பது நடக்கட்டும், உன் பேரன் அவன் இஷ்டப்படியே வாழட்டும், அவனாவது சந்தோஷமா இருக்கட்டும், நான் உன்னுடனேயே இங்கேயே இருந்துடறேன்......"
" பார்த்தியா, மறுபடியும் அவசரப்படறே! அறிவு பூர்வமா சிந்தித்து, முயற்சி செய்வதிலே தப்பே இல்லே, ஆனால், அந்த முயற்சியின் விளைவை, வெற்றியோ, தோல்வியோ, ஏற்கிற மனப்பக்குவம் வேண்டும், சரி, வா! உன் வீட்டுக்குப் போய் உன் புருஷனிடம் பேசிப்பார்க்கிறேன், உனக்கு வாக்குறுதி தந்திருக்கேனே, அதை மறக்கலாமா? வசந்தா! நம்பிக்கையோடு முயற்சிப்போம், பலன் எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்வோம், சரியா?"
" சரி, பாட்டி!"
இருவரும் வசந்தாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது, வசந்தாவின் புருஷன் இருவரையும் " அங்கேயே நில்லுங்க! வீராவேசமா நான்சொல்றதைக்கூட காது கொடுத்து கேட்காம போனியே, இப்ப எங்கே திரும்பி வந்தே?" என ஆவேசமாக தடுத்தான்.
" ஏன்டா கூறுகெட்டவனே! நான் உன் பாட்டிடா! என்னையுமா உள்ளே வரக்கூடாதுன்னு தடுக்கிறே! ஆத்திரத்திலே புத்தி புரண்டு விட்டதா?"
" பாட்டி! நீ உள்ளே வா! நான் தடுத்தது, அந்த ஓடுகாலியைத்தான்!"
" அவள் வீட்டை விட்டுப் போனாள்னு ஓடுகாலிங்கறே, இப்ப திரும்ப வந்திருக்கிறபோது, அவள் ஓடுகாலி இல்லே, நீதான் விரட்டுகாலி, துரத்துகாலி! த்தூ! மானங் கெட்டவனே! நாலுபேர் அறிய, மேளங்கொட்டி தொட்டுத் தாலி கட்டியவளை குழந்தை பிறக்கலைன்னு இன்னொருத்தியை வீட்டுக்குள்ளே அழைச்சு வந்திருக்கியே, உன்னை என்ன சொல்றது?"
" பாட்டி! நீயே நியாயத்தை சொல்லு! பத்து வருஷமாச்சு, அவளாலே எனக்கு ஒரு வாரிசை தரமுடியலே, அதனாலே வேறொருத்தி மூலமா என் வாரிசு கிடைச்சதும், அவளை விரட்டிடறேன், பழையபடி நாம சேர்ந்து வாழ்வோம்னு நியாயமா சொன்னேனா,