நிருபமா வாய்விட்டு சிரித்தாள்.
" நான் ஏதாவது தப்பா பேசிட்டேனாம்மா, ஏன் சிரிக்கிறீங்க?"
" உங்களுக்கு சினிமாத் துறையில் உள்ளவர்களைப் பற்றி, முழுமையாகத் தெரியவில்லை! இந்த வியாபாரத்தில், ஒருவர் கோடிக்கணக்கில் லாபம் ஒரே வாரத்தில் சம்பாதிக்கலாம், இல்லையா? அந்தப் பேராசையில், அப்பாவும் மகனுமாக இருந்தால்கூட, விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தாமோதரன் ஐயா என்னை நீக்கினால், என்மீது பழி சுமத்தினால், மற்ற தயாரிப்பாளர்கள் அதை பயன்படுத்திக்கொண்டு என் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துப் பேசி சம்மதிக்கவைத்து, படம் தயாரித்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடுவார்கள். மக்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் அலுப்புத் தீர, சிறிதுநேரம் பொழுது போகணும், அவ்வளவுதான்!
சரி, என் கணிப்பு தவறென்றே வைத்துக்கொள்! என்ன நடக்கும்? எனக்கு வருமானம் நின்றுவிடும், கையிருப்பு காலியாகி மீண்டும் கிராமத்துக்கே போகும்படி ஆகிவிடும், ஆகட்டுமே! இந்த வருமானம், புகழ் எல்லாம் திடீரென வந்தது, திடீரென போகும், இதுதான் நாட்டில் நடப்பது. நாம் தனிப்பட்ட முறையில், தவறாக, எனக்கு மட்டும் அப்படியெல்லாம் போய்விடாது, நிரந்தரமாக வந்துகொண்டே யிருக்கும் என நினைத்தால், நான் முட்டாளில்லையா?
என்னை இப்போது பார்க்கிறீர்களே, அந்த மினுமினுப்பும் செயற்கை அழகும் பிறவியில் இல்லை. பிறக்கும்போது, குள்ளமாகவும் கருப்பாகவும், அழகில்லாமலும் இருந்ததை பார்த்து என் அம்மா 'இந்தப் பெண்ணை ஒருவன் மணந்துகொள்ள இந்த தோற்றம் பற்றுமா?' என்று யோசித்தாள், அதனால் அதையே 'பற்றுமா' என்பதின் தழுவலாக 'பத்மா' என பெயரிட்டாள்.
என்னை மாற்றியது, தாமோதரன் ஐயாதான், படிப்பில் மட்டுமல்ல, தோற்றத்திலும்கூட! இந்த செயற்கை அழகும் தோற்றமும் நிரந்தரமல்ல; சில ஆண்டுகளில் பல் இளித்து என்னை கோரமாக காட்டும். அப்போது என்னை பார்த்து குழந்தைகள், ஏன் பெரியவர்களேகூட, பேயா பிசாசா என பயப்படுவார்கள், இதுதான் யதார்த்தம்! அப்போது இன்று என்னைச் சுற்றி வருகிற இந்தப் பெரிய மனிதர்கள்கூட்டம் ஒருவர்கூட எனக்கு துணையாக இருக்க மாட்டார்கள்!........."
நிருபமா இன்னமும் தான் பத்மா என்பதை மறக்கவேயில்லை என்பதை நினைத்துப் பார்த்த செயலாளர் மீண்டும் அவள் காலில் விழுந்தார்.