தனிமையில் விசாரித்தனர்.
" ரேணுகா! நாங்கள் வம்புதும்புக்காக உன் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாக தவறாக நினைக்காதே! நாமெல்லோரும் சேர்ந்து ஒரே கட்டிடத்தில் தனித்தனி ஃபிளாட்டுகளில் வசிக்கிறோம்.
தினமும் இரவு நெடுநேரம் உங்கள் வீட்டிலிருந்து கணவன் மனைவி சண்டை உரக்க ஒலித்து எங்கள் நிம்மதியை, எங்கள் குழந்தை படிப்பை, கெடுக்கிறது.
உங்களை உடனடியாக வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறச் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. நன்றாக, ஒற்றுமையாக, அழகாக வாழ்ந்து வந்த உங்களிடையே திடுமென அப்படி என்ன பிரச்னை எழுந்தது என்பது தெரியவந்தால், எதுவாக இருந்தாலும், அந்த விரிசலின் காரணத்தை அகற்றி, உங்களை மீண்டும் சேர்த்து வைக்கவே முயல்கிறோம்.
அதனால், தைரியமாக எங்களை நம்பி நீ உன் பிரச்னையை சொல்லு!
உறுதி தருகிறோம், உங்கள் பிரச்னையை நாங்கள் எப்பாடு பட்டாவது தீர்த்து வைத்து நீங்கள் பழையபடி ஆனந்தமாக சேர்ந்து வாழ வழி செய்கிறோம்.
இப்படி நாங்கள் சமாதானமாக பிரச்னையை தீர்க்காவிடில், என்ன நடக்கும் என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறோம்.
பெண்களைப் போல, ஆண்களுக்கு பொறுமை கிடையாது. எங்கள் கணவன்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவர்கள் உங்களால், இருவரும் தினமும் உரக்க சத்தமிட்டு சண்டை போட்டுக் கொள்வதால், அக்கம்பக்கத்தில் வாழும் எங்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை என்றும் எந்த நிமிடமும் உங்கள் வீட்டில் ஏதாவது அசம்பாவிதம், நடக்கக்கூடாத நிகழ்வு நடந்துவிடுமோ என பயமாக இருப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்து அவர்கள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கச் செய்கிறோம் என்கிறார்கள்.
நாங்கள்தான் அவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, உன்னிடம் பேசி சமரசத்துக்கு வழி காண்கிறோம் என உறுதி தந்து அவர்களின் அனுமதியுடன் உன்னிடம் பேச வந்திருக்கிறோம்.
தைரியமாக உன் மனதில் உள்ளதை கொட்டி கவிழ்த்துவிடு!"
இவ்வளவையும் கேட்டு மனதில் வாங்கிக் கொண்டபிறகு தான், அவளிடமிருந்து பதில் வந்ததாம்.
பள்ளியிலும் கல்லூரியிலும் இருவரும் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்து பழகி காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தபோது, அவனுடைய பணக்கார பெற்றோர் எதிர்த்தார்களாம்.
காரணம் கேட்டதற்கு, அவள் வேறு தாழ்ந்த சாதியில் பிறந்தவளாம்!