" அதனாலென்ன?" என்று அவர்களிடம் எதிர்த்து வாதாடி, " எனக்கு காதல்தான் முக்கியம்! நான் அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என வீராப்பாக பேசியபோது, " அப்படியானால், எங்கள் சொத்தில் ஒரு சல்லிக்காசுகூட உனக்கு தரமாட்டோம்" என்றார்களாம், அவனுடைய பெற்றோர்!
" பணத்தைக் கட்டிக்கொண்டு நீங்கள் அழுங்கள்! நான் அவளை கட்டிக்கொண்டு சிரிப்பேன்" என வீராப்பாகப் பேசி, வெளியேறி, சொன்னதை நிறைவேற்றி ரேணுகாவை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை வாழ்ந்து வந்தவன், சமீப காலமாக பெற்றோரின் உறவை புதுப்பித்துக் கொண்டு அடிக்கடி அவர்களை பார்த்து வருகிறானாம். ஏனெனில், அவர்களின் சொத்துக்களின் மதிப்பு ஏறக்குறைய முப்பது கோடி ரூபாயாம்! அத்தனையும் இந்த தலைமுறையில், சுயமாக சம்பாதித்ததாம்! அவர்களின் ஒரே வாரிசான பிள்ளைக்கு சேரவேண்டும் என்ற ஆசையில் யார் மூலமாகவோ, அவனுடன் தொடர்பை ஏற்படுத்தி உறவை வளர்த்துக்கொண்டு, அவனை முற்றிலும் மாற்றிவிட்டார்களாம்.
" இதப் பாருடா! நாங்க சொல்வதை கேட்டு முப்பது கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாகி எங்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழுடா! அந்தப் பொம்பளையோட, இத்தனை வருஷம் வாழ்ந்து
ஒரு மகளையும் பெற்றுக் கொண்டதற்கு ஈடாக, அவர்கள் இருவருக்கும் தலைக்கு ஒரு கோடி ரூபாய் தந்துவிடு! அவளை டைவோர்ஸ் செய்துவிடு!"
இந்த மந்திரத்தில் மயங்கிவிட்டானாம், அவன்! அதனால்தான் தினமும் ரேணுகாவை விவாகரத்து தரச்சொல்லி குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறானாம்......!
இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், ரேணுகாவிடம் தங்கள் யோசனையை தெரிவித்தனராம்.
" ரேணுகா! வாலிப வயசிலே எல்லோருக்கும் வருகிற காதல்வெறியிலே, பெற்றோரை எதிர்த்து வெளியே வந்து காதலியுடன் குடும்பம் நடத்துவார்கள். சில வருஷங்களுக்குப் பிறகு, பெண்களைவிட ஆண்களுக்கு சீக்கிரமாக காதல்வெறி குறைந்து யதார்த்த நிலை புரிந்து பணத்தின் பின்னே செல்வார்கள். உன் கணவனும் அப்படித்தான்!
புத்திசாலித்தனமாக, நீ நடந்து கொள்! அவனுக்கு உன்மீதிருந்த காதல் காற்றிலே கரைந்துவிட்டது, பணம் பிரதானமாகிவிட்டது. அதற்காக, ஆண்கள் எதையும் செய்ய துணிவார்கள். கொலை செய்யவும் தயாராகி விடுவார்கள்.
அதனால், ரேணுகா! அவன் தருகிற பணத்துடன் நீயும் உன் மகளும் நிம்மதியாக இந்த வீட்டிலேயே எங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து வாழுங்கள்! அவனை விவாகரத்து செய்துவிடு!