சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவை
முதுமை நமக்கு எத்தனையோ உடல் உபாதைகளை தந்தாலும், வேறெந்த பருவமும் தராத, தரமுடியாத, ஒரு த்ரிலை தருவதை நான் ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வருகிறேன்!
ஆம், எந்த வினாடியும் நம் உயிர், உடலை விட்டுப் போய்விடலாம், என்கிற தெளிவுடன், நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்கிறோமே, இல்லை இல்லை, அனுபவிக்கிறோமே, அது தரும் அந்த த்ரில்லுக்கு ஈடு இணை கிடையாது!
ஒரு விசித்திரம் தெரியுமா? முன்பிருந்ததைவிட, தற்போது காற்றிலும் சுற்றுச் சூழ்நிலையிலும் மாசு மிதமிஞ்சி கலந்துள்ளதை உலகமே அறியும்!
அதனால், சராசரி மனிதன் நேர்கொள்ளவேண்டிய நோய்களும் புதிது புதிதாக பெருகிவிட்டன.
தெருவுக்கு தெரு நான்கு மருத்துவமனைகள் கட்டினால்கூட, பிணியால் வருந்தும் நோயாளிகள சமாளிக்க முடியாது!
மருந்து கடைகள், மளிகை கடைகளைவிட, எண்ணிக்கையில் அதிகம்!
இந்தச் சூழ்நிலையில், சராசரி வயது முன்பிருந்ததைவிட குறையத் தானே வேண்டும்?
மாறாக, மனிதனின் சராசரி ஆயுள் 34, 52, 60 என்று அதிகரித்து இன்று எண்பதை கடந்துவிட்டது.
தினமும் ஊடகங்கள் நம்முன்னே காட்சிப்படுத்துகின்றன, நூறு வயது கிழவன் டீகடை நடத்துவதையும், 103 வயது கிழவி சுறுசுறுப்பாக வீட்டுவேலைகள் செய்வதையும்!
தொழில் நிறுவனங்கள்கூட, தொழிலாளர்களின் ஓய்வுவயதை 58 லிருந்து 60, 65 என்று உயர்த்திவிட்டன!
பற்றாக்குறைக்கு, மக்கட்தொகை பெருக்கம் வேறு!
உணவிலே கலப்படம், மருந்திலே கலப்படம், போலி வைத்தியர்கள், கவனிக்கப்படாமலேயே மரணிக்கும் நோயாளிகள், தவறான சிகிச்சையால் அவதியுறுவோர்,........ உண்மைதானே?
எதற்கு இவைகளை நீட்டி முழக்குகிறேன் என்றால், மனிதன் இவைகளை புறந் தள்ளிவிட்டு, தான் வாழப்போகும் நீண்ட நெடிய எதிர்காலத்துக்காக இருப்பிடங்களையும், வசதிகளையும், ஆடைகளையும், செல்வத்தையும், குவிப்பதிலே குறியாக இருக்கின்றானா, இல்லையா?
முதுமையில் மட்டுமே இவைகளிலிருந்து சிறிது சிறிதாக வேறுபட்டு, மனிதன் ஒவ்வொரு வினாடியும் தான் வாழ்வதை ரசிக்கிறான்.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்து பாருங்களேன், தெரியும்!
" சார்! ஒவ்வொரு நிமிடமும் நான் உயிர் வாழ்வது, கடவுள் தந்த போனஸ்! கொசுறு! ஒருவேளை எமதர்ம ராஜா, வேலைப் பளுவில், என்னை மறந்துவிட்டானோ என்னவோ!