காலையிலிருந்து ராத்திரி பத்து மணி வரையிலும் ஆயிரக்கணக்கிலே ஒவ்வொருத்தரும் அவனிடம் பணம் கொடுக்கிறோம், அவன் அந்தப் பணத்திலே கொஞ்சம் நமக்கு கொடுத்து, மனையை வாங்கி அவன் கடையை விரிவுபடுத்தி மேலே மேலே அள்ளப்போறான், பணத்தை! வாங்கப்போறவன், வேற யாருமில்லை, பார்வதி ஜுவல்லர்ஸ்தான். இந்த வீடு, அவன் கடையை ஒட்டி பின்புறத்திலே இருக்கிறதனாலே, இந்த வீட்டை இடிச்சிட்டு, அவன் கடையை விரிவாக்கப்போறான், அவன் என்ன செய்தால், நமக்கென்ன? கேட்ட பணத்தை தரேன்னு அக்ரிமெண்ட் போட்டுட்டான், ஆனா ஒரே ஒரு கன்டீஷன்! அடுத்த மாத துவக்கத்திலேயே இந்த கட்டிடத்தை இடித்து, கடையை விரிவாக்கணுமாம்,"
" ஓகோ! இப்பத்தானே புரியுது, நீங்க ஓடோடி வந்து எங்களுக்கு ஏன் அல்வா கொடுத்தீங்கன்னு! நாங்க, வீட்டை காலி பண்ண ஒரு நாளாவது டயம் தருவீங்களா, மாட்டீங்களா?"
இந்தக் கேள்வியை முரட்டுத்தனமாக கேட்டது, நானல்ல; என் சீமந்த புத்திரன்!
"ஐயா! உங்க பிள்ளை ரொம்ப கோவமா பேசறாரு, முழுவதும் கேட்காமல்! நகைக்கடை முதலாளி என்னிடம் கேட்டதை சொன்னேனே தவிர, நான் அதற்கு என்ன பதில் சொன்னேன்னு ......."
" இதப் பாருங்க! உங்களுக்கு ஒரு கோடி ரூபா கிடைக்கிறதுக்காக, நாங்க நடுத்தெருவுக்கு வரமுடியாது!"
" தம்பீ! முழுக்க கேளுப்பா! நாம ரெண்டு குடும்பமும் இன்னிக்கி நேத்திக்கா பழகறோம், முப்பது வருஷ பழக்கம்! முந்நூறு ரூபா வாடகையிலே ஆரம்பித்து இன்னிக்கி பத்தாயிரம் ரூபாய் தரீங்க, உங்களுக்கு மாற்று இடம் கிடைக்கிற வரையிலும், காலி பண்ணத்தர முடியாதுன்னு கண்டித்து சொல்லிட்டேன், நான் அப்படி ஒண்ணும் பணத்துக்காக நட்பை இழக்கறவன் இல்லேப்பா!"
" அப்புறம் எப்படி அக்ரிமெண்ட்டிலே கையெழுத்துப் போட்டீங்க?"
"நகைக்கடைக்காரனுக்கு இந்த தெருவிலேயே நாலு வீடு தள்ளி அஞ்சு வருஷம் முன்பு கட்டின வீடு காலியாக இருக்காம், அந்த வீட்டிலே நீங்க, எவ்வளவு வருஷம் வேணுன்னாலும், வசிக்கலாம்னு சொல்லிட்டான்........"
" நியாயமாகத்தான் சொல்லியிருக்கான்......"
"ஐயா! நீங்க பெரியவங்க! மனசு வைச்சு உதவி செஞ்சீங்கன்னா, எனக்கு ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும்........"
" சட்டப்படி இந்த வீடு எங்களுக்குத்தான் சொந்தம், தெரியுமா உங்களுக்கு?"