யோசிக்காதே!"
அதன்படியே ரேணுகா நடந்துகொண்டதால், அவன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோருடன் வாழ்கிறானாம்.
ரேணுகா தீவிரமாக தன் மகளுக்கு பதினெட்டு வயது முடிந்ததும், நல்ல குடும்பத்து பையனாகப் பார்த்து, கையிலுள்ள பணத்தில் தடபுடலாக கல்யாணம் செய்துவைக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான், இந்த விபத்தாம்!
காரணமே புரியவில்லையாம்.
ஒன்றுமட்டும் உறுதியாம்! இருவரின் கொலைக்கும் வெளிநபர் எவரும் காரணமில்லையாம், ஏனெனில் பெண்ணின் அலறலும் கதறலும் கேட்டவுடனேயே விழித்து எழுந்து ஓடிவந்து பார்த்தபோது, ரேணுகா தன்மீது பாட்டிலை கவிழ்த்துக்கொண்டு தீ பற்றவைத்துக் கொள்வதை கண்ணால் நேரிடையாகப் பார்த்தார்களாம்.
ஏன்? அப்படியேன் நடந்தது? என்பதுதான் விளங்கவில்லையாம்! ரேணுகாவின் மனம் மாற என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியவில்லையாம்!
வேறு வழியில்லாமல், ரேணுகா உடல் நலமாகி விவரமாகப் பேசக்கூடிய நிலையில் இருக்க, ஆண்டவனை பிரார்த்திக்கொண்டே, மருத்துவ மனைக்குச் சென்று ரேணுகாவை சந்தித்தேன்.
" வாங்க! உங்களைப் பார்த்து உங்க மூலமா உலகத்துக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்லப் போகிறேன்.
உங்களுக்கு கிடைத்த தகவலை சொல்லுங்க! மற்றதை நான் சொல்கிறேன்......."
சுருக்கமாக நான் சேகரித்த தகவலை தெரிவித்தேன்.
" விட்டுப்போன சில உண்மைகளை முதல்லே சொல்றேன்.
என்னை திருமணம் செய்துகொள்வதற்கு முன், என் கணவன் என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.
"நான் எப்படி உனக்காக என்னைப் பெற்றவர்களின் உறவை முறித்துக்கொண்டு, வந்துவிட்டேனோ, அதே போல நீயும் உன் பெற்றோரிடமிருந்து பிரிந்து உறவை முறித்துக்கொண்டு என்னுடன் வரவேண்டும்...."
" என்ன காரணம் என கேட்டதற்கு, 'எல்லா பெற்றோர்களுமே சாதி வெறியர்கள்! சமயம் பார்த்து நம்மை பிரித்து விடுவார்கள். என்னையும் உன்னையும் நயவஞ்சகமாக கொல்வதற்கும் தயங்கமாட்டார்கள். நாட்டில் நடப்பதைத் தான் சொல்கிறேன்......' என்றான். நானும் அதை ஏற்றுக்கொண்டதால், இருவரும் ஊரை விட்டு ஊர் பெயர்ந்து வந்து இந்த நகரத்தில் செடிலானோம்.