" நகைக் கடைம்மா! முப்பது வருஷமா ஓகோன்னு நடக்குதும்மா! தி.நகரிலே, அதுவும் மெயின் ரோடுலே, இருக்கும்மா, கடை! ஒருநாளைக்கு வியாபாரம் சராசரியா ஒரு கோடி ரூபாயை தாண்டிடும்....அவங்க மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைச்சிருக்காரும்மா! அந்தப் பையனுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சும்மா!......."
" கொஞ்சம் மூச்சு விடுங்க! குடிக்க தண்ணீர் தரட்டுமா?"
" வேணுங்கறபோது, காபியே கேட்டு குடிக்கிறேம்மா!
இப்ப உன் நல்ல முடிவுதாம்மா எனக்கு முக்கியம்!"
வடிவழகி உள்ளே போய், தனக்கு போட்டி நடத்திய ஊடகம் தந்த செல்போனை எடுத்து வந்தாள்.
சிக்கிலுக்கு 'திக்'கென்றிருந்தது! தான் விடுகிற ரீலை கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது என்கிற உதறல் கூடியது!
ஆனால், தி.நகரில் நடேச செட்டியார் நகைக்கடை வைத்திருப்பதும், அந்தக் கடை ஓகோன்னு கொழிப்பதும் பொய்யில்லை. அவருக்கு ஒரு மகன் இருப்பதும் பொய்யில்லை, அவன் அமெரிக்காவில் படித்தவன் என்பதும் உண்மை!
அவர்களுக்கு சிக்கிலை ஓரளவு தெரியும்.
ஆனால், அவர்களுக்கு வடிவழகி, ஒரு கோடீஸ்வரியானதோ, அவளை ஊடகத்தில் பார்க்கவோ, கேட்கவோ இல்லை, அதெல்லாம் சிக்கிலின் கைச்சரக்கு!
" ஐயா! இந்த செல்லிலே, நடேச செட்டியாருக்கு கனெக்ஷன் போட்டுக் கொடுங்க, நானே அவருக்கு நேரிலே நன்றி சொல்கிறேன், அதுதானே மரியாதை! என்மீது எத்தனை பிரியம் அவங்களுக்கு!"
வடிவு நீட்டிய போனை வாங்கிக்கொள்ள, சிக்கிலின் கையில் நடுக்கம்.
" வந்தும்மா! அவர் இந்த நேரத்திலே கடையிலே பிசியா இருப்பாரு, போனிலே கிடைக்கமாட்டாரு......."
" நியாயந்தான்! ஒருநாளைக்கு ஒரு கோடி ரூபாய் வியாபாரமாகுதே, பரவாயில்லே, அவர் மகனுக்கு போடுங்க!"
" அவர் மகன் நம்பர், எனக்கு தெரியாதுங்களே!"
வடிவு செல்போனை உள்ளே வைத்துவிட்டு வந்தாள்.
அப்பாடா! தப்பித்தோம், என சிக்கில் மூச்சு விட்டார்!
அந்த நிம்மதி நீடித்ததா என பார்ப்போம்!