" ஈசா! தன் பிம்பத்தையே பார்த்து இப்படி மகிழ்ந்து போகிறாளே, முட்டாள்!"
பரமன் மறுபடியும் புன்னகை செய்தான்.
" ஈசா! இந்தப் புன்னகைக்கு பொருள் என்ன? ஏற்கெனவே செய்ததற்கும் சேர்த்து விளக்கம் தாருங்களேன்!"
" தேவி! அவள் முட்டாள் என்றால், நீயும் அதுவே! அவள் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து மகிழ்ந்தது அறிவீனம் என்றால், நீயும் அதே தவறைத்தானே செய்தாய்? பூலோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உனது பிம்பங்கள்தானே! அவை வேறென நினைக்கச் செய்யும் மாயை, உன்னை ஒருகணம் ஆட்கொண்டு விட்டது! அத்தனை சக்தி வாய்ந்தது, மாயை!"
பார்வதி வெட்கித் தலை குனிந்தாள்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, "ஈசா! தங்களையும் அந்த மாயை ஒரு கணம், இல்லை இல்லை, இரு கணங்கள் ஆட்டிப் படைத்தது போலிருக்கே!"
ஈசன் தலை குனிந்தான். சில வினாடிகளில், சமாளித்துக்கொண்டு, "தேவி! அதென்ன இரு கணங்கள்?"
" ஒரு கணம், சிதம்பரம் கோவிலில் பக்தர்களை பார்த்து பரவசப்பட்டது, இரண்டாவது, என்னைப் பார்த்து பூரித்துப் போனது! நானும் உங்கள் பிம்பம்தானே!"
" தேவி! நம்மையே இந்த மாயை ஆட்டிப்படைக்கும்போது, பூலோகத்தில் ஒருவன் அதனிடம் சிக்காமல் எப்போதும் தெளிவாக இருக்கிறான் என்றால், நீ நம்புவாயா?"
" அவனே மாயையினால் உருவானவன்! அதெப்படி அதை மீறி அவனால் வாழமுடியும்? நம்ப முடியவில்லையே!"
" வா! நேரிலேயே போய் பார்ப்போம்!"
சென்னை நகரின் முக்கிய பகுதியான மயிலையில், ஒரு அபார்ட்மெண்ட்!
அதில் ஒரு சிறு குடும்பம்! ஒரே மகனுடன் வாழும் பெற்றோர்!
"டாட்! ஒரு ஆயிரம் ரூபாய் கொடு!"
தந்தையும் உடனே உள்ளே போய், பணத்தை எடுத்துவந்து, மகனிடம் கொடுத்தார்.
" ஸ்வீட் டாட்!" என மகன் தந்தைக்கு கன்னத்தில் முத்தம் அளித்துவிட்டு ஸ்கூட்டர் சாவியை கையில் சுழற்றிக்கொண்டே விசில் அடித்தவாறே, வெளியேறினான்.
இந்தக் காட்சியை, சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தாய், ஆவேசத்துடன் வெளியே வந்து, கணவனிடம் கேட்டாள்.