எந்த தாயும் தான் பெற்ற குழந்தைக்கு கெடுதல் செய்யவே மாட்டாள்!
ஏன்னா, அப்படி செய்தால், அது அந்த குழந்தையைவிட அவளைத்தான் அதிகமா பாதிக்கும்!
அதே போல, நாம எல்லோரும் கடவுளின் குழந்தைகள்! நமக்கு ஒருநாளும் தீங்கு செய்யமாட்டான். அப்படி செய்வதிலே, அவனுக்கென்ன லாபம்? மாறாக, நஷ்டம்தான்!
நமக்கு கெடுதல் நேர்ந்தால், அவன் துடித்துப்போய் ஓடிவந்து காப்பாற்றுவான்!
இதை நான் உறுதியா நம்பறேன், நீயும் நம்பினால், உனக்கு மன அமைதி கிடைக்கும்!
ஏன் நம்பணுங்கறதுக்கு காரணம் சொல்றேன், கவனமா கேளு!
கண்ணுக்கு தெரியாத சின்ன கிருமிகளிலிருந்து, பெரிய யானை வரையிலும் வாழவைக்கிறவன் அவன்!
உடலே இல்லாத பிறவிகளுக்குக்கூட உணவு தந்து வாழவைக்கிறான், அவன்!
இந்த ஜீவராசிகளை படைக்கிறதுக்கு முன்பே, அவைகள் உயிர்வாழத் தேவையானதை படைக்கிறான்.
உலகத்தில் ஒரு பங்கு நிலம், ஆனா அந்த நிலம் வளமையா இருக்கவும் அதில் வாழும் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கும் இரு பங்கு தண்ணீர்!
எத்தனை பயிர்கள்! எவ்வளவு காடுகள்! மரங்கள், கனிகள், காய்கள், இலைகள்!
அவைகளுக்கு அவசியமான ஒளி தரவே படைக்கப்பட்ட சூரியன், சந்திரன், ஆகாசம், காற்று, நிலம், நீர்!
எல்லாவற்றையும் படைத்தபிறகு யோசித்தான், படைப்புகளுக்கு தந்திருக்கிற அறிவினால், அதிக பட்சம், அவைகளால் தங்களைப்பற்றி மட்டுமே நினைக்கும் ஆற்றல் தந்திருக்கிறோம்,
ஆனால் ஒட்டுமொத்த படைப்பையே நிர்வகிக்க தான் செய்தே தீரவேண்டிய செயல்களை மனிதனால் புரிந்துகொள்ள இயலாதென உணர்ந்தான்.
உதாரணமா, நாமெல்லாம் நடிகர்கள், நாடகமோ, சினிமாவோ! கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் வேறொருவர்! அவர் சொல்கிறபடிதான் நம்மால் செயல்பட முடியும். அப்போதுதான் சினிமாவோ நாடகமோ வெற்றியடையும்!
இந்த சினிமாவை தயாரித்து முடித்தபிறகுதான், அது தியேட்டரில் திரைக்கு வரும். அப்போது, அந்த நடிகரோ, கதாசிரியரோ, வசனகர்த்தாவோ, டைரக்டரோ, யார் நினைத்தாலும் தயாரித்து முடிந்துவிட்டதை மாற்ற முடியுமோ?
அப்படிப்பட்ட ஒரு சினிமாதான் நமது வாழ்க்கை. நாம் தியேட்டரில் அமர்ந்து, பாப்கார்ன் தின்றுகொண்டே, நாம் நடித்ததை பார்த்துக் கொண்டிருக்கிறோம்! புரிந்ததா?