பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று அங்கு மருத்துவர் வர தாமதம் ஆனதால் அதிக நேரம் உட்காரவும் இயலாமல் நிற்கவும் முடியாமல் காத்துக்கிடந்து ஒருவழியாக வீடு வந்து சேர இரவாகிப்போனது.முன் தினமே வெளிநாட்டில் இருக்கும் தன் கணவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்..நாளை பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்று.அதற்கு தாமதமாக 'ம்ம்' என்று பதில் வந்திருந்தது. மறுநாள் காலையில்தான் அவள் அதைப்பார்த்தாள். காலையில் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டேன் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத்தான் கிளம்பி இருந்தாள்.மருத்துவமனையில் காத்திருந்த நேரம் தன் அலைபேசியை பார்த்தவள்,அவள் அனுப்பிய சில நிமிடங்களிலேயே அவன் அதைப் படித்துவிட்டான் என்பதை தெரிந்துகொண்டாள்.ஆனால் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலோ அழைப்போ வரவில்லை.இது அவளுக்குப் பழகிப்போன ஒன்று தான்.
வீடு வந்து சேர்ந்ததும் மிகவும் களைப்பாக உணர்ந்தாள்.கால்கள் வலி தாங்கமுடியவில்லை.யாராவது அழுத்திவிட்டால் நன்றாக இருக்குமே என நினைத்துக்கொண்டே தன் கைகளாலேயே காலை சிறிதுநேரம் அழுத்திவிட்டுப் படுத்துக்கொண்டாள்.அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்..தோழிகள் சிலரின் குறுஞ்செய்தி மட்டுமே இருந்தது.கணவன் சற்று முன் ஆன்லைன் வந்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.இவளே மீண்டும் அனுப்பினாள்..
'இன்னைக்கு மருத்துவமனைக்கு போறேன்னு சொன்னேன்..எதுவுமே கேக்கல ? '
பதில் வந்தது.. 'வேலையா இருந்தேன்..டாக்டர் என்ன சொன்னாங்க ?'
'குழந்தை நல்லா இருக்குனு சொன்னாங்க' என குழந்தையின் நலனை மட்டும் தெரிவித்துவிட்டு அலைபேசியை வைத்துவிட்டு கண்களை துடைத்துக்கொன்டாள்.
தனிமை அவளை கொள்வது போல உணர்ந்தாள்.மிகவும் மன அழுத்தமாக இருந்தது.எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டாள்.அங்கு சட்டென விழுந்த எரி கல் அவள் பார்வையை வானின் பக்கம் திருப்பியது.வானில் நட்சத்திரங்களையும் முழு நிலவையும் பார்த்த அவளுக்கு ஒரு விஷயம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
அவள் மிகவும் நேசித்த இந்த இரவும்,இந்த நிலவும்,இந்த நட்சத்திரங்களும் இன்று அவளுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தரவில்லை.ஒரு காலத்தில் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியளித்த இந்த நிலவும் நட்சத்திரங்களும் இன்று எந்த குளிர்ச்சியும் தரவில்லை.ஒரு நாள் அவள் கண்களுக்கு விருந்தாக இருந்த இந்த நட்சத்திரங்களும் நிலவும் இன்று எந்த ஒரு இன்பமும் தரவில்லை.சாதாரணமாக மணலைப் பார்ப்பதுபோலவே வானமும் தெரிந்தது அன்று