"நல்லா இருக்காங்க அக்கா...."
அவனுக்கு அருந்த பழ ரசம் கொடுத்து விட்டு, அவனுடைய வியாபாரம் பற்றி விசாரித்தேன். தன்னுடைய வியாபாரம் நன்கு வளர்ந்து வருவதாக சந்தோஷமாக சொன்னவன், இன்னும் இரண்டு நாளில் வேலையாக கோயம்புத்தூர் போவதாக சொன்னான்.
"எப்ப பார் இப்படி ஊர் சுத்துற வேலை தானா? இனிமேல் இதை எல்லாம் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ சஞ்சய்...."
"இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் தான் அக்கா இப்படி எல்லாம்... அப்புறம் எல்லாம் சரியா போகும்... உங்களுக்கு ஏதாவது கோயம்புத்தூரில் இருந்து வேணுமா?"
"இல்லைடா... ஒன்னும் வேண்டாம்.. அப்புறம் வீட்டில இப்போ நிலைமை எப்படி? அம்மாக்கும் கலாக்கும் சண்டை எல்லாம் முடிஞ்சிருச்சா?"
"ப்ச்... அதை ஏன் கேட்குறீங்க அக்கா? அதெல்லாம் முடியுற விஷயமா என்ன? காலைல தூங்கி எழுந்தா ஆரம்பிக்கிற சண்டை ராத்திரி வரைக்கும் தொடர்ந்துக் கிட்டே தான் இருக்கு... வர வர ரொம்ப கொடுமையா இருக்கு அக்கா...செத்து போயிடலாமான்னு கூட தோணுது..."
எப்போதும் முகத்தில் மலர்ச்சியோடு, உதட்டில் புன்னகையோடும் பேசும் சஞ்சயின் பேச்சை கேட்டு நான் திகைத்து போனேன். "என்னடா பேச்சு இதெல்லாம்? உனக்கு இப்போ ஒரு குழந்தை இருக்கு ஞாபகம் வச்சுக்கோ..."
"அந்த குழந்தைக்காக தான் அக்கா நானும் பார்க்கிறேன்..." என்றான் அவன் சலிப்போடு.
சஞ்சயின் தாய்க்கும் அவன் மனைவி கலாவுக்கும் எப்போதும் பிரச்சனை தான். சஞ்சய்க்கு யார் உணவு பரிமாறுவது என்பதில் தொடங்கி அவன் வெளியில் கிளம்பும் போது யாரிடம் முதலில் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும் என்பது வரை ஒரே போட்டியும் பொறாமையும் தான். சிறிது நாளில் சரியாகி விடும் என்று நினைத்த விஷயம் சஞ்சய்க்கும் கலாக்கும் திருமணம் நடந்து மூன்று வருடம் ஆன பின்பும் தொடர்ந்து கொண்டே தான்