இருக்கிறது.
மனதில் எழுந்த கவலையை அடக்கி கொண்டு, சஞ்சயின் மனநிலையை மாற்ற, அவன் பிசினஸ் பற்றி மீண்டும் பேச்சை எடுத்தேன். அவன் பேச பேச அவன் செய்யும் தொழில் மீது அவனுக்கு இருந்த ஈடுபாடும், ஆர்வமும் புரிந்தது. அவனுடைய எதிர்கால கனவுகளை அவன் கண்கள் மின்ன விவரித்த போது, அவனின் ஆசைகள் எல்லாம் அவன் விருப்பம் போல் நிறைவேற்றி விடு இறைவா என மனதில் வேண்டிக் கொண்டேன்.
சஞ்சய் வந்து சென்ற இரண்டு நாட்களுக்கு பின், அன்றைய இரவு உணவுக்கு என்ன சமைக்கலாம் என மனதில் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, என் கைபேசி அலறியது. அரவிந்தின் எண் என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டு, "என்னங்க? என்ன விஷயம்?" என்றேன்.
"அம்மு... சஞ்சய் விபத்துல இறந்துட்டானாம்... இப்போ தான் அத்தை போன் செஞ்சாங்க.... நீ சீக்கிரம் கிளம்பி போ...."
அரவிந்த் சொன்ன விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் கண்கள் மின்ன அவன் பேசிய எதிர்கால கனவுகள் என் காதுகளில் மீண்டும் ஒலித்தது...
"அம்மு... அம்மு...." அரவிந்தின் குரல் பதற்றத்தோடு ஒலித்தது.
முயன்று என்னை சமாளித்துக் கொண்டு, "இது நிஜமா அரவிந்த்?" என்றேன்.
"ஆமாம்.... நீ கிளம்பு... நான் நித்திலாவை பார்த்துக்குறேன்..."
சரி என்று சொல்லி, என் கைபேசியை கீழே வைத்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் பெருகியது. சிறு வயது முதல் அக்கா அக்கா என என் பின்னே சுற்றி திரியும் சஞ்சயின் முகம் கண்ணில் வந்து நின்றது.
"செத்து போயிடலாம் போல இருக்கு அக்கா..."