இரண்டு நாட்களுக்கு முன் அவன் சொன்ன வார்த்தை மீண்டும் காதுகளில் ஒலித்தது. அவனின் அன்னையின் மீதும், மனைவியின் மீதும் கோபமும் வெறுப்பும் எழுந்தது. எப்படியோ என்னை சமாளித்துக் கொண்டு கிளம்பி, ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு சஞ்சயின் வீட்டை அடைந்தேன். என் பெற்றோரும் அங்கே தான இருந்தார்கள்.
"பாவம்மா... சின்ன வயசு... ரெண்டு காரும் நேருக்கு நேர் மோதி இருக்கு... மருத்துவமனை போன பிறகு கூட நினைவு இருந்திருக்கு... ஆனால் பாவம் காப்பாத்த முடியலை... அவங்க அப்பாவும் மாமாவும் பாடி வாங்க போயிருக்காங்க... ரெண்டு மூணு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க... போம்மா நீ போய் ஆறுதல் சொல்லு..." என்றார் என் தந்தை.
காதில் கேட்டதை மனதில் ஏற்றியபடி உள்ளே சென்றேன். உள்ளே கண்ட காட்சி என்னை இன்னமும் திகைக்க வைத்தது. ஒரு பக்கம் சஞ்சயின் தாய், தாமரை மற்றும் சில உறவினர்கள் அமர்ந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம், கலாவும் வேறு சில உறவினரும் அழுதுக் கொண்டிருந்தனர். இவர்கள் திருந்தவே மாட்டார்களா என மனதில் ஆதங்கம் எழுந்தது.
சஞ்சயின் தாயின் அருகில் சென்று அமர்ந்தேன். என்னை பார்த்த உடன் என் கைகளை பிடித்துக் கொண்டு அழுதார். "பார்த்தியாம்மா அமுதா என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு. எப்படி பொத்தி பொத்தி வளர்த்தேன். ஹாஸ்பிட்டல்ல இருந்து கூட போன் செய்து அம்மா எனக்கு ஒன்னும் இல்லைம்மா கவலை படாதீங்கன்னு சொன்னான்ம்மா. என்னால நம்ப முடியலையே...."
அவரின் பேச்சில் இருந்த உண்மை எனக்கும் தெரியும். கடை குட்டி பிள்ளை என சஞ்சய்க்கு வீட்டில் மிகுந்த செல்லம் தான். என் மனதை அடக்கி, அவரிடம் ஆறுதலாக பேசினேன். ஆனால் அவரின் அழுகையும் புலம்பலும் நிற்க வில்லை. என்னால் இயன்ற அளவிற்கு இதமாக பேசிவிட்டு, கலாவிடம் சென்றேன். என்னை பார்த்த உடன் கலாவின் அழுகை இன்னும் அதிகமாகியது.
"பார்த்தீங்களா அக்கா? அவர் என்னை இப்படி விட்டுட்டு போயிட்டாரு. என்னை மாதிரியே என் குழந்தைக்கும் அப்பா இல்லாமல் போயிடுச்சே. நான் சரியாகி சீக்கிரம் வந்திருவேன் கவலை