படாதேன்னு போன்ல சொன்னாரு. இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லையே.." அவளின் அழுகையில் கலங்கிய என் மனதை சிரமப்பட்டு அடக்கி கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன். கலா சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள், திருமணத்திற்கு பின் தன் கணவன் தான் தனக்கு தாய் தந்தை எல்லாம் என அவள் பல முறை என்னிடம் சொல்லியதுண்டு.
இறக்கும் தருவாயில் கூட, மனைவி, அன்னை இருவரையும் ஒன்றாக எண்ணி அவர்கள் மனம் வாடாதவாறு பேசிய சஞ்சயை நினைத்து மனம் வருந்தியது.
இரண்டு பக்கமும் அழுகையும் புலம்புலுமாய் இருக்க நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சில மணி நேரம் கழித்து சஞ்சயின் உடல் வந்து அடைந்தது. சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடித்து விட்டு, சஞ்சயின் உடல் இறுதி யாத்திரையை தொடங்கியது. அழுது புலம்பும், அவனின் தாயையும், மனைவியையும் கண்டு மனதில் வலித்தது. அவர்கள் இருவருக்கும் சஞ்சயின் மீது இருக்கும் அன்பு புரிந்தது. ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் அன்பை கொண்டே அவனை சித்திரவதை செய்ததை புரிந்துக் கொண்டிருப்பார்களா என தெரியவில்லை. இருவரும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்திருந்தால், இந்த சாவை தடுத்திருக்க முடியுமோ இல்லையோ, அவனின் இறுதி நாட்களை அவன் சந்தோஷமாக கழித்திருக்க முடிந்திருக்கும். அதிக அன்பும் கூட தவறு தானோ?
சஞ்சய் இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தது. அவனின் மரணம் ஏற்பட்ட விபத்து செய்தி தாள்களில் ஒரு சின்ன பத்தியாகி முடிந்து போயிருந்தது. வழக்கம் போல் பூங்காவில் என் மகளை விளையாட விட்டு விட்டு அமர்ந்திருந்தேன். இன்னமும் மனதில் பெரிய பாரம் அழுத்திக் கொண்டிருந்தது.
"ஹேய் ஆன்ட்டி" என்று கொஞ்சியபடி, கோமதி என் அருகில் வந்து அமர்ந்தாள்.
இவ்வளவு நேரம் விளையாடி கொண்டிருந்த விளையாட்டை மறந்து விட்டு நித்திலாவும் ஓடி வந்தாள்.
"இது என்னோட அம்மா... எழுந்திரு..." என்று தன் மழலை குரலில் மிரட்டிய என் மகளின் பேச்சை கேட்டு எப்போதும் எழும் மகிழ்ச்சி இன்று தோன்றவில்லை.