வணக்கம் டாக்டர்! நான் விஜய்.. இந்த மாட்டிற்கு எல்லாம் போடும் ஊசியும் உங்களுக்குப் போடத் தெரியும் தானே..இவளுக்கு ஒன்று போடுங்கள். உங்கள் முன்னாலேயே சாரை சைட் அடித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.
புவனா: ஹாஹஹா!!! நீங்கள் ரெண்டு பேரும் சோ கியூட் அண்ட் லைவ்லி மது - விஜய். ஆமாம் உங்கள் கதை என்னவாச்சு
மது : அது பாதியோடு நின்று போச்சு... நீங்கள் தான் ஒரு தகவலும் சொல்லவே இல்லையே!!
ஆதித்யா: சாரி மது!! அப்போ எங்களுக்கே ஒன்றும் புரியாத சூழல்.
விஜய்: பார்! எப்படி மனைவியை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்கிறார் என்று...
மது: உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பதற்கு எங்களுக்கு மட்டுமில்லை நம் வாசகர்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
விஜய்: கிட்ட தட்ட பத்து மாதம்!! என்ன நடந்தது.. எப்படி இந்த மாற்றம்.. சொல்கிறீர்களா!!! எங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.
மது: ஆதித்யா சார். அப்படியே ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கிக் கொடுங்க. சாப்பிட்டுகிட்டே கேட்போம்
விஜய்: மானத்தை வாங்காதே!
ஆதித்யா: அவங்களை ஏன் திட்டுகிறீர்கள்.ரொம்ப இயல்பா இருக்காங்க. ஐ லைக் தட் .வாங்க நாம் அந்த காபி ஷாப்பில் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்..
ஆதித்யா புகழ்ந்தவுடன் மது அலைகளுக்குப் போட்டியாக துள்ளி குதித்துக் கொண்டிருக்க விஜய் அவளை இழுத்துக் கொண்டு காபி ஷாப் சென்றடைந்தனர்.
ஆதித்யா புவனா சொன்ன விரிவான கதையை உங்களுக்குச் சுருக்கமாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம் நாங்கள். இப்போது எல்லோரும் பின்னோக்கி ஜனவரி மாதம் செல்ல வேண்டும்.
"அம்மாவின் விருப்பம் ஆதி. புவனா என் மருமகளாக உன் மனைவியாக வர வேண்டும் என்று. என் விருப்பத்தை ஏற்பதும் ஏற்காததும் உன் இஷ்டம்" என்று ஆதியின் அம்மா சொல்ல ஆதி பணிந்து போனான்.
"சரி அம்மா . நான் கல்யாணம் செய்து கொள்கிறேன். உங்கள் மருமகளுக்கு என்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்னிடம் பேசச் சொல்லுங்கள். மற்றபடி எனக்கு அவளிடம் கேட்க ஒன்றும் இல்லை" என்று விட்டேறியாக மொழிந்தான் ஆதித்யா.
அதே சமயம் அங்கு புவனாவின் அப்பா," கண்ணுக் குட்டி அப்பா எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வேன் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா" என்று கேட்டார்.
"என்ன அப்பா இப்படி கேட்கிறீர்கள். உங்களையும் அம்மாவையும் தவிர என் நன்மை நாடுபவர் வேறு யார் இந்த உலகத்தில்" என்று அப்பாவை கட்டிக் கொண்டாள்.
"அப்பாவிற்காக சரி என்று சொல்லுடா. "
"சரி அப்பா.. எனக்கு உங்கள் மருமகனிடம் பேச ஏதும் இல்லை.. என்னிடம் ஏதேனும் பேச விருப்பம் இருந்தால் பேசட்டும்" என்று அலட்சியமாக சொன்னாள்.
திருமண நாளும் வானம் பூமழை தூவ அழகாய் விடிந்து இனிதே உறவினர் நண்பர் ஆசியுடன் மங்கலமாய் நடந்தேறியது.
"அம்மு" என்று புவனாவின் அம்மா அழைக்க "என்ன மா" என்றாள் மகள்.
"உனக்கு எங்கள் மேல் வருத்தம் ஏதும் இல்லையே" எனத் தாய் கலங்க " அம்மா, உங்கள் மேல் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக வாழ நீங்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்களே! அப்புறம் ஏனம்மா இந்த கலக்கம் உங்களுக்கு... உங்கள் பெண் சமத்தா இருப்பேன்" என்று உற்சாகமாக கூறினாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு வித உணர்வு புவனாவை திணற அடித்தது.
"நீ இன்னும் அந்தப் பையனை மனசில் நினைத்துக் கொண்டு இருக்கவில்லையே" தாய் கேட்க
" அம்மா! என்றோ இறந்து போன ஒன்றை எண்ணிக் கொண்டு காலம் முழுதும் அழுது கரைபவள் அல்ல உங்கள் மகள். அந்த வலி மறக்காது தான். ஆனால் அதுவே என்னை இன்னும் பலமானவளாக ஆக்கி இருக்கிறது. மேலும் ஊரறிய உங்கள் மருமகனின் கரம் பற்றி இறுதி வரை துணை வருவேன் என சத்தியம் செய்திருக்கிறேன் அம்மா. உங்கள் பெண் உயிருள்ளவரை அதை நிறைவேற்றுவாள்" என்று புவனா பதில் உரைக்க அவளின் அம்மா நிம்மதியாகப் புன்னகைத்தார்.
தன் தாயின் இந்த ஒரு புன்னகைக்கு எதை வேண்டுமானாலும் கொடுப்பவள் ஆயிற்றே புவனா.
அங்கு ஆதியிடம் அவனது தாயும் இதையே தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
"நீ இன்னும் பூஜா உன்னை விட்டு விட்டு சென்றதையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா கண்ணா" என்று அன்னை கேட்க
" அம்மா அந்த வடு நிச்சயம் மனதில் இருக்கிறது. நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. உலகறிய அக்னி சாட்சியாக தானமாக தன் மகளை அப்பா ( புவனாவின் அப்பா) என்னிடம் கொடுத்திருக்கிறார். இத்தனை நாள் பாசமாய் பிரியமாய் வளர்த்த மகளை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் அம்மா" என்று கூறிய மகனின் மொழிகளில் நிம்மதி அடைந்தார். ஆனால் ஆதியோ தனது மனதில் “எப்படி காப்பற்றப் போகிறோமோ” என்று கலங்கிக் கொண்டிருந்தான்.
மணநாள் இரவு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்பதை இருவரும் அறியவில்லையே.. ஆதித்யா தான் அந்த மௌனத் திரையை அகற்றினான்.
புவனா.. எதையுமே வெளிப்படையாக உண்மையாக பேசித் தான் எனக்குப் பழக்கம்.
"எனக்கும் நேர்மையாக இருப்பது தான் பிடித்தம்" என புவனா மறுமொழி கூற
"இந்த திருமண பந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை எனும் போதும் என் பெற்றோர் விருப்பத்திற்காகத் தான் உன்னை மணந்தேன். ஆனால் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவற மாட்டேன்" என ஆதித்யா கூற
ஆச்சரியத்தில் விழி விரித்த புவனா," சித்தார்த்.. இதையே தான் நானும் உன்னிடம் சாரி உங்களிடம் சொல்ல வந்தேன்" என்றாள்
"நீ வா என்றே இயல்பாக பேசு... அப்போது நாம் காலம் முழுதும் ஏன் முறைத்துக் கொண்டு வாழ வேண்டும்... நாளை என்ன நடக்கும் என்பதை விடுத்து இன்றைய தினத்தை மகிழ்ச்சியாக வாழலாமே" என்று ஆதித்யா கூற
"ஐ அக்ரி! ஒரு ரயில் பயணத்தில் கூடப் பயணிக்கும் பயணிகளோடு நட்போடு இருப்பதில்லையா. நாமும் அதே போல் ஒரு நல்ல நட்போடு அதே சமயம் மற்றவரின் பர்சனல் ஸ்பேசில் தலையிடாமல் வாழலாமே!" என்று ஒரு தீர்வை புவனா சொல்ல
" யு ஆர் ரைட். முடிந்த வரை உதவியாகவும் இருக்கலாம் நம் சுதந்திரம் பாதிக்காத வகையில்" என்று ஆதித்யா ஒத்துக் கொள்ள
இப்படித் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆனது.
மது : வாவ்! இண்டிரஸ்ட்டிங்... நட்பு எப்போது காதலாக கசிந்துருகியது.. ஐயோ! சீக்கிரம் சொல்லுங்களேன் எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை
விஜய்: ஏய்! அவரசக் குடுக்கை.. அதான் அவர்கள் எவ்வளவு அழகா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. நீ எதற்கு இப்படி பேக்கிரவுண்டில் கத்திக் கொண்டு இருக்கிற.
புவனா: சொல்கிறோம் மது..சொல்லாமல் எங்கே போகப் போகிறோம்..
"நீ என்னுடன் லாஸ் ஏஞ்சலஸ் வருவதினால் உன் பிராக்டிஸ் பாதிக்காதா" அதில் தொனித்த அக்கறை ஏனோ புவனாவின் மனதில் பதிய வில்லை.
"இல்லை சித்தார்த். நான் ஏற்கனவே கலிபோர்னியா யுனிவர்சிடியில் பெல்லொஷிப் செய்வதாகத் தான் இருந்தேன்.. அம்மாவிற்கு கிட்னி ஸ்டோன் பிரச்சனையால் அப்போது போக முடியவில்லை. இந்த ஜூன் சேர்ந்து விடலாம். அது வரை ரிசர்ச் பிராஜக்ட் செய்யலாம்" என்று உற்சாகமாக கூறியது ஆதிக்கு சந்தோஷம் அளித்தது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரம் காலைப் பொழுது, இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த புவனாவை எம் எஸ்ஸின் சுப்ரபாதம் அதை தொடர்ந்து இனிய வீணை மற்றும் வயலின் இசை இனிமையாக எழுப்பி விட்டது..
இந்த சித்தார்த்திற்கு இசையில் ஆர்வம் இருக்கும் போலவே.. நம்மை போல் என்று மெல்ல கிச்சனுக்குள் நுழையும் முன்னே மூக்கை துளைக்கும் மணம்.
"சித்தார்த்.. செம வாசனை.. பில்டர் காபியா..எனக்கு ஒரு கப் தரியா ப்ளீஸ்" எனக் குழந்தையாகக் கேட்டவளை வேடிக்கையாகப் பார்த்தான்.