மீண்டு(ம்) வந்தேன் மீட்க - வித்யாரிணி
This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
1974:
காரிருள் சூழ்ந்த வெளி... காற்று தென்றலாய் இல்லாமல் ஆக்ரோஷமாய் தன் வேகத்தை வெளிபடுத்தும் இரவு.... நிலவும் சூழ்நிலைக்கு பயந்து தன்னை மறைத்து கொண்டதோ! மையிருட்டு.....
தூரத்தே நால்வர் குழு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு தங்கள் வேலையை செய்ய, “அவன்” மேற்பார்வை இடுகிறான்.அவர்கள் தங்கள் கையில் உள்ள மண்வெட்டியை வைத்து மணலை தோண்ட... காற்று முழு வீச்சில் சீற, தூரத்தே ஓநாய்களின் கூக்குரல், சருகுகள் மிதிபடும் ஓசை. சட்டென வேலையை நிறுத்தி ஐவரும் சுற்றி சுற்றி பார்க்கின்றனர்.
முற்றிலும் நிசப்தம்....
2015:
“காமாட்சி! யாரும் இன்னும் கிளம்பலையா?” பரமு தாத்தா தன் மனைவியிடம் விசாரிக்க..
அதே நேரம் அவ்வீட்டின் வேறொரு அறையில் (ப்லோரல் லேஸ்) டிரஸில் குட்டி தேவதையாக தயாராகி கொண்டிருந்தாள் ஸ்ருதி, வேலை செய்யும் பெண்ணின் உதவியுடன். அதற்கு அடுத்த அறையில், அதீத வேலைபாடுகள் கொண்ட ஜார்ஜெட் புடவைக்கு ஏற்ற வைர நகைகளை கொண்டு பொருத்தமாக தயாராகி வந்த லீலா அங்கு சோபாவில் தன் தொழில் நண்பர் ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருந்த தன் கணவர் சரவணனை கிளம்ப துரித படுத்தினார்.
பரமு தாத்தாவின் குரலுக்கு பதிலில்லாமல் போகவும், தாத்தா திரும்பி பாட்டியை பார்க்க, அவரோ பூஜையறையில் தீவிரமாக முறையிடு வைத்துக் கொண்டிருந்தார் தங்களின் குடும்பத்திற்காக என்றும் போல் இன்றும்.
பூஜை முடிந்து தீபாராதனை காட்ட, திடீரென்று விளக்கு அணைந்து, ஆணியில் மாட்டியிருந்த பெருமாளின் படம் கீழே விழுந்து சிதறியது!....
1974:
நால்வரும் அச்சதுடன் தங்களுக்குள் பார்த்து கொண்டனர். “அவனும்” சுற்றும் முற்றும் பார்க்க எந்த விதமான ஒலியும் இல்லை. எனவே இவர்களை வேலையை முடிக்க அவசரபடுத்தினான்.
அவர்கள் மீண்டும் மண்ணை அள்ளி குழியை மூட மீண்டும் காற்று, ஆனால் இம்முறை புயலின் சீற்றத்தோடு வீச இவர்கள் கையில் வைத்திருந்த சிறு விளக்கும் தன் ஒளியை நிறுத்தி அட்டகாசம் செய்தது. “அவன்” தன்னுடைய பொறுமையை இழக்க துவங்கினான். இப்பொழுது நடுநிசி நாய்களின் கூக்குரல் நெருங்கியது. மேலும் சருகுகளின் ஒலி அதிகரித்ததோடு மட்டும் அல்லாது இவர்களையும் சூழ்ந்தது. அந்த இரவு குளிரிலும் நால்வரும் வேர்வையில் குளித்தனர்.
திடீரென்று !....
2015:
காமாட்சி பாட்டி அதிர்ச்சியில் சமைந்து நிற்க, பரமு அவரை நெருங்கி என்னவென்று விசாரிக்க, அதிர்ச்சி விலகாமல் தன் கையில் இருந்ததீபாராதனை தட்டை பார்த்து நடந்ததை கூறினார்.
“இதுகெல்லாமா இப்படி பயப்படுவ? காத்து அடிச்சு இருக்கும், போய் கிளம்பற வழிய பாரு” என்றார் கணவர்.
“இல்லைங்க எனக்கு என்னவோ நடக்க போகுதுன்னு தோணுது. காலைல இருந்து எனக்கு உறுத்திட்டே இருந்துதுங்க, இப்பவும் இப்படி நடக்குது.” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே,
“ என்னமா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என கேட்டு கொண்டே சரவணன் தன் மனைவியுடன் வந்தார்.
“ஒண்ணுமில்லைப்பா இவ தீபாராதனை காட்டும் போது தீபம் அணைஞ்சு போச்சு, சாமி படம் கீழ விழுந்துடுச்சு.”
“அம்மா! என்னம்மா இது?” என சங்கடமாக கேட்டு கொண்டே தன் மனைவியை பார்க்க அவரோ முகமெல்லாம் எள்ளல் வழிந்தோட நின்றார்.
“உங்க யாருக்கும் நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனாலும் பரவாயில்லை. யாரும் வெளியே போக வேண்டாம்.” என்றார் காமாட்சி முடிவாக.
“அத்தே! நீங்க பயபடுறீங்கன்றதுக்காக அவ்ளோ பெரிய பங்ஷன்க்கு போகாம இருக்க முடியுமா?. பெரிய தொழிலதிபர்கள் எல்லாம் வர்றாங்க. நாம போகலைனா பிசினஸ் வட்டாரத்துல நக்கல் தான் பண்ணுவாங்க” என்றார் லீலா.
தன் மனதில் தோன்றிய பயத்தையும் மீறி குமுறல் வெளிப்பட்டது காமாட்சியிடம்.
இறுதியாக பரமு மற்றும் காமாட்சி வீட்டில் இருப்பதாகவும், சரவணன், லீலா, ஸ்ருதி விழாவை சிறப்பிப்பாதாகவும் முடிவு செய்ய பட்டது.
காமாட்சி மீண்டும் பூஜையறையை நோக்க அறையில் தோன்றிய அமானுஷ்யம் அவரை உலுக்கியது .