விளையாட்டை முடித்துக்கொண்டு அவரவர் வீடு செல்ல.. வீட்டுக்குத் திரும்பிய சங்கரனுக்கு அன்று அம்மா போட்ட பழைய சாதமும் வடு மாங்காயும் அமிர்தமாய் இனித்தது.தினமும் பழேதுதானா தோசையோ இட்லியோ போடமாட்டியா என்று தன்னிடம் வம்பு செய்யும் சங்கரன் அன்று வம்பு பண்ணாமல்சாப்பிட்டது கமலாம்பா- ளுக்கு அதிசயமாய் இருந்தது.பெரும்பாலும் காலை உணவு குழந்தைகளுக்கு அப்போதெல்லாம் பழைய சாதம்தான்.அப்படி சாப்பிட்டு வளர்ந்தவர்கள் இப்போது எழுபது வயதைத்தொட்டிருந்தாலும் ஓரளவு ஆரோகியமாகவே இருக்கிறார்கள்.
மாலை மணி ஐந்து.ஐந்து மணிக்கே சந்தியா வந்தனம் பண்ணும் பிள்ளையைப் பார்த்து ஆச்சரியமாய் இருந்தது அப்பு சாஸ்திகளுக்கு.என்னடா... மணி இன்னும் ஆறாகல அதுக்குள்ள சந்யாவந்தனம் பண்ற.
அப்பா வெளையாடப்பா....
என்னது வெளையாடவா..?இன்னும் படிச்சு கத்துக்கவேண்டிது நெறைய இருக்கு வெளயாடப் போறியா வெளையாட..ஒக்கார்ரா...சமகம் படிக்கச்சொன்னேனே படிச்சியா?
இல்லப்பா அதுவந்து...அதற்குமேல் எதுவும் அப்பாவிடம் சொல்ல முடியாமல் படிக்க உட்கார்ந்தான்.
இரண்டு பக்கத்திற்குமேல் படிக்கமுடியவில்லை..வாசலில் தோழர்களும் தோழிகளும் கூடி கத்துவதும் சத்தம்போடுவதும் கேட்டது.அவர்கள் விளையாடுவது போலீஸ் திருடன் விளையாட்டு என்று புரிந்தது.திடீரென ஐயோ.. அம்மா என்று யசோதா கத்துவதும் யசோதாக்கு கால்ல அடிபட்டுடுச்சு யசோதாக்கு கால்ல அடிப்பட்டுடுச்சு என்று ஆளாளுக்கு கத்துவதும் கேட்டது சங்கரனுக்கு.பட்டென்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வாசலுக்கு ஓடினான் சங்கரன்.
முனகியபடி யசோதா அமர்ந்திருக்க என்ன செய்வதென்று தெரியாமல் பசங்களெல்லாம் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தைத்தாண்டி எட்டிப் பார்த்த சங்கரனுக்கு யசோதாவின் வலது கால் கட்டைவிரல் நுனி அடிபட்டு மாங்காய்போல் பிளந்திருப்பதும் அதிலிருந்து கொடகொடவென ரத்தம் வெளிவருவதும் கண்ணில் பட்டது.திரும்பி வீட்டுக்குள் ஒடிய சங்கரன் ஒரு செம்பில்தண்ணீரும் சுண்ணாம்பு டப்பாவையும் கொண்டுவந்தான்.
யசோதா கால காமியேன்..
வலியால் அழுது கொண்டே காலை அவன்புரம் நீட்டினாள் யசோதா.இடது கையால் அவள் காலைப்பிடித்துக்கொண்டு செம்பிலிருந்த தண்ணியால் அடிபட்ட இடத்தைக் கழுவி சுண்ணாம்பைத் தடவினான் சங்கரன்.வலியோடு எரிச்சலும் சேர்ந்து கொள்ள
ஓ..வென்று கத்தினாள் யசோதா.ஒரு பதிமூன்று வயதுப் பையன் பத்து வயதுப் பெண்ணின் காலைத்தொட்டு மருந்துபோட்டால் அவர்களின் நட்பு வட்டத்தாலேயே கிண்டலடிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில்... அப்போது அது பெரிதாய் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆயிற்று காலம் யாருக்கும் காத்து நிற்காமல் ஓடியது.இப்போது சங்கரன் பள்ளி இறுதி வகுப்பு(அந்தக்காலத்தில் பதினோராம் வகுப்பு)அப்பாவின் விருப்பதிற்கேற்ப வேத பாடங்களையும் ஓரளவு நன்றாகவே முடித்திருந்தான்.அப்பாவோடு அவருக்கு உதவியாக நிறைய இடங்களுக்கு வைதீகம் செய்து வைக்க போய்ப்போய் இப்போது சங்கரன் தனியாளாகவே அவற்றைச் செய்து வைக்க முடிந்தவனானான்.
யசோதா இப்போது எட்டாம் வகுப்பு.அந்தக்காலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயதில்தான் பெண்குழந்தைகள் பெரியமனுஷி ஆவது பெரும்பாலும் நிகழ்வது வழக்கம்.காரணம் கண்டதைத் தின்று உடல் பருமன் ஏற்படும் உணவுப் பழக்கமோ குழந்தைகளின் மனதைக் கெடுத்து பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் சாதனங்களோ கிடையாது.அந்த காலசினிமாக்கள் கூட காதல் காட்சிகளையும் கணவன் கணவன் மனைவி உறவையும் கண்ணியமாகவே காட்டின.
யசோதாவுக்கும் அப்படியே நடந்தது.பெரிய மனுஷி ஆனபிறகு அவள் வீட்டைவிட்டு அதிகம் வெளியே வருவதில்லை.மாட்டு வண்டியில் பள்ளி சென்று மீண்டும் மாட்டு வண்டியிலேயே வீடு திரும்புவது வழக்கமாகி விட்டதால் யார் கண்களிலும் அதிகம் படுவதில்லை.
ஒரே தெருவில் இருந்தும் யசோதாவைப் பார்க்கமுடியாமல் இருப்பது சங்கரனுக்கு கொஞ்சம் தவிப்பாகத்தான் இருந்தது.இந்தத் தவிப்பு அவனுக்கு புதிதாக இருந்தது.இது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.ஒரு காலத்தில் ஒன்றாய் ஓடி விளையாடியவள் இப்போது ஒதுங்கி பார்க்கவோ பேசவோ கூட இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது
ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.அத்திப் பூத்தாற்போல் எப்போதாவது கண்ணில் படுவாள் அவள் பார்வை தன் மீது படாதா என்று மனம் ஏங்கும்.ம்ஹூம்..இவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் உள்ளே போய்விடுவாள்.ரொம்ப திமிர் பிடிச்சவதான் பாக்கராளபாரு..என்று கோபம் வரும்.அடுத்த நொடி..ஏய் லூஸுப் பயலே நீதான் அவள நினைக்கிற அவ ஒன்ன நெனைக்கிறாளா என்ன? ஒன்னப் பாக்கவும் பேசவும் என்று தன் பின் மண்டையில் தட்டிக்கொள்வான்.யசோதாவின் நினைவு அடிக்கடி தன்னை ஆட்டிப் படைப்பது ஏன்?இது என்ன உணர்வு/இதற்குப்பேர் என்ன?பதினாறு வயதில் எல்லோருக்கும் தோன்றக்கூடிய ஒரு உணர்வுதானா இது அவனுக்குப் புரியவில்லை.