“எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லை… நீங்களா எதையாவது நினைச்சிட்டு என்னை குறை சொல்லாதீங்க…” என்று எரிந்து விழுந்தவனாக உண்ணாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்…
நித்யா எத்தனை முயன்றும் தன் அண்ணனின் மனதிலிருப்பதை அறிய முடியவில்லை… சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென எல்லோரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஹரி…
கோயிலில் பூஜையை முடித்த பின் ஹரி தன் திருமணத்தைப் பற்றிய முக்கியமான முடிவுகளை விவரித்தான்…
“உங்களுக்கு மாதங்கியை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும்… நான் அவளை கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கிறேன்… நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க?”….
அவன் திருமணத்தைப் பற்றி பேசவும், அவன் பெற்றோருக்கும் நித்யாவுக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது…
“ரொம்ப சந்தோம் ஹரி.. உன்னோட முடிவு எங்களுக்கும் பிடிச்சிருக்கு… நானும் உங்க அம்மாவும் இப்போவே அந்த பொண்ணு வீட்டுக்குப் போய் கல்யாணத்தைப் பத்தி பேசறோம்..” என்றார் சுப்பிரமணி தன் மனைவியைப் பார்த்து புன்னகைத்தபடி..
“ஒரு சின்ன ரிக்வெஸ்ட் அப்பா… இந்த கல்யாணம் என் விருப்பம் போல இன்னைக்கு இங்கேயே நடக்கனும்… ஏன் எதுக்குன்னு மட்டும் கேட்க்காதீங்க… நம்ம குடும்பத்துகிட்டருந்து நான் எதையும் மறைச்சதில்லை… நேரம் வரும்போது நானே இதை பத்தி உங்களிடம் சொல்றேன்…”
ஹரியின் குணமும் செயலும் எப்போதும் சரியானவை என்பதை அறிந்த அவன் பெற்றோர்கள் அவனின் திருமணத்தை மன நிறைவோடு ஒப்பு கொண்டனர்….
“ஆனா இப்போவே கல்யாணம்னு பொண்ணு வீட்டில எப்படி சொல்றது ஹரி?” என்றார் வள்ளி…
“அதுக்கு அவசியமில்லை… அங்க பாருங்க அம்மா, அண்ணி வராங்க” என்று ஆர்பரித்தாள் நித்யா…
“அண்ணியை பிடிக்கலைன்னு சொல்லிட்டு பின்னாடியே கல்யாணத்துக்கு மாஸ்டர் ப்ளேன் செய்திருக்க… நடத்து நடத்து…” என்றபடி அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நித்யா…
கோயிலினுள் நுழைந்த மாதங்கி தன் அம்மாவோடு மூலவர் சன்னதியை நோக்கி நடந்தாள்… சிறிது நேரம் கழித்து வந்த அவளின் தந்தை ஹரியின் குடும்பத்திடம் வந்தார்…
ஹரியின் பெற்றோரிடம், “மாப்பிள்ளை எல்லாம் சொல்லியிருப்பார்… கல்யாணத்துக்கு எல்லாம் தயாராக இருக்கு, வாங்க போகலாம்”
அனைவரும் மூலவர் சன்னதியை அடைந்தனர்… ஹரியின் குடும்பத்தைக் கண்டவுடன் மாதங்கி அதிர்ச்சியுற்றாள்….
“இவங்க எதுக்காக இதே கோயிலுக்கு வந்திருக்காங்க?” என்று யோசித்தபடி தன் தாயைப் பார்த்தாள்… அவரோ இவளை கவனிக்காமல் ஹரியின் தாயிடம் பேச தொடங்கினார்…
மாதங்கிக்கு காலையிலிருந்து நடப்பதெல்லாம் குழப்பமாக இருந்தது… அவளின் தாய் அவளை பட்டுப் புடவை உடுத்துமாறு கட்டாயப்படுத்தியது… வழக்கமாக செல்லும் கோயிலுக்கு போகாது இங்கு வந்தது.. ஹரியின் குடும்பம் இங்கிருப்பது என ஏதோ புரிவது போல் இருந்தது…
அவள் யோசிப்பதை கவனித்த அவள் தந்தையோ அவசரமாக “வாங்க மாப்பிள்ளை… நேரமாகுது” எனவும்
ஹரி சட்டென மாதங்கியின் பக்கத்தில் நின்றான்… பூசாரி திருமாங்கல்யத்தை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தார்…
“இவன் ஏன் என் பக்கத்தில் வந்து நிற்கிறான்” என்று அவனைப் பார்த்திருந்த வேளையில் பூசாரியை கவனிக்கவில்லை மாதங்கி..
ஹரி மாதங்கியின் கழுத்தில் மங்கல நாணை கட்டினான்… அவள் இமைக்கு பொழுதில் இவையனைத்தும் நிகழ அதிர்ச்சியில் உறைந்தாள் மாதங்கி…
அந்த அலங்கரிக்கப்பட்ட அறையினுள் சென்றாள் மாதங்கி… அங்கே கட்டிலில் அமர்ந்திருந்தான் ஹரி..
“ஏன் இப்படி செய்தாய்.. நீ என் வீட்டுக்கு வந்திருந்த போதே சொன்னேனே எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைனு.. நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்னு எனக்கு இப்படியொரு வாழ் நாள் தண்டனை? என்று கதறினாள்…
அவளின் கேள்வியும் கதறலும் ஹரியின் உண்மைக் காதலையும் அவனையும் கொல்லாமல் கொன்றது… அங்கு இருக்க முடியாதவனாக மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்.. அவளின் கேள்வி காதினில் ரீங்காரமிட இரவு முழுவதும் தூங்காமல் கழித்தான்.. ஒரு முடிவிற்கு வந்தவனாக விடியற்காலை 4 மணியளவில் தன் அறைக்கு வந்தவன் மாதங்கியைப் பார்த்து நிலை குலைந்துப் போனான்.. அவளை கைகளில் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்…