2017 போட்டி சிறுகதை 54 - கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு - VJG
This is entry #54 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்
எழுத்தாளர் - VJG
ஹலோ சில்சீ ரீடர்ஸ், இன்னுமொரு படைப்பு, உங்களுடைய கருத்துக்களை தயவு செய்து பரிமாறுங்கள் ப்ளீஸ்...
இந்த என் கணவன் என் தோழன் டைட்டிலிருந்து, எழுதியிருக்கும் கதை 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு' , உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த கதையில் வரும் சூர்யா சஞ்சனா எனக்கு பிடிச்ச காரெக்டர்ஸ். இதில் வரும் பெயர், கதை எல்லாமே என் சொந்தக் கற்பனை கதை.....
கல்யாணமென்றால் எல்லா பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள், ஆனால் சஞ்சனாவோ தன் மனக் குமுறலை வெளியே சொல்ல முடியாமல், சொல்லாமல் இந்த கல்யாணத்தை எந்த வித உணர்வும் இல்லாமல் மனதை மறக்க வைத்து உட்கார்ந்திருக்கிறாள்.
பக்கத்திலிருந்த தன் கணவனாகப் போகிறவன் அவன் பெயர் கூட அவளுக்கு தெரியாது, அவனை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை, எதற்க்காக இந்த அவசர கல்யாணம் என்று அவளுக்குத் தெரியாது, தன் அண்ணியின் வேலை என்று அவளுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அவள்தான் என்றுமே எதிர்த்து பேசியோ, எதிர்த்து கேட்டோ பழக்கமில்லையே ...
இதோ, அவன் தன் கழுத்தில் தாலியை கட்டுகிறான், ஐயர், "உங்க கணவர் முகத்தை பாருங்கோ" என்று கூறும்போது, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், கண்ணை மூடிக் கொண்டாள், அவன் மனது வேதனை பட்டது, ஆனால் அவன் எதிர் பார்த்த ஒன்றுதான் .
கல்யாணம் முடிந்தது, அவளுடைய அண்ணன், அண்ணி இருவரும் அவளை தன் கணவனின் வீட்டில் விட்டு விட்டு சென்றனர், அவள் அண்ணன் அவளிடம் பேச வரும்போது அவள் அவனை விட்டு விலகிவிட்டாள்
இரவு வந்தது, அவள் மனதில் பயம் தொற்றிக் கொண்டது, "ஐயோ வாழ்நாள் முழுக்க அந்த மூஞ்சிய பார்க்கணுமா? “ என்று அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்
கதவு திறக்கும் ஓசை கேட்டது, அவள் மனது 'டக் டக் என்று அடித்துக் கொண்டது
அவள் திரும்பாமலே உட்கார்ந்திருந்தாள்... அவன் உள்ளே வந்து கதவை தாளிட்டு விட்டு, அவன் கொண்டு வந்த பால் செம்பை, கட்டிலின் அருகே இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவளருகில் வந்தான், அவளுக்கோ உடம்பு முழுவதும் நடுக்கம்.
"கவலப் படாதம்மா, நான் ஒன்னும் பண்ணப்போறதில்ல, நான் உன்ன ரொம்ப மதிக்கறேன். நான் ஒன்ன ஒன்னும் பண்ண மாட்டேன், நீ நடுங்க வேணாம் சஞ்சு, நீ என்னோட பொண்டாட்டி நீயா விருப்பப்பட்டு என்ன ஏத்துக்கற வர, நான் காத்திருப்பேன்ட்டேண்டா"
அவள் நிமிர்ந்துகூட அவனை பார்க்கவில்லை...
"என்னடா நீ என்ன நிமிர்ந்த்து கூட பாக்கலேன்னா பரவாயில்ல, பாக்கறமாதிரி என்னோட மூஞ்சி இல்லேன்னு எனக்கு தெரியும், ஆனா நாம இப்போ கணவன் மனைவி, என்னால முடிஞ்ச வர நான் உன்ன சந்தோஷமா வச்சிருப்பேன்"
அவளுக்கு தன் கட்டிலை விட்டு கொடுத்துவிட்டு அவன் தரையில் படுத்துக் கொண்டான், படுத்தவுடன் தூங்கிப் போன அவனைப் பார்த்த அவள் பொறாமை பட்டாள்
இவனால் எப்படி இவ்வளவு ஈஸியாக இருக்க முடியறது. படுத்தவுடன் தூங்கியும்விட்டான். “ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் தூங்கவேயில்லை, பொழுது விடிந்து விட்டது. அவன் எழுந்துக் கொள்ளுமுன் தான் எழுந்துக் கொள்ள வேண்டுமென்று, எழுந்துக் கொண்டாள். ஆனால், அவனோ இவள் கண்ணை மூடிக்கொண்டிருந்த நேரம் சத்தம் செய்யாமல் எழுந்து போய்விட்டான்
பாத்ரூமில் அவளுக்கு எல்லாம் எடுத்து வைத்திருந்தான்.
அவள் எழுந்து அவன் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள், அவன் அங்கு இல்லை. ‘ ஐயோ! அவன் எழுந்திருக்கறதுக்கு முன்னாடி எழுந்திருக்கனும்னு நினைச்சேனே, இப்ப என்ன பண்றது. ஐயோ என் டிரெஸ் எங்கேன்னு தெரியாதே, இப்ப என்ன பண்றது?’ என்று யோசித்து கொண்டிருந்தாள்….. அப்போது கதவு திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் சூர்யா
“ ஓ எழுந்திட்டியாம்மா, குட் மார்னிங்…..இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறதுதான? நா உன் பாக வக்க வந்தேன். இதோ பார் பாத்ரூம் இங்க இருக்கு” என்று பாத்ரூம் கதவை திறந்து காண்பித்தான்.
“ ஒனக்கு இன்னும் தூங்கனும்னா தூங்கு, இல்ல குளிக்கனும்னா குளிச்சுட்டு வெளிய வந்தா அம்மா இருப்பாங்க, நான் ஓட்டலுக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடறேன்…. நீ மேனேஜ் பண்ணிப்பியா?”
‘ம்’ என்று தலையாட்டினாள்
“ அப்படியே உன் போன் குடேன் என் நம்பர போட்டு தறேன்”
அவள் முழித்தாள்...பிறகு “ என்கிட்ட போனில்ல”
“உன்கிட்ட போனில்லையா?”
இல்லை என்று தலையாட்டினாள்.
“ சரிம்மா, நான் போய்ட்டு வரேன், நீ எது வேணும்னாலும் அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்க..” என்று கூறிவிட்டு, அவளை பார்த்துக் கொண்டிருந்தான்
அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது, அவள் தலையை குனிந்துக் கொண்டாள்
"சரி நான் வரேன்" என்று கிளம்பி விட்டான் ....அவள் மட மடவென்று எழுந்து பாத்ரூமிற்குள் சென்றாள், அங்கே அவளுக்காக எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது, அதுமட்டுமில்ல, அந்த இடத்தில் பேர் எழுதியும் வைத்திருந்தான் அவளுக்கு தெரியவேண்டுமென்று. அவள் பாகிலிருந்து தன் டிரெஸ்ஸை எடுத்து வந்தாள் பிறகு குளித்து ரெடியாகி தலையை நன்றாக துவட்டிக் கொண்டு தலையை லூசாக பின்னலிட்டு ரூமிலிருந்து வெளியே வந்தாள் உள்ளுக்குள் பயத்துடன் .
அவள் வெளியே வந்தவுடன் அவள் மாமியார் அவளுக்கு வேலையை ரெடியாக வைத்திருந்தார். "இந்தா இந்த காப்பியை குடிச்சுட்டு, இந்த காய்களை நறுக்கி கொடு"