" திடீருனு கண்ணு வலிடா “என்றாள் ஆராதனா.
கண்ணாடி வழியாக அவள் கண்களை பார்க்க முயன்று " ரொம்ப வலிக்குதா.." என்றான் விமல். அவள் அவனை பார்த்து " கொஞ்சமா " என்றாள்.
" அப்பப்பா... போதும்டா ... தொடச்சுக்கோ ...உள்ள போலாம் " என்று நக்கலாக சிரித்துக்கொண்டு அவனை திவ்யா உள்ளே அழைத்து சென்றாள்.
அனைவரும் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .
" எல்லாரையும் கூட்டிட்டு மேல போய்டுமா. நான் ஆராதனாவை கூட்டிட்டு இன்னொரு தடவ ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடுறேன் அவ ரொம்ப வலிக்குதுங்கிறா " என்று திவ்யாவிடம் சொல்லிவிட்டு சென்றார் ஆராதனாவின் அப்பா.
நாற்காலிகளை பெரிய வட்டமாக ஒன்று சேர்த்து போட்டுகொண்டு அரட்டைகளும் கூச்சலுமாய் இருந்தார்கள்.
" அடப்பாவிங்களா... ஒரு மணி நேரம் போயிட்டு வரதுக்குள்ள என்ன ஆட்டம் சத்தம் கீழ வரைக்கும் கேக்குதுடி. " என்று சிரித்த படி மேலே வந்தாள் ஆராதனா.
" விசேஷம்ன்ன அப்படி தான் இருக்கும்… என்னடா" என்றபடி ஆராதனா அப்பா மேலே வந்து "எல்லாரும் சாப்பிடலாம் கீழ வந்துடுங்கடா" என்று சொல்லிவிட்டு சென்றார்.
ஆராதனா நாற்காலியும் இலையும் எடுத்துக்கொண்டு மேலேயும் கீழேயுமாய் ஏறி இறங்க அவன் பார்வையோ அவள் மீதே இருந்தது.
"ஆராதனா " என்று அப்பா அழைக்க,
" வந்துட்டேன்ப்பா " என்று அவள் ஓட
"படியெல்லாம் தண்ணியா இருக்கு பாத்து போ. ஓடாத.." என்ற குரல் கேட்டு திரும்பினாள்.
"கண்ணாடி போட்டுருக்கல ஒழுங்கா தெரியாது. நாங்க எடுத்துட்டு வரோம் நீ கீழ பாத்து போ" என்றான் விமல்.
ஆராதனா அவனை பார்த்தபடி இறங்கிச்சென்றாள் .
" செம்ம சாப்பாடு செம்ம ஆட்டம் அங்கிள்." என்றாள் திவ்யா .
" நீங்களும் ஆராதனாவும் உட்காருங்க அங்கிள் நாங்க பரிமாறுறோம் நீங்க இன்னும் சாப்பிடலல" என்று விமலும் திவ்யாவும் கூறினார்கள்.
விமல் ஆராதனாவிற்கு பரிமாறுகையில் "இலைய பாத்து போடுடா " என்று சிலர் கூற நண்பர்களிடையே ஒருவரை ஒருவர் தனக்கு பிடித்தவரை வைத்து கேலி செய்து விளையாடிக்கொள்வதை பார்த்து ஆராதனாவின் அப்பா சிரித்துக்கொண்டே சாப்பிட்டார்.
அவருக்கு தெரியும் ஆராதனாக்கு திவ்யா எப்படியோ அப்படியே விமலும் என்று . அனைவரும் சென்ற பிறகு, நாளை ப்ராஜெக்ட்க்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்துவைத்துவிட்டோமா என்று சரி பார்த்துக்கொண்டு படுக்கச்சென்றாள் ஆராதனா.
கல்லூரியில் :
அன்று விமல் முகம் மிகவும் வாடி இருந்தது. எப்பவும் திவ்யாவை கண்டால் வம்பிழுத்து பேசும் அவன், அன்று அவள் கேட்டும் ஏதும் சொல்லவில்லை.
" ஏன் காலைல இருந்து சோகமா இருக்கான் அவன். என்னாச்சுனு கேட்டியா" என்றாள் ஆராதனா.
" தெரியல. எப்பவும் சிரிச்சிட்டே கலாட்டா பண்ணிட்டே இருப்பானா, டக்குனு அமைதியா சோகமா இருக்குறது அவன் மூஞ்சிக்கு செட் ஆகலைல. நானும் கேட்டுட்டே இருக்கேன் அவன் செஞ்சுட்டு இருக்கான்ல ஒரு 'கார் ரோபோ' ப்ரொஜெக்ட்டுக்காக, அதையே தான் பார்க்கிறானே தவிர நான் கத்துறது அவன் காதுல வாங்கவே இல்லை. நீ வேனா போய் கேளு " என்றாள் திவ்யா.
ஆராதனா அவனை நோக்கி நடந்து சென்றாள். அவள் தன்னிடம் நெருங்குவதைக் கண்டவுடன் தான் எந்த சிந்தனையில் இருந்தோம் என்பதையே மறந்து அவள் விழிகளை பார்த்த வண்ணம் நின்றான். அவள் அவன் சிரிப்பை கண்டபிறகு ஏதும் பேசாமல் புன்னகைத்தபடியே அவனை கடந்துச் சென்றாள். "வேடிக்கை பார்த்தது போதும்டா கார ஓட்டு " என்று திவ்யாவின் குரல் கேட்டு திரும்பி அவளை முறைத்தான்.
நாட்கள் அழகாய் கடந்தன.. அன்று ஆராதனா வீட்டில்..
" என் பிரண்ட போல யாரு மச்சான் " பாடல் கேட்க,
" அப்பா என் போன் அடிக்குது. நீங்க பேசுங்க நான் கை கழுவிட்டு வரேன் " என்றாள் ஆராதனா சமயலறையில் இருந்து. கையை துடைத்துக்கொண்டு
" அதுக்குள்ள வச்சுட்டாளா திவ்யா, என்ன சொன்னா " என்றாள்.
" பேசுனது விமல், அவனுக்கும் இன்னும் சில பேருக்கு மட்டும் வேல பெங்களூர்லயாம். இப்போ தான் மெயில் வந்துச்சு .நாளைக்கு உன்கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு வச்சுட்டான் " என்றார்.
" ஓ!! " என்றவள் வேறு ஏதும் சொல்லாமல் படுக்கச்சென்றாள். எப்பொழுதும் படுத்தவுடன் உறங்கும் அவளால் அன்று தூங்கமுடியவில்லை. நிறைய சிந்தனைகள்.