“வேலைக்கு எல்லாம் போகலை, ஒரே மாதிரி வொர்க் பார்க்கிறது எல்லாம் போர் அடிக்குது. வீட்டுல தான் இருக்கேன். பெயிண்டிங் பண்றேன், ஈவ்னிங் டியூஷன் எடுக்குறேன். அம்மா அப்பா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க, உன்னை பத்தி அப்பப்போ பேசுவாங்க. பிரமோத் அடிக்கடி அப்டேட் பண்ணிட்டே இருப்பான். அவன் கல்யாணத்துல எக்ஸ்பெட் பண்ணினேன் நீ வருவன்னு, பட் நீ தான் பிஸி, வரமுடியாது சொல்லிட்ட” என்று குறை கூறினாள் வைஷ்வதி.
“அதான் அவனுக்கு பையன் பிறக்கும் போது வந்து பார்த்தேனே” என்று சமாதான படுத்தினான்.
“அப்ப அங்க நான் இல்லையே, சரி அதை விடு, என்னை பத்தி எப்பயாவது நினைப்பியா, என்கிட்டே எப்பயாவது பேசணும்னு யோசிச்சுருக்கையா. இல்லை பெரிய பணக்காரன் ஆனப்பிறகு இவகிட்ட நாம ஏன் பழகனும்னு விட்டுடீங்களா? ஏன் என்கிட்ட ஒரு தடவை கூட பேசல? ஏன் கான்டாக்ட் கூட பண்ணலை?” என்று கோபம் கொண்டாள்.
அவளைப்பார்த்து பார்த்து புன்னகைத்தவனின் மனதில் இருந்தது அவள் மட்டுமே.
“எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் பழசை மறக்குறவன் நான் இல்லை. அது உனக்கு நல்லாவே தெரியும், அதுவும் உன்னை மறக்குறதுன்னா என்னால அது சத்தியமா முடியாது, நான் இப்படி இருக்குறதுக்கான முக்கியமான முதல் காரணம் நீ தான். நீ மட்டும் தான்” என்று அவளின் கண்களைப்பார்த்து கூறினான் விஷ்ணுவர்த்தன்.
முதல் நீ!!!
முடிவும் நீ!!!
அலர் நீ!!!
அகிலம் நீ!!!
அவளை மட்டுமே பார்த்து கூறியவனிடத்தில் மேலும் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக இருந்தாள். இருவரின் மனதிலும் பழைய ஞாபகங்கள் மட்டுமே இருந்தது. அதிலும் அவளின் மனம் எரியும் நெருப்பாய்!!!
இன்னும் தனக்கு அமைதி கிட்டவில்லை என்பது போல்!!!
அந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், அவனின் காதல் அவளிடம் தெரியப்படுத்தபடாமல் இருந்திருந்தால் அவளுக்கு நேர்ந்த துன்பத்தை தடுத்திருக்கலாம். விஷ்ணுவை பிடிக்காத சில மாணவர்கள் அவர்கள் மூவரின் நட்பை பற்றியும் கொச்சைப்படுத்தி முக்கியமாக வைஷ்வதியை கேலி சித்திரமாக பல இடங்களில் வரைந்து விட்டனர்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல இதில் சில மாணவிகளும் அடக்கம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு வைஷ்வதியால் ஆளாக நேரிட்டது. கல்லூரி நிர்வாகத்தினால் அவர்களை தனியாக கூப்பிட்டு கண்டிக்க மட்டுமே செய்ததது. காரணம் எல்லோரும் பெரிய இடத்து பிள்ளைகள்.
வைஷ்வதி மற்றும் பிரமோத்தை சேர்த்து கண்டித்த நிர்வாகம், விஷ்ணுவை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. அதை கண்டித்து பிரமோத் தன் தந்தையின் உதவியுடன் மீண்டும் கல்லூரியில் சேர்க்க வைத்தான். இப்படியே அவர்கள் கல்லூரி வாழ்க்கையும் முடிவடைந்தது, அவனின் நேசம் வைஷ்வதிக்கு தெரியாமலேயே!
சரியாக ஒரு வருடம் கழித்து கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மீண்டும் சந்திக்கும் பொழுது தன் காதலை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த விஷ்ணுவிற்கு பெரிய இடியாக விழுந்தது அன்று நேர்ந்த சம்பவம்.
கல்லூரியில் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மாணவன் என்று பட்டம் வாங்கினான் விஷ்ணு. வைஷ்வதி மற்றும் பிரமோத்திற்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது.
வைஷ்வதி விழா முடிந்து அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் விஷ்ணு அவளிடம் ஏதோ சொல்ல வருவதும் பின் அதை விடுத்து வேறு ஏதோ பேச்சை மாற்றுவது போல் தோன்றியது.
என்னவென்று கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்று கூறி மறுத்து விட்டான் விஷ்ணு. பிரமோத்தும் அவனை வித்தியாசமாக பார்த்தான்.
இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க ஒரு முடிவுடன் அவளை நெருங்கினான் விஷ்ணு.
அதே நேரம் அங்கு வேறொருவன் அவளை நெருங்கினான் கையில் அமிலத்துடன், அவன் வைஷ்வதியின் மேல் அதை வீசுவதற்கும், அவளை மட்டுமே கவனித்துக்கொண்டு இருந்த விஷ்ணு அவளின் கைப்பற்றி தன் புறம் இழுப்பதற்கும் சரியாக இருந்தது.
“ஐயோ... ஆ.... ஆ.... அம்மா” என்ற கதறலுடன் விஷ்ணுவின் மேல் சாய்ந்தாள் வைஷ்வதி. விஷ்ணுவே அப்பொழுது தான் அவளின் பின்னே இருந்தவனை கவனித்தான். அவன் வைஷ்வதியை காதலிப்பதாக கூறி கல்லூரி நாட்களில் அவளை தொந்தரவு செய்தவன். வைஷ்வதி மறுக்க அதை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானம் என்று கருதி முட்டாள் தனமாக இன்று செயல்பட்டான். அவளை விஷ்ணு இழுத்த வேகத்தில் அமிலம் அவளின் முதுகில் மற்றும் தலைமுடியில் பட்டு அதன் வீரியத்தை காட்டியது.