(Reading time: 15 - 30 minutes)

ட்டென்று பிரமோத் அவளுக்கு அமிலம் பட்ட இடங்களில் குளிர்ந்த நீரை கொட்டினான், அதன் வீரியத்தை குறைக்க. அவன் மேல் மயக்கம் அடைந்து விழுந்தவுடன் சிறிது நொடி ஸ்தம்பித்த விஷ்ணு, அவளை அள்ளி எடுத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனை நோக்கி விரைந்தான். 

வரும் வழியெல்லாம் ‘வலி வலி என்றும் விஷ்ணு விஷ்ணு என்றே புலம்பினாள். விஷ்ணுவிற்கு அவளை அப்படி கண்டு கண்ணீரே வந்துவிட்டது. தன் மடியில் அரைகுறை உணர்வுடன் இருந்தவளை அள்ளி அணைத்துக்கொண்டான்.

மருத்துவமனையில் அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட, இரண்டு நாட்கள் கழித்து அபாயக்கட்டத்தை தாண்டி கண் முழித்தாள்.

முழித்தவள் யாரிடமும் ஏதும் பேசவில்லை, அவளின் மேல் ஆசிட் வீசியவனை பார்க்க வேண்டும் என்று கூறினாள். அவளின் தாய் முடியாது என்று மறுக்க, தந்தையின் உதவியுடன் அவனை கண்டாள்.

வைஷ்வதியை பார்க்க முடியாமல் தலை குனிந்திருந்தவனிடம் “என்னை உனக்கு பிடிச்சிருக்கா, உனக்கு பிடிச்ச என்னை ஏன் காயப்படுத்துன, அவ்வளவு தான் உன் காதலா, படிக்குற வயசுல நீயும் நானும் சேர்ந்து காதலிச்சு என்ன செய்ய போறோம், எனக்கும் ஆள் இருக்கு, என்னையும் பாருன்னு பெருமை பேசவா, இல்ல உன்னோட ஆசைக்காக என்னை அடிமைப்படுத்தனும்ன்னு நினைச்சியா”,

“இப்ப தாண்டா கொஞ்ச வருசமா வெளிய வந்து சுதந்திரமா இருக்கோம், அதையும் காதலிக்குறேன், கல்யாணம் பண்றேன், பிடிக்காட்டி கொன்னுருவேன், ஆசிட் வீசுவேன்னு எங்களை மறுபடியும் திரும்ப உள்ளயே அடைச்சு வைக்க வைச்சுறாதிங்க டா”,

“காதலோட அருமை தெரியுமா? நேசிக்கிற பொண்ணை கண்ணுக்குள்ளையும் நெஞ்சுக்குள்ளையும் வச்சு பாதுக்காக்கனும், இது ஆணுக்கு மட்டுமில்லை, பொண்ணுக்கும் சேர்த்து தான். நீ வீசுன மாதிரி நானும் வீசவா, கண்டிப்பா உயிரோடவே இருந்துருக்க மாட்ட. ஏதோ எங்க அம்மா அப்பா பண்ணின புண்ணியம் விஷ்ணு என்னை காப்பாத்திட்டான்”.

“உண்மையான காதல் என்னைக்கும் காயப்படுத்தாது, எப்ப நீ என்னை பழி வாங்கணும் காயப்படுத்தணும்ன்னு நினைச்சயோ அப்பவே உன்கிட்ட இருந்தது காதல் இல்லை”.

“என்னை நேசிக்கிற ஒருத்தர் யாரையும் காயப்படுத்தக்கூடாது, காயப்படுத்தவும் மாட்டார். அவருக்கு இருக்குற பொறுமை, அன்பு, காதல் எதுவும் யார்கிட்டயும் இருக்காது. என்னை நேசிக்கிற ஒருத்தர் வாழ்க்கையை தைரியமா பார்க்க தெரிஞ்ச ஒருத்தராதான் இருப்பாரு. உன்னை மாதிரி உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட மாட்டார்” என்று கோபக்கேள்வியுடனும், ஆதங்கத்துடனும் ஆரம்பித்து அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் முடித்தாள்.

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த விஷ்ணுவிற்கு பிரம்மிப்பாக இருந்தது. விளையாட்டு குணத்துடன் இருக்கும் அவளின் மனது அவளுக்கு நேர்ந்த விஷயத்தால் இரும்பாக மாறி இருந்தது.

அன்று முடிவெடுத்தவன் தான், தன் வாழ்க்கையே அவள் தான் என்று. அன்று அவளிடம் விடைப்பெற்று சென்றவன். 9 வருடங்களுக்கு பிறகு வாழ்க்கையில் ஜெயித்து இன்று வந்து அவளை காண்கிறான். அதுவரை அவளை பார்க்க கூடாது என்ற முடிவுடனே இருந்தான்.

நிகழ்காலத்திற்கு வந்தவர்களின் மனதில் இன்னமும் ஏதோ சொல்ல முடியாத ஏக்கம்.

“சொடுக்கு போடுற நேரத்துல வருஷம் ஓடிருச்சு இல்ல” என்று பேச்சை மாற்றியவன், “இந்த பிரமோத் எங்க போனான்” என்று சுற்றும் முற்றும் தேடினான்.

“வழக்கம் போல தான், இத்தனை வருஷம் நீ என்னை பார்க்காததுனால, சார் உனக்கும் எனக்கும் ஏதோ மனஸ்தாபம்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டார். உன்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்லிட்டான். அப்பாகிட்டையும் என்னை வெளிய அனுப்ப கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டான். ஆஷா ஹெல்ப் பண்ணினா, சுவர் ஏறி குதிச்சு வந்துட்டேன். என் வில்லனே அவன் தான், இப்ப டாடி போன் பண்ணிருப்பாரு, என்னை காணோம்ன்னு, ஆஷா வந்து பிரமோத்தை கூட்டிட்டு போயிருப்பா. எப்படி என் மாஸ்டர் பிளான்” என்று தான் இங்கு வந்த கதையை கூறினாள் வைஷ்வதி.

அவளைப்பார்த்து ஆழ்ந்து புன்னகைத்தவன். “லைப்ல நெக்ஸ்ட் பிளான் என்ன வைச்சுருக்க?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்... ஆசிட் அட்டாகர்ஸ்க்கு ஒரு ஆர்கனைசேஸன் ஆரம்பிச்சு ஹெல்ப் பண்ணனும், இப்போதைக்கு அதுக்கு இனிசியல் வொர்க் நடக்குது” என்று கூறினாள் வைஷ்வதி.

ஆழ்ந்து பார்த்தவனின் பார்வையில் என்ன கண்டாளோ “என்கிட்டே 9 வருசத்துக்கு முன்னாடி ஏதோ சொல்ல அப்பவும் இதே மாதிரி தான் பார்த்த, இப்பவும் இதே மாதிரி தான் பார்க்குற, ஆனா அன்னைக்கு உன் கண்ணுல கொஞ்சம் பயம் இருந்தது இப்ப அது இல்ல” என்ன விஷயம் என்று கேட்டாள்.

“எனக்கும் ஒரு ப்ளான் இருக்கு வைஷு, நான் உருவாக்கி இருக்க Freedom welfare organisation க்கு எனக்கு ஒரு நல்ல லீடர் வேணும், என்கூட ஜாய்ன் பண்ணமுடியுமா, அதுக்கு பிறகு உன் organisation ஓட இதையும் சேர்த்து பாரு. என்ன நீ அங்க வந்த பிறகு உனக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை இருக்கும்” என்று கூறி நிறுத்தியவனை ஏறிட்டவள் “அந்த எக்ஸ்ட்ரா வேலை உன்னையும் சேர்த்து பார்த்துக்கிறது தான” என்று முடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.