கவிதை சிறுகதை - அன்புடை நெஞ்சம் - மது
இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே.
(மோதாசனார் குறுந்தொகை ; 229)
“இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும் இவள் இவனது தலை மயிரை இழுத்து ஓடவும் அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும் ஓயாமல் சிறிய சண்டையிட்டுக் கொள்வார்கள். இப்பொழுது மலரைப் பிணைத்த இரட்டை மாலையைப் போன்ற இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கிய ஊழ்வினையே நீ வாழ்க”
(இந்த குறுந்தொகைப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தம். முற்றிலும் இப்பாடலை தழுவி எழுதிய கவிதை சிறுகதை.
இதில் பெண்ணின் ஏழு பருவங்கள் என்று குறிப்பிடப்படும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் மற்றும் ஆணின் ஏழு பருவங்களான பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் இவற்றை கதையின் போக்கில் பயன்படுத்தி இருக்கிறேன்)
மெல்ல முற்றத்தை எட்டிப் பார்ப்பதும்
முகில் திரையில் ஒளிந்து கொள்வதும்
வானிலே கண்ணாமூச்சி ஆட்டம்
வெண்ணிலா மண்ணில் கொண்டாட்டம் (1)
அதோ பார்! வானத்தின் ராணி
ஆகாய ராஜ்ஜியத்தின் பேரரசி
நட்சத்திரம் அனைத்தும் செய்யும் சேவகம்
நிலத்திலும் அச்சட்டம் பொருத்தம் (2)
சொல்லில் மிளிரும் கர்வம்
செப்பியவள் பேதை பருவம்
வதனம் சந்திர பிம்பம்
வெண்ணிலா தானே அவளும் (3)
இரவின் காலம் ஆட்சி செய்யும்
இரவல் இன்றி சுயமாய் ஒளிரும்
தாரகைகள் விண்ணின் சுயம்பு மன்னர்கள்
தணலில் வெந்தும் புன்னகைக்கும் நட்சத்திரங்கள் (4)
அதோ பார்! வடக்கில் மின்னும்
அசையாது நிலைத்து நிற்கும்
மானிடருக்கு திசை காட்டும்
மறையாது மாறாது துருவம் (5)
எதிர்மொழியில் விரிந்த ஞானம்
எனினும் பாலன் தான் அவனும்
தீர்க்கமாய் மின்னும் நேத்திரம்
துருவ் தான் அவனது நாமமும் (6)