இரவு வானம் கரும்பலகை
இறைந்து கிடந்தது தாரகை
வடக்கு திசை குறி மேல் நோக்கியே
வரைந்தாள் விரல் நுனிகளில் காதல் தேக்கியே (39)
மாணவர்களே! இதுவே துருவ நட்சத்திரம்
முற்காலத்தில் திசைகாட்டும் இதன் சிறப்பம்சம்
நிலை மாறாதது இடம் பிறழாதது
நம்பிக்கை தரும் தவறாதது (40)
மறைந்திருந்தே ரசித்தான் தன் நிலவை
மறைமுகமாய் அவன் புகழ் பாடிய அவள் அழகை
தெரிவை மார்பில் தவழ்ந்த நட்சத்திர வைரம்
தலைவனைக் கண்டு கண்சிமிட்டியதை அவள் அறியாள் பாவம் (41)
பூட்டிக் கிடந்த பாட்டன் இல்லம்
பொலிவுடன் நின்றது அவள் கைவண்ணம்
பாதுகாவலர் கூறவே மனதோரம் நெகிழ்ந்தான்
பாவை வரவை பார்த்து முற்றத்தில் மறைந்திருந்தான் (42)
அந்தி சாய இரவின் போர்வை
ஆகாய வீதியில் நட்சத்திர வருகை (43)
முழுமதியே!!
மழலையில் அறியாமல் நான்
மன்னவனோடு ஊடல் கொண்டேன் தான் (44)
வடித்தான் அவன் அன்று உன்னையல்ல என்னை
வரைந்திருந்தானே மதிமுகத்தில் மைதீட்டிய கண்ணை (45)
கோபம் கொண்டேனே அன்று எனை தீட்டலாகுமோ
காதல் தாபத்தில் இன்று எனை தீண்டலாகாதோ (46)
தொடர்பு கொள்ளும் சூழலோ எனக்கில்லை
தாயின் மூலம் நலமறிந்தேன் அதுவே என் எல்லை (47)
கொள்ளை பொறாமையடி உன் மேல் எனக்கு
காளையை கண்டு ரசிக்கும் வரம் கிட்டியதே உனக்கு
கடவு சீட்டும் வேண்டாம் நீ கடல் தாண்டி செல்ல
குளிர்கதிர்களால் வருடுவாயோ அவன் வதனத்தை மெல்ல (48)
பயந்ததோ!!!
இவள் கோபம் பார்த்து
பரிதாபம் கொண்டதோ!!!
இவள் நிலையை உணர்ந்து (49)
சித்திரப் பாவையின் கண் பார்வைக்குள்
சிக்காமல் ஒளிந்தது மேகப் போர்வைக்குள் (50)
போகாதே அவனிடம் வான் நிலவே நில்
பார்க்காதே அவன் முகத்தை என் சொல் கேள் (51)
தாவிய நிலவை தடுக்க நினைத்தாள்
திரண்ட விழிநீருக்கு இமை அணையிட மறந்தாள் (52)