கரமொன்று கண் பொத்தி விழிநீர் துடைத்திட
கணப்பொழுது அச்சத்தில் தேகம் விதிர்த்திட
விலகி நின்று எதிரே நின்றவன் கண்டு விழி விரித்தாள்
வான் நிலவு வெளி வந்து பார்வைக்கு ஒளி கொடுத்தாள் (53)
என்ன இது என் கற்பனையோ!!
ஏ நிலவே!! இது உன் மாயையோ!! (54)
இல்லையடி பெண்ணே!!
உற்றுப் பார் அவன் மேல் சட்டையை
இதை அறியாயோ கண்ணே!!
உனது சித்திரத்தின் பிரதி பிம்பத்தை (55)
பேரின்னல் அலைகளில் அலட்சியமாய் நீந்தியவள்
பெருமகிழ்ச்சியை தாங்க இயலாது துவண்டாள் (56)
தாவி அணைத்தவன் கைகளில் சிறை வைத்தான்
தஞ்சம் புகுந்தவள் நெஞ்சத்தில் தலை சாய்த்தாள் (57)
அவள் விழியோரம் மீண்டும் ஈரத் தீற்றல்
அவன் துடைத்து விட்டான் இதழின் ஒற்றல்
உரிமை இல்லை உனக்கு என் கண்மணியை நனைக்க
உரிமம் பெற்ற என் உதடுகள் தரும் முத்தங்கள் இனிக்க (58)
கண்கவர் அழகிகள் பல ஆயிரம்
கடந்திருப்பாய் இத்தனை காலம்
காத்திருந்தாயோ என்னைப் போல் நீயும்
காரணம் உண்டோ மொழிந்தால் மனம் மகிழும் (59)
முத்திரை பதித்து விட்டாயே
முத்துப்பற்களால் அன்றே
என்னவன் என்று பலமாய் – நீ
என் சுவாசத்தின் உயிர்வளியாய் (60)
பதித்தாள் மீண்டும் அவன் கரங்களில் மென்மையாய்
பற்றினான் அவனும் கார்கூந்தலை இதமாய் (61)
அன்றைய நிகழ்வு மீண்டும் அரங்கேற்றம்
ஆனால் காட்சி அமைப்பில் பெருமாற்றம் (62)
சண்டையிட்டு அடித்துக் கொண்டவர்கள் தானோ
சொன்னால் இந்நாளில் ஆமோதிப்பவரும் உளரோ (63)
அன்னையரே வியக்கும் வண்ணம்
அன்புடை நெஞ்சம் தாம் கலந்த பந்தம் (64)
எதிரும் புதிரும் அன்று
முதுமகன் பேரிளம் பெண்
யாதுமாகி ஓர் உயிராய் இன்று (65)
துருவ நட்சத்திரமும் வான் நிலவும்
வாழ்த்து மழை பொழிந்ததோ
வாழிய மண்ணில் காதலின் ஆட்சி
துருவ நிலா அன்பின் சாட்சி (66)
தோழமைகளே!!! உங்கள் அனைவரையும் மீண்டும் ஓர் கவிதை சிறுகதையில் சந்திப்பதில் பேருவகை எனக்கு. மூன்று ஆண்டுகள் முன் விநாயகர் சதுர்த்தி நாளில் தான் என் முதல் கவிதை சிறுகதை சில்சியில் வெளியானது. அன்று முதல் சில்சீ அட்மின் மற்றும் நட்புக்கள் நல்கிய அன்பும் ஆதரவும் தான் ஒன்பதாவது கவிதை சிறுகதை வரை என்னை பயணிக்க வைத்திருக்கிறது. உனது கவிதை கதைகளை மிஸ் செய்கிறோம் என்று பிரியமான தோழமைகள் சொல்லும் போது இன்னும் எழுத வேண்டும் என்றே ஆசை. முயற்சிக்கிறேன்.
எப்படியேனும் எனது பிரிய தோழன் நான் செல்லமாய் வின்னு என்று அழைக்கும் விநாயகரின் பிறந்த நாள் பரிசாக ஓர் கவிதை கதை எழுதி விட வேண்டும் என்று உறுதி கொண்டு இதோ உங்கள் முன் “அன்புடை நெஞ்சம்”. உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். உலகில் அன்பும் அமைதியும் நலமும் வளமும் தழைத்தோங்க கணபதியை வேண்டுகிறேன்)
{kunena_discuss:785}