சொல்வதை, சொல்ல வேண்டியவரிடம் பக்குவமாக சொல்லி இருப்பாள். ஆனால் இப்போது??? இனி பெரியம்மா அவளை அனுப்பப்போவதில்லை என்பது உறுதி.
மெதுவாக டிக்கெட்டுகளுடன் வந்தாள் பெரியம்மாவின் அறைக்கு. அவர் அதை வாங்கி ஆராய
‘நான் எப்படி இருந்தாலும் உங்க கிட்டே சொல்லிட்டுதான் போயிருப்பேன் பெரியம்மா. உங்களை ஏமாத்தணும்னு நான் நினைக்கலை’
‘நீ அங்கே போறது சரியாய் வரும்னு எனக்கு தோணலை. விட்டுடு..’ நறுக்கு தெறித்த பதில் அவரிடத்திலிருந்து.
‘ஏன் பெரியம்மா ???’ அவள் மெதுவாக கேட்க
‘எவனோ ஒருத்தன் டிக்கெட் கொடுத்து வான்னு கூப்பிட்டா உடனே போயிடுவியா??? ஊர் கெட்டுக்கிடக்கு தெரியுமில்ல’ என்றார் பட்டென
‘நான் ஒரு விமானப்பணிபெண். தினமும் பல தரப்பட்ட மக்களை பார்க்கிறேன். என்னுடைய எல்லைகள் எப்போதுமே எனக்கு தெரியும்’ உதடுகள் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
‘நான் பத்திரமா போயிட்டு வந்திடுவேன் பெரியம்மா. ஹரிஷ் பத்தி எனக்கு தெரியும் தப்பானவன் இல்லை. ரெண்டு டிக்கெட் இருக்கு. வேணும்னா ஷங்கர் கூட வரட்டும்’ மெல்ல தொடர்ந்தவள் ‘எனக்கு ஆசையா இருக்கு பெரியம்மா ப்ளீஸ்..’ என கெஞ்சலாக முடிக்க
‘பச்..டைம் ஆச்சு போய் தூங்கு... பெரியம்மா எது சொன்னாலும் உன் நல்லதுக்குத்தான் இருக்கும்..’’
‘ப்ளீஸ் பெரியம்மா..’
‘நோ...’ முடிந்தது அங்கே.
ஒரு ஓவர் முடிந்திருக்க, இந்தியா ஐந்து ரன்கள் எடுத்திருக்க, அன்று அனுராதா வீட்டில் நடந்தது எதுவுமே அறியாமல் இங்கே மும்பையில் அவளுக்காக காத்திருந்தான் அவளவன்.
இரண்டாவது ஓவர். முதல் பந்து லாங் ஆனை நோக்கி பறந்தது பந்து, மேலே மேலே சென்று நேராக இறங்கியது ஓடி வந்த அந்த ஃபீல்டரின் கையில். சட்டென மைதானம் முழுவதும் குழுமி இருந்த இந்திய ரசிகர்களிடையே பரவியது ஒரு வித இறுக்கம். அங்கே இருந்த தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம்.
அடுத்து இரண்டு ஓவர்களில் வெகு சில ஓட்டங்கள் கிடைத்திருந்தன இந்தியாவுக்கு. அடுத்ததாக விழுந்தது இன்னொரு விக்கெட். ரசிகர்களின் உற்சாகம் கொஞ்சம் தளர்ந்தது. அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான் ஹரிஷ்.. இன்னொரு விக்கெட் சரிந்தால் இவன் களமிறங்க வேண்டும்.
கண்கள் சுழன்று இன்னொரு முறை அவளை தேடி தோற்றன. அறைக்குள் சென்று காலில் பேடை கட்டிக்கொண்டான். கையுறை, தலைக்கவசம் என எல்லாவற்றையும் அணிந்துக்கொண்டான்.
‘அவள் வேண்டாமென ஒதுக்கி வைத்தவன் நான். இன்று நானே அழைத்தவுடன் அவள் வந்துவிட வேண்டும் என்று நான் நினைப்பது என் பேராசைதானே??? அதே போல் யாரோ முகம் தெரியாத ஒருவன் அழைத்தவுடன் அவள் வீட்டில் மட்டும் அனுப்பி விடுவார்களா என்ன???. அவள் வருவது நடக்காத காரியம்தான்.’ இப்போது கொஞ்சம் வேறே மாதிரி யோசித்து மனது.
‘‘கண்டிப்பா நடக்கும். நீ வேணும்னா பாரு. இந்த தடவை ஹரிஷ் அவனை ப்ரூவ் பண்றானா இல்லையா பாரு!!!’ அவள் வார்த்தைகள் நினைவுக்கு வர கண்டிப்பா ப்ரூவ் பண்ணுவேன் அனும்மா தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
ஆறு ஓவர்கள் கடந்திருந்த நிலை. இருபது ரன்களை தொட்டிருந்தது இந்திய அணி. தயாராகி வந்தவனின் அருகில் வந்து நின்றான் நண்பன் ரகு.
‘என்னடா ???’ குரலில் ஏறி இருந்த சின்ன சந்தேகத்துடன் அவன் கேட்க
ரகுவை பார்த்து சொன்னான் தீர்கமான பார்வையுடன் சொன்னான் ‘வோர்ல்ட் கப் நமக்குத்தான்’
அவனது உறுதி ஒரு சந்தோஷ புன்னகையை தோற்றுவித்தது ரகுவின் இதழ்களில். அவன் சொல்லி முடிக்க பந்து சென்று விழுந்தது பௌண்டரியில்.
‘சிக்ஸர்’ ரசிகர்களிடம் மறுபடி உற்சாகம்.
ஹரிஷின் இப்போதைய அவளுக்கான தேடலும் தோல்வியிலேயே கொண்டு விட்டது. அவள் வர மாட்டாள் போலும். ஒரு ஆழ்ந்த மூச்சு அவனிடம்.
பத்து ஓவர்கள் முடிந்திருந்த நிலை. இந்தியாவின் ஸ்கோர் நாற்பத்திரண்டை தொட்டிருக்க ஓடி வந்தார் அந்த தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்.
‘அவள் வரவில்லை என்றால் என்ன??? கண்டிப்பாக இன்று அவள் மனம் என்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியின் முன்னால்தான் அமர்ந்திருப்பாள். எனக்காக வேண்டிக்கொண்டிருப்பாள். நான் விளையாடும் போது என்னை பார்த்துக்கொண்டுதான் இருப்பாள்’ யோசித்தவனின் இதழ்களில் சின்னதாய் புன்னகை தோன்ற
‘அவுட்!!!’ ஸ்டம்ப் கீழே விழுந்தது அங்கே. விருட்டென எழுந்தான் ஹரிஷ்.
ஒரு ஆழ்ந்த சுவாசம் எடுத்துக்கொண்டு அவன் நகர. அருகிருந்த ரகு அவன் முதுகை தட்டி வாழ்த்த, அவனது வழக்கமான விறு விறு நடையுடன் அவன் ஆட்டக்களத்தை நோக்கி நடக்க, அவன் நினைத்தது போல் அவள் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.