அவரது செல்ல மகனவன். பிறந்தது முதல் உயிருக்குள் வைத்து வளர்த்த மகன் வாழ்கையில் யார் பேச்சையும் கேளாமல், எதிலும் பிடிப்பில்லாமல், எதற்கும் கட்டுப்படாமல் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து துவண்டுப்போனார்.
அவனிடம் பேசுவதையே மொத்தமாக நிறுத்தினார் அவர். அண்ணனின் சமாதான பேச்சுக்களுக்கு எந்த பலனும் இல்லை
‘ஜெயிக்கட்டும். சொந்தக்காலிலே நின்னு ஜெயிச்சிட்டு வந்து என்கிட்டே பேசட்டும். அவன் என்ன வந்து பேசறது??? அப்போ நானே அவனை கட்டி அணைச்சு சந்தோஷமா பேசறேன்..’ சொல்லியே விட்டார் அவர்.
அன்று தொடங்கி இன்று வரை அவருடன் ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.
‘டி.வியில் பேட்டை சுழற்றிக்கொண்டிருந்தான் ஹரிஷ் மைதானத்தின் எல்லா மூலைக்கும் பறந்துக்கொண்டிருந்து பந்து. இருபத்தி எட்டு பந்துகளில் ஐம்பது ரன்கள் குவித்திருந்தான். இந்த தொடரில் அவன் எடுத்த மூன்றாவது அரை சதம்.
அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்துக்கொண்டிருக்க காமெராவை நோக்கி பேட்டை உயர்த்தி அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சான்றோன் என கேட்ட தந்தையாக கண்களின் ஓரத்தில் பூத்த கண்ணீரை ரகசியமாக துடைத்துக்கொண்டார் சுவாமிநாதன்.
அதே நேரத்தில்
அங்கே மைதானத்தில் மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்து ஆனந்த கூத்தாடிக்கொண்டிருந்தாள் அனுராதா. அவளையே மகிழ்ச்சி புன்னகையுடன் பார்த்திருந்தார் அந்த மனிதர். அவள் மனதை கூட படித்துக்கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அவர்தான் அவளை இங்கே அழைத்து வந்தவர். அவளது பெரியப்பா!!!
அன்று பெரியம்மாவிடம் டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு இவள் கெஞ்சிக்கொண்டிருக்க
‘நோ!!!’ அவர் ஒற்றை வார்த்தையில் முடித்திருந்த வேளையில் உள்ளே நுழைந்தார் அவள் பெரியப்பா.
பெரியப்பா!!! ஆனந்த கண்ணன்!!!
பெயருக்கு ஏற்றார் போல் உற்சாகத்தின் மறு உருவம் அவர் என சொல்ல வேண்டும். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்து ஒய்வு பெற்றவர். அதனால்தானோ என்னவோ இப்போதும் ஒரு ஊரில் இரண்டு நாளைக்கு மேல் இருக்கவே மாட்டார். எப்போது எங்கே இருப்பார் என யாருமே சொல்ல முடியாது. டி ஷர்டும் ஷார்ட்சுமாக எப்போதும் வளைய வருவார். அதை பற்றிக்கேட்டால்
‘போம்மா. வேலை பாக்குற காலத்திலேதான் எப்போதும் கோட் போட்டு சுத்தியாச்சு. இனிமேலாவது ஃப்ரீயா இருப்போம்’ என்பார் அவர்..
‘என்ன வேணுமாம் என் பொண்ணுக்கு??? எதுக்கு பெரியம்மா நோ சொல்லிட்டு இருக்கா???’ அவர் கேட்டபடியே வர
பெரியப்பா!!!’ சந்தோஷமாக அவர் அருகில் ஓடிச்சென்றாள் அனுராதா. அவர் வந்துவிட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்ந்தது என்று பொருள்.
அவர் வந்தவுடன் பெரியம்மாவின் உடல் மொழியில் கூட கொஞ்சம் மாற்றம் வந்தது நிஜம். இவரது அதிகாரம் பெரியப்பாவிடம் பல நேரங்களில் செல்லாது. அப்படியே அவர் கட்டுப்படுகிறார் என்றால் அதில் நிஜமாகவே நியாயம் இருக்கிறது என்று அர்த்தம்.
‘அது வந்து... வோர்ல்ட் கப் ஃபைனல் போகணுமாம் அவளுக்கு. எவனோ ஒருத்தன் டிக்கெட் அனுப்பி இருக்கான் இவளுக்கு. ரகசியமா..
‘ரகசியமா எல்லாம் இல்லை பெரியப்பா. நான் உங்ககிட்டே மறைக்கவெல்லாம் மாட்டேன். என் கூட படிச்ச பையன். இப்போ கிரிக்கெட் விளையாடறான்...’ குரலில் சேர்ந்துக்கொண்ட தவிப்புடன் அவள் அவசரமாக சொல்ல
‘காலம் இருக்கிற இருப்பிலே எவனையோ நம்பி இவ தனியா போறது எல்லாம் நல்லாவா இருக்கு’ இது பெரியம்மா
‘அதுதானே உனக்கு பிரச்சனை. நானும் கூட போனா சரிதானே??? என்றவர்
‘அது யாருமா அந்த பையன்??? என்றபடி முகத்தில் ஓடிய சுவாரஸ்ய ரேகைகளுடன் அவள் முகத்தை பார்த்தார் பெரியப்பா.
‘ஹரிஷ் சுவாமிநாதன்’ மெல்ல சொன்னாள் அனுராதா.
எப்போதுமே பெரியப்பாவின், உள்ளத்தில் இருப்பதை அவர் முகத்தை வைத்து படிக்கவே முடியாது. ஆனால் இந்த பெயரை கேட்டதும் அவர் முகத்தில் பனித்துளியில் பாதியிலும் பாதி அளவில் ஒரு மாற்றம் வந்தது போல் ஒரு உணர்வு அவளுக்கு.
சட்டென திரும்பினார் பெரியம்மாவின் பக்கம். அவரது பார்வை பெரியம்மாவிடம் என்ன சொல்லியது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. பெரியப்பாவின் கை மட்டும் பெரியம்மாவை நோக்கி நீள அடுத்த நொடி டிக்கெட்டுகள் அவர் கைக்கு வந்திருந்தன.
‘வோர்ல்ட் கப் ஃபைனல்க்கு டிக்கெட் வந்திருக்கு. இதை எவனாவது மிஸ் பண்ணுவானா??? நாம போவோம் அனு.. பெரியப்பா கூட வர்ரதிலே உனக்கு ஏதாவது ப்ராப்ளமா???’ அவர் இதமாய் கேட்க