(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 26 - தேவி

vizhikalile kadhal vizha

வெளியில் வேகமாக பேசிவிட்டாலும் தன் அப்பாவை அத்தனை எளிதில் எதிர்க்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றியது. வந்து இருந்தவர் பேசியதை பார்த்தால் எப்படியும் இன்னும் மூணு மாசத்துக்கு பொண்ணு வீட்லே பேச முடியாதுன்னு தோணுது. அதுக்குள்ளே எல்லாத்தையும் சரி பண்ண வேண்டுமே .. இவை எல்லாம் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருக்க, மலரிடம் இருந்து மெசேஜ் வந்தது.

அவளிடம் பேச என்னும்போது வாசலில் செந்தில், அவன் நண்பர்கள் எல்லாம் வந்திருக்க , அவர்களின் குரல் கேட்டு வெளியே வந்து விட்டான்.

செழியன் பெரியப்பா ,

“ஏலே.. செந்தில் .. நீயுமா இந்த பயலுகளோட சுத்திட்டு இருக்க.. வீட்லே பொஞ்சாதி காத்துட்டு இருப்பா ? நினைப்பு இருக்கா இல்லியா ? நேரங்காலத்தோட வீட்டுக்கு போய் சேருவே..”

“இதோ போறேன்.. சித்தப்பா.. ரொம்ப நாளு கழிச்சு எல்லோரும் பார்க்குறோம்.. கொஞ்ச நேரம் பேசிட்டு வீட்டுக்கு போய்டுறேன்..” என்றபடி வெளியே நழுவி விட்டான்.

செழியன் அவன் நண்பர்களை நோக்கி போகும்போது ,

“செழியா... “ என்று அவன் பெரியப்பா அழைக்க,

“சொல்லுங்க ... பெரியப்பா “ என

“எலேய்.. சித்த முன்னே என்னவோ கடுகு பொறியர மாதிரி எந்தம்பி கிட்ட பேசுன்னு சொல்லிட்டு உன்பாட்டுக்கு போயிட்ட... என்ன சொல்லணும்.. ? உங்க அப்பன் மனசுலே என்னவோ அந்த பொண்ண உனக்கு கட்டணும்னு தோணிச்சு... அது வேணாம்னா என்ன சங்கதின்னு சொல்லணும்லே..?”

“இப்போ எனக்கு என்ன அவசரம்னு அவர் என் கல்யாணத்துக்கு குதிக்கிறார்..? “

“உனக்கு என்ன இன்னும் பால்வாடிக்கு போற வயசோ? சொல்லபோனா உங்கப்பன் இதுவே கொஞ்சம் காலம் கடத்திட்டான்னு தான் சொல்லுவேன்.. இப்போ உனக்கு என்ன லே பிரச்சினை.. ? கல்யாணம் பண்ண பிடிக்கலையா? இல்ல இந்த பொண்ணு வேண்டாமா?”

செழியன் வேகமாக சிந்தித்தான் .. இப்போது சொல்லி விடலாமா... சொல்லி விட்டால் இந்த பிரச்சினை இதோடு முடிந்து விடுமே.. ஆனால் தன் அப்பாவை எண்ணி அவன் அடக்கி கொண்டான்.. அவர் செழியனின் விஷயத்தில் அவன் போக்கிற்கு விடுபவர்தான்.. அவன் படிப்பில் ஆரம்பித்து, வீட்டின் சில விஷயங்கள் வரை அவனின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பவர்தான்.

இந்த விஷயத்தில் தான் அவர் அவனை கேட்காமல் முடிவு எடுக்கும் வரை சென்று இருக்கிறார்.. அப்படி என்றால் அதற்கு பின்னால் என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். உறவுமுறையில் பெரியப்பா, சித்தப்பாக்களாக இருந்தாலும் அப்பாவோடு உடன் பிறந்தவர் கிடையாது.. பங்காளி முறையில் உள்ளவர்கள் தான். அதனால் இப்போது அவரை எதிர்ப்பது என்பது சரியான முறை கிடையாது.. மேலும் அங்கே மலரின் சூழ்நிலை தெரியவில்லை..

இதை எல்லாம் யோசித்து சற்று பொறுமையாய் இருக்க முடிவு செய்தான்.

“இப்போதைக்கு கல்யாணம் பத்தின பேச்சு வேணாம்.. என்னோட ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு முடியறவரை இதில் எல்லாம் என்னால் கவனம் செய்ய முடியாது.. இந்த நேரத்துலே பொண்ண பார்க்கவோ, பழகவோ நேரம் கொடுக்க  முடியாது. “

“தம்பி.. அவன்தான் இவ்ளோ தூரம் சொல்லுதானே.. நீயும் கொஞ்சம் விட்டு பிடி.. “

“நீங்க எல்லாம் சொல்லுரதாலே... அவங்க அடுத்து வாரப்ப , நான் மட்டும் வந்து அவங்க கிட்டே பேசுறேன்.. நீங்களும் கூட வாங்க.. மேற்கொண்டு உள்ளத இவன் சொல்லுத மாதிரி ஆறு மாசம் கழிச்சு வச்சிக்கிடலாம்..”

“எலேய்.. இப்போ உங்கப்பா சொல்லுறது சரியா தான் இருக்கு.. நீயும்  அவன அனுசரிச்சி போ...” என்று நாட்டமையை மாறி பஞ்சாயத்து செய்து முடிக்க, செழியனும் அரைகுறை தலை அசைப்போடு அங்கிருந்து நழுவி சென்று விட்டான்.

அவன் வெளியே சென்றதை பார்த்த அவன் தாய் பார்வதி

“ஏங்க .. வந்த புள்ள சாப்பிடாமலே போயிட்டானே.. வெள்ளனே பொங்கல் சாப்பிட்டு போனதோட சரி.. “

“ஏன்தா... இங்க ஊரு பட்ட பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கான் உமமவன்,.. அத என்னனு கேக்க பொழுது இல்லை.. சாப்பிடலயாம்.. கவலை.. இது என்ன அவன் தெரியாத ஊரா.. அதான் வந்து இறங்கின போதுலேர்ந்து .. அவன் கூட்டாளிகளோடுதானே சுத்திகிட்டு இருக்கான்.. போய் வேலையை பாரு..”

“ஆமாமா.. இவர் வீராப்பெல்லாம் எங்கிட்ட தான் செல்லும்.. புள்ள கிட்டே ஒன்னும் சாயாது.. அவம் மேலே உள்ள கோபத்தையும் இங்கதான் காமிக்க முடியும் “ என்று புலம்பிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

வெளியே சென்ற செழியனை சுற்றி வளைத்த அவன் நண்பர்கள்

“ஏன்னா லே வீட்டிலே உங்கூட்டு பஞ்சாயத்து கூடியிருக்கப்புலே இருக்கு .. ?”

“ஆமாம் .. என்னையும் சம்சார சாகரத்திலே குதிக்க வான்னு கூட்டிகிட்டு இருக்காங்க.. “

“வெரசா போய் குதிச்சிர வேண்டியது தானே..”

“ஏன் .. உங்களுக்கெல்லாம் இந்த வெறி.. நல்லாதானே இருந்தீங்க.. ஏதும் காத்து கருப்பு அடிச்சிட்டோ..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.