கல்யாணியின் உறுதியான வார்த்தைகள் கௌஷிக்கிற்கு தெம்பை கொடுத்திட, அவர் மேலும் தொடர்ந்தார்…
“இன்னைக்கு நிலைமைக்கு விளம்பரம் தான் எல்லாமே… அது இருந்தா போதும் ஜெயிச்சிடலாம்னு நிறைய பேர் நினைக்குறாங்க… ஆனா அது வெறும் கருவின்னு பலருக்கு புரியுறதில்லை… சுரேஷ் சாரும் அப்படி ஒரு மன நிலையில தான் இருக்குறார்… உன் திறமை மேல எனக்கு இருக்குற நம்பிக்கை அவருக்கும் இருக்கு… ஆனாலும் அவர் பார்த்த தோல்வி, அவரை தன்னோட வெற்றியை தக்க வைக்க முயற்சி செய்ய சொல்லுது… அதனால தான் இந்த பாட்டு எல்லாம் சேர்த்து உன்னை அட் செய்ய சொல்லுறார்…” என்றவர்,
“அவர் வந்து நேரமாச்சு… அவர்கிட்ட என்ன சொல்லணும்னு யோசிச்சிட்டியா…” என
கல்யாணி கூறியதும், தாயின் மடியில் இருந்து எழுந்து கொண்டவன்,
“சரிம்மா… என்னோட சொந்த விருப்பு வெறுப்புக்காக, வாழ்க்கையில தனக்கு ஒரு வெற்றியை தக்க வச்சிக்கணும்னு நினைக்குறவரோட நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலைம்மா… என் வெற்றி இந்த பாட்டால புதுசா கிடைக்கப்போறதில்லைன்னும் போது, ஏற்கனவே கிடைச்ச என் வெற்றியில அவரோட அந்த நம்பிக்கையான அந்த பாட்டுக்கு நான் இடம் கொடுக்குறேன்ம்மா…” என்றான் அவன் நிதானமாக அதே நேரத்தில் தீர்மானமாக….
சட்டென மகனின் வார்த்தைகளில் உவகை கொண்டு எழுந்திட்டவர்,
“கண்ணா….” என பாசத்தோடு அவனை அணைத்துக்கொண்டார் உடனேயே…
“இது தான் கௌஷிக்… இதுவே தன் மகனின் உள் மனம்… அடுத்தவர் துன்பம் காண சகியாதது… தான் வருத்தம் கொண்டாலும், தன்னை நம்பி, தன்னை சுற்றி இருப்பவர்கள் உள்ளம் நோக அவன் சம்மதித்திட மாட்டான் ஒருபோதும்…”
ஆனந்தமும், கண்ணீருமாய் அவர் மகனின் நெற்றி மீது முத்தமிட, அவனோ புன்னகையுடன் தாயினைப் பார்த்திட்டான்…
“நான் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்த அளவு சந்தோஷம் உங்க முகத்துல வந்திருக்காதில்லம்மா…”
“நீ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்துச்சுப்பா… கண்டிப்பா சுரேஷ் சாரை நினைச்சுன்னாலும் நீ சரி சொல்லுவேன்னு நினைச்சேன்… அதே மாதிரி நீயும் சம்மதிச்சிட்டப்பா… இது போதும்….”
அவர் பெருமிதமாய் அவனிடம் கூறிவிட்டு, அறையை விட்டு வெளியேற, தாயினைத் தொடர்ந்தது அவனின் விரக்தி புன்னகை…
அவன் கொண்ட காயங்கள் அவனிடம் இன்னும் மீதம் இருப்பதால், அவனால் அதனை தாண்டி வெளிவரமுடியவில்லை… அதனை தடுக்க முற்படுவோர் மீதும் அவன் சட்டென சினமும் கொண்டிட்டாலும், உண்மை உணர்ந்து அவன் அவர்களிடம் மன்னிப்பும் வேண்டிடுவான்… எனினும் சுற்றி இருப்பவர்களிடம் இசையை நெருங்க விட்டவன், இன்று தன்னையும் இசை வடிவத்தில் ஒருத்தி வருடிச் செல்ல, அதனை விலக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது திணறிக்கொண்டிருந்தான் அவன்…
“சுரேஷ் சார்… நீங்க அந்த அட் வேலையை ஆரம்பிங்க…”
கௌஷிக் சட்டென நேரே விஷயத்தைக் கூறிட, முகம் மலர்ந்து போனார் சுரேஷ்…
“கௌஷிக்… நிஜமாவா?... சொல்லுறீங்க?... ரொம்ப சந்தோஷம் கௌஷிக்…” என அவனின் கைப்பிடித்து அவர் குலுக்கிட, அவனும் புன்னகைத்துவிட்டு அவருக்கு எதிரில் அமர்ந்தான்…
“நான் இப்ப மியூசிக் டைரக்டர்கிட்ட பேசிட்டு தான் வரேன் கௌஷிக்…”
“ஓகே சார்…”
“பாட்டு ரெடி… சிங்கரும் ஆல்மோஸ்ட் ரெடி…”
“ஓகே சார்… நீங்களே பார்த்துக்கோங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் கிளம்புறேன்…”
அதற்கு மேல் அதனைப் பற்றி கேட்டுக்கொள்ள மனமில்லாது, நாகரிகமாக அவன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
“ஓகே… கௌஷிக்… நீங்க கிளம்புங்க… நானும் போய் ஆக வேண்டிய வேலையைப் பார்க்குறேன்…” என அவரும் கிளம்பிவிட, அவனும் தன் காரை எடுத்துக்கொண்டு அந்த மலைப்பாதையின் வளைவுகளில் பயணிக்க ஆரம்பித்தான்…
அவன் மனமும் அதனைப் போலவே, வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது…
எல்லையில்லாது அவன் பயணத்தினையும் தொடர்ந்திட நினைத்திட, அவன் நினைவுகளில் வந்து நின்றாள் அவள்…
அதே நேரம், அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கும் சாருவைத் தேடி வந்தான் தீபன்…
“என்னடி பண்ணுற இங்க?...”
கேட்டபடி அவளருகில் பொத்தென்று அவன் அமர, அவள் முறைத்தாள்…
“என்ன லுக்கு?...”
அவன் மிரட்டலாக கேட்டிட, அவள் எதுவுமே பேசவில்லை… சற்று நேரம் அவளது முகத்தையே உற்று பார்த்தவன்,
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… இன்னும் தொடர்ந்து ஒருவாரம் உன் கச்சேரியை புக் பண்ணியிருக்காங்க…”
“…..”
“ஹே… உன்கிட்ட தான் சொல்லுறேன்…”
“கேட்டுச்சு…”
“மேடமுக்கு இந்த ஒரு வார்த்தை பேசவே இவ்வளவு நேரம் ஆச்சா?..”
“அதெல்லாம் எதுவுமில்லடா… சின்ன யோசனை…”
“என்ன யோசனை?...” அவன் புருவம் சுருக்கி கேட்க, “சும்மா யோசனைடா… நீ வா…” என அவனையும் அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் அவள்…