ஆதாரத்தின் ஒரு பாதியை எரித்தாகிவிட்டது மீதியை என்ன செய்ய வேண்டும் என அவனின் மனம் திட்டமிட்டது. அதுவும் அவன் இன்றே செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால், அவனின் நிலையை யோசிக்க முடியவில்லை அரவிந்தால். மேலும் அதை பற்றி நினைக்க மனம் இல்லாமல் பக்கேட் நிறைய தண்ணீரை மொண்டு அதில் ஊற்றினான்.
அதன் பின்னர் அங்கு பொருட்கள் எரிக்கப்பட்டு இருப்பதை மறைக்கும் விதமாக நிறைய மணலை அள்ளிப் போட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் முன் யாரிடமோ வெகு நேரமாக தொலைபேசியில் பேசினான். அவன் செய்து முடிக்க வேண்டிய வேறு சில வேலைகளும் இருந்தது!
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தீபனுக்கு இவன் தான் அந்த கயவன் என புரிந்தது. மகேனுக்கும் ரூபனுக்கும் மாறி மாறி அழைத்தான். அவர்கள் இருவருமே தீபனின் அழைப்பை ஏற்கவில்லை. மாறனையும் வினோத்தையும் அவனை பின் தொடந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டான். மூன்று கார்களும் அரவிந்தனின் காரை இடைவெளி விட்டு பின்னால் சென்றனர்.
அரவிந்தின் கார் எங்கு செல்லுகின்றது தென யாராலும் யூகிக்க முடியவில்லை. அவர்கள் முடிந்த வரைக்கும் அவனுக்கு சந்தேகம் வராத அளவிற்கு பின் தொடர்ந்தனர். ஓரிடத்தில் சாலை ஓரத்தில் காரை நிறுத்தி எங்கும் செல்லாமல் சிறிது நேரம் அங்கேயே இருந்தான். பின் அவனது கார் ஓர் ஒற்றை அடி பாதையில் பயணிக்க, மற்றவர்கள் அவனை பின் தொடர முடியாமல் அங்கேயே இருந்தனர்.
கயவன் 1
“ஆதியா?” அந்த பேரை கேட்டு அதிர்ந்தான். தட்டு தடுமாறி எழுந்து ஒரு பக்கம் இழுத்துக் கொண்ட காலுடன் நொண்டிக்கொண்டு பின்னால் சென்றவன் சுவற்றில் முட்டிகொண்டான். பின்னர் பயத்துடனே “எனக்.. எனக்கு அப்படி யா.. யாரையும் தெரி.. யாது!” என்றான். அதை சொல்லுகையில் அவனின் குரலில் அப்படி ஒரு நடுக்கம். எதை கண்டு பயந்து நடுங்கிகிறான் இவன்.
“டேய்! யார் கிட்ட பொய் சொல்லுற? வெண்ணிலா அப்பார்ட்மெண்ட்ல உனக்கு ஒரு வீடு இருந்தது தானே?” – மகேன்
“இல்.. இல்ல..” எச்சிலை முழுங்கியவன் மீண்டும் “நீங்க.. நீங்க என்ன கேட்கறிங்கன்னு எனக்கு தெரியலை” அவனின் குரலில் பயம் மட்டுமே இருந்தது. அவன் சொல்லுவதை இவர்கள் நம்பவில்லை. இவன் எதையோ மறைக்கிறான். ஆதியின் பெயரை கேட்டதிலிருந்து இவனிடம் தெரியும் தடுமாற்றமும், சுவற்றில் பல்லியை போல் ஒட்டிக் கொண்டிருப்பதும் எல்லாம் அவன் பொய் சொல்லுகிறான் என சொல்லாமல் சொல்லியது அவர்களுக்கு.
“நீ சொல்லறது நம்பற மாதிரி இல்லையே” – ரூபன்
“நீ நம்பவில்லை என்றால் நான் என்ன பண்ணறது. யார் நீங்க? உங்களுக்கு எப்படி ஆதியை தெரியும்”? அவன் பயத்தில் ஏதோ வாயில் வந்ததை சொன்னான்.
“நாங்கள் ஆதியின் ப்ரண்ட்ஸ். ஆதி தான் எங்களுக்கு உன் அட்ரஸ்சை சொன்னான்.” மகேன் ஒரு பொய்யை உரைத்தான்.
“என்.. னது.. அவ.. அவ.. அவன் குடுத்தானா? எப்படி முடியும்? அதிர்ச்சியில் அவனால் சிந்திக்க முடியவில்லை. மகேன் சொன்ன பொய்யை ஜீரணிக்க முடியாமல் சிலையென அங்கேயே நின்றான்.
“செத்துட்டான்னு நீங்க நினைச்சு நடு ரோட்டுலவிட்டு போய்ட்டீங்க. அவனை ஹோஸ்ப்பிட்டலில் சேர்த்தவனையும் கடத்திட்டா யாருக்கும் ஏதும் தெரியாதுன்னு நினைச்சிட்டிங்களா? மகேன் அவனின் தடுமாற்றத்தை பயன்படுத்திக்கொண்டு மேலும் பல பொய்களை உண்மையை போல சொல்லிக்கொண்டிருந்தான்.
“என்ன சொல்லறே நீ? நாங்க யாரையும் கடத்தல!”. படபடப்பில் வேர்த்தது அவனுக்கு.
மகேன் அவனை உற்று பார்த்து “நான் உன்னை மட்டும் தானே சொன்னேன். ஆனா நீ நாங்கன்னு சொல்லறியே! சரி உன் பாட்னர் யாருன்னு சொல்லு? எதுக்கு இப்படி எல்லாம் செய்திங்க”? அடுத்த கேள்விகளை அடுக்க அவனுக்கு கண்ணை கட்டியது. என்ன சொல்லி தப்பித்துக் கொள்வது என யோசிக்கையில் அடுத்த குண்டை ரூபன் போட்டான்
“ஹாஸ்பிட்டலில் கோமாவிலிருந்த ஆதிக்கு நினைவு திரும்பிவிட்டது. நேற்று நைட் அவன் எங்களிடம் நடந்ததை சொன்னான்”. ஏனோ மகேன் சொன்னது பொய் என்றாலும் கலைவாணனின் குரலிலும் முகத்திலும் தெரிந்த பயமும் தப்பு செய்தவன் போல தெரிய அந்த பொய்யை உண்மையாக்க ரூபனும் உதவினான். அது மேலும் கலைவாணனை தடுமாற வைத்தது.
“இல்.. இல்ல.. நீங்க தேடி வந்த ஆள் நானில்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு தரம் சொன்னால் புரியாதா?” அவன் பயத்தில் இவர்களிடம் கத்தினான். அவனின் மனதில் ஆதி இன்னும் உயிருடன் இருக்கிறான் செய்தியே அதிர்ச்சியாக்கியது. இது எப்படி சாத்தியம். அந்த போலீஸ்காரனும் அரவிந்தும் ஆதி செத்துவிட்டான்னு சொன்னார்களே! இப்போ இவர்கள் சொல்லுவதை எப்படி நம்புவது?
Semma story, thrilling love ellame irunthuchu,, ennala climax la alama irukka mudiyala