மறுநாளே, இரு குடும்பத்து பெரியவரும் இன்னொரு ஜோசியரை சென்று பார்த்திட,
“பொருத்தமெல்லாம் பாந்தமாக பொருந்தியிருக்கிறது… அமோகமா வாழ்வாங்க… தாராளமா கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம் இரண்டு பேருக்கும்…” என்றார் அவரும் புன்னகையுடன்…
சந்தாவின் பெற்றோருக்கு தான் இருமனநிலையாக இருந்தது… இன்னும் இரண்டு ஜோசியரையும் பார்த்தனர்… அதிலும் பொருத்தம் இருக்கிறது என்று தான் வந்தது…
மேலும், அரவிந்த் மாதிரி நல்ல பையன் கிடைப்பதும் அரிது… மேலும், மனம் ஒத்துப்போனால் ஜாதகமும் எதற்கு?... என்ற எண்ணமும் அவருக்கு வந்த மாத்திரத்திலேயே, ஏனோ மனதிற்கு நெருடலாகவே இருந்தது…
விருப்பம் இல்லாத போதும், மகளிடம் ஓர் வார்த்தை கேட்டறிந்தனர் அவளின் விருப்பம் பற்றி…
யாருமே எதிர்பாராத வகையில் அவளின் பதிலும் இருந்திட, அதற்கு மேலும் மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்க விரும்பவில்லை இருவரும்…
“எனக்கு சம்மதம்….”
அவள் பதில் சொன்னதும் அவளின் தாய்க்கு சுருக்கென்றது…
இதுவரை பத்து ஜோசியரை பார்த்திருப்பார்கள்… அதில் ஒன்பது பேர் பொருத்தம் இருக்கிறது என்று சொன்னாலும், முதலில் பார்த்த அந்த ஜோசியர் சொன்னதே பெற்றவர்கள் இருவரின் செவியிலும் கேட்டுக்கொண்டே இருக்க,
மனதே இல்லாது, கடவுள் மீது பாரத்தை போட்டு திருமணத்தை நடத்தினர்…
படித்துக்கொண்டிருக்கிறாள் என்ற போதும், அவளுக்கு இப்போது திருமணம் நடந்திடவில்லை எனில் இருபத்தைந்து வயது தாண்டி தான் திருமணம் நடைபெறும் என்றும் அவளுக்கு ஜாதகத்தில் இருந்திட, பெற்றவர்களின் நிலையை கேட்டிடவா வேண்டும்… உரிய நேரத்தில் மகளுக்கு நல்லது நடந்திட வேண்டுமென அவர்களும் அத்திருமணத்தை நடத்தி வைத்தனர் கடவுளே தஞ்சமென…
அவளும் திருமணமாகி கணவன் வீட்டில் குடியேற, அவன் அவளிடத்தில் நெருங்க முற்படவில்லை…
அவளின் படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தவனுக்கு, மனைவியின் மீது ஏற்பட்ட காதலை மட்டும் மறைக்க தெரியவில்லை…
அவள் “என்னங்க…” என்று சத்தமாக அழைக்க, அப்பொழுது தான் நனவுலக்கு வந்தவன், அவளை பார்த்து சிரித்துக்கொண்டே கப்பினை கீழே வைக்க, அவள் முறைத்தாள்…
“இப்போ கூட ஆசையா பார்க்கமாட்டியா?...”
அவன் ஏக்கத்துடன் கேட்டிட, “உங்களுக்கு வேற வேலையே இல்லையா?...” என்ற ரீதியில் அவள் பார்த்திட,
“பொண்டாட்டியை லவ் பண்ணுறதை விட வேற என்ன வேலை இருக்கு எனக்கு?...” என பதிலடி கொடுத்தான் அவனும்…
பதிலுக்கு எதுவுமே சொல்லாது அவள் அகன்றிட, அவனுக்கு அவளின் நிலைமை புரிந்தது…
இன்னமும் அவள் தன்னை முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மை அவனுக்கு விளங்கிற்று…
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் அவன் தன் வேலையைப் பார்க்க்ச் சென்றிட, அவளும் தனது படிப்பினை தொடர்ந்தாள்…
ஆனால் எந்நேரத்திலும் மனைவியின் வைத்திருந்த காதலை அவன் மாற்றிக்கொள்ளவே இல்லை… அதனை ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான்…
கணவனின் அந்த அன்பு, அவளது புகுந்த வீட்டின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்த்து…
வடிவும் சரி… செல்வியும் சரி… அரவிந்திடமிருந்து அவளை பிரிக்கவே முயற்சி செய்தனர்…
அது அனைத்தும் தெரிந்தும், அவர்களைப் பற்றி அவனிடம் அவள் ஒருவார்த்தைக்கூட சொல்லிக்கொள்ளவில்லை…
அது ஒரு கட்டத்தில் அவனுக்கும் தெரியவர, மனைவியின் மீதிருந்த அன்பு மேலும் கூடியது அவனுக்கு…
இப்படியே சென்றிட்டால், யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே… அதனால் விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது…
சைட்டில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அரவிந்த் ஒருநாள் நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்திட,
அதனை அவள் அவளிடத்திலிருந்து மறைக்கவும் செய்திட, அவளுக்கும் அவ்வுண்மை சில நாட்களில் தெரிய வந்திற்று இன்னொருவரின் மூலம்…
ஒரு சில நாட்கள் கழித்து அவனுடன் பணிபுரியும் ஒருவர், திடீரென அவளுக்கு போன் செய்து அவனுக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூற, அவள் பதறிப்போய் அவனைப் பார்க்க வர,
“சைட்ல இருந்து கீழ விழுந்துட்டான்மா…”
உடன் பணிபுரிவர்கள் உண்மையைக்கூறிட, அவளுக்கு பகீரென்றது…
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்ம்மா… நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ…”
அவர்களும் அவனை அவளுடன் அனுப்பி வைத்திட, வீட்டிற்கு வந்த்தும் அவள் அவனிடம் எதுவுமே பேசவில்லை…
“ஹேய்… இப்போ என்ன நடந்துச்சுன்னு மூஞ்சியை தூக்கி வச்சிட்டிருக்குற?...”