கண்களிலிருந்து வழியும் வெறும் கண்ணீர் அல்ல அது! வலி மனம் கண்ட வலி! இத்தனை காலமாக தவறான ஒருவனை நண்பன் என்று எண்ணி ஏமாந்ததற்கான வலி! அவனை நம்பி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை அழிக்க முற்பட்டிருந்தாளே....அந்த முட்டாள் தனத்தை நினைத்து, எழுந்த வலி! தானொரு ஏமாளி, முட்டாள் என்று அறிந்ததினால் ஏற்பட்ட வலி!
‘நிச்சயாமா! எனக்கும் சரயூக்குமா? என்னோட மைதி செய்தாளா?’ தோழியின், தன் மீதான அக்கறையில், அத்தனை வலியிலும் மனம் நெகிழ்ந்தது. ஆனால் அதை அவன் இழந்துவிட்டானே!
உயர்வான நட்பையும் கொடுத்து, அவளின் குடும்பத்தையும் தனக்கு கொடுத்திருந்த தோழியின் நம்பிக்கையை கொன்ற தானொரு துரோகி. தன்னுடைய செயல் தான் இதற்கு காரணமென்று நினைத்தவனுக்கு தன் மேலேயே வெறுப்பு வந்தது.
“தப்பு பண்ணிட்ட... நான் தப்பு பண்ணிட்ட” என்று பிதற்றுபவளை காண சகிக்காமல்,
“மைதி! நான் தான் தப்பு பண்ணின....நீயில்ல மைதி!” என்றபடி அவளை நெருங்கினான்.
ஏதேதோ யோசித்திருந்தவள் ஆவேசமாக, “நீ சொன்னது மட்டும் தானா...இல்லை...இல்லை...அவளை வேறேதும் செய்துட்டியா?” என்றவளின் கண்கள் கனல் வீச, அவனை கொன்று விடும் ஆவேசத்தோடு சட்டையை பிடித்திருந்தாள்.
அவளின் கேள்வியில் மடிந்து போனான் ஜெய். ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் மிருகமாக தன்னை நினைத்துவிட்டாளே இவள். அவன் கண்களிலிருந்து இரு சொட்டு நீர் வழிந்தது.
தவறு செய்துவிட்டு குறுகி நின்றிருந்தவனோ, இப்போது நெஞ்சை நிமிர்த்தி நின்று, “என்னை பார்த்தா உனக்கு அப்படி தோனுதா மைதி?” என்ற அவனுடைய பதில் கேள்வி அவள் உயிர் வரை பாய்ந்தது.
அவன் உடல்மொழியும் வாய்மொழியும் சொல்லாமல் சொன்ன சேதியில் சற்று ஆசுவாசமடைந்து, அவன் சட்டையை விடுவித்தாள்.
மனதில் குமுறிக் கொண்டிருந்த வலியில் ஜெய் அமைதியாக நின்றிருக்க, மைத்ரீ தடதடவென படிகளில் இறங்கி சென்று விட்டாள்.
ஓரளவுக்கு தோழியின் செயலை கணித்திருந்தாலும் அவளுடைய வார்த்தைகள் அவன் இதயத்தை குத்தி கிழித்திருந்தது. பத்து வயதில் பாசமான பெற்றோரை இழந்தான். கைசேரும் முன்னே காதலை இழந்தான். தனக்கு எந்நேரமும் எல்லாமுமாக இருக்கும் என்று இவன் இருமாந்திருந்த நட்பையும் இன்று இழந்திவிட்டான். வாழ்க்கையே வெறுத்து போக நடை பிணமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதன் பிறகு மைத்ரீ அவனிடம் பேசுவதை நிறுத்தி கொண்டாள். தோழியே பேசாத போது அவள் வீட்டிற்கு செல்வதை தவிர்த்தான் ஜெய். ஆனால் வடிவிற்காகவும் மற்றவருக்காகவும் அவ்வப்போது இங்கு வருவதுண்டு. மைத்ரீக்கு சங்கடத்தை கொடுக்காது அவள் இல்லாத நேரங்களிலியே வருவான். காலம் தன் மாயையை செய்ய மைத்ரீயின் நிலையை ஜெய்யால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. மைத்ரீ மட்டும் தன்னிலையில் நிலைத்து நின்றாள்.
மைத்ரீயின் திருமணத்தின் போதும் நண்பர்களிடம் எந்த மாற்றமும் நேரவில்லை. வடிவு, சந்திரசேகர், ஆதர்ஷ், ப்ரியா என மொத்த குடும்பமும் இருவரிடமும் பேசினர். ஆனால் மைத்ரீயிடம் எதுவுமே எடுபடவில்லை.
பல நாட்களுக்கு பிறகு, தோழியை அவளின் புகுந்த வீட்டில் இன்று தான் பார்க்கிறான். அன்றை விட இன்றைக்கு அவளின் கோபம் கூடியிருந்ததே தவிர குறையவில்லை. எல்லோரையும் எல்லாவற்றையும் மாற்றும் காலம் இவளிடம் தோற்று போனதா! பதில் சொல்ல வேண்டியவள் பேசுகிறாள்,
“இந்த வீட்டோட மருமகள் சொல்ற, எங்க வீட்டு பொண்ணை கொடுக்க முடியாது”
அவளின் உறுதியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்த ஜெய்யை பார்த்த வடிவு,
“மைத்ரீ! என்ன பேசுறனு தெரிஞ்சுதா பேசுறியா?” என்றவரின் பார்வை அவசரமாக ஜெய்யை தொட்டு மீண்டது, மகனின் அமைதி அந்த தாயுள்ளத்தில் வேதனையை கூட்ட, எதிரிலிருப்பவள் மகளென்பதை மறந்து பேச வைத்தது.
“நீ என்னடி சொல்றது? இப்போ நான் சொல்ற, என் மகன் ஜெய்கும் சரயூக்கும் கல்யாணம் செய்து வைக்கதா போற...நீயும் அதை பார்க்கதா போற” என்று மகளிடம் ஆவேசமாக பேசியவர் சம்மந்தியிடம் திரும்பி,
“சொல்லுங்க சம்மந்தி... பொண்ண பெத்தவங்க, நீங்க இருக்கும் போது இவள் என்ன சொல்றது? கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்” என்று ரவிகுமார், சாரதாவை கேட்க...
இடைபுகுந்து ஏதோ சொல்ல வந்த மைத்ரீயை பார்த்து வடிவு பொங்க, ரவிகுமார் அவளை கையமர்த்திவிட்டு,
“எங்க மருமகளும் எங்களுக்கு மகள் தான். அவளோட முடிவுதா எங்களோட முடிவும்” என்றவரின் முடிவில், அங்கிருந்த அனைவரிடத்திலும் மயான அமைதி வந்தமர்ந்து கொண்டது.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}