அதற்கு பதிலாய் எதிரிலிருந்த சுவற்றில் இருந்த அவளது தந்தையின் பூ போட்ட படத்தைக் காட்டினார் அவளை நேருக்கு நேர் பார்க்காது..
தந்தையின் படத்தைப் பார்த்த சமுத்திரா சிலையாய் விக்கித்து படத்தையே வெறிக்கத் துவங்கினாள்..
சூரியன் நடுவானில் மையம் கொண்டு நிலப்பரப்பில் கொதிநிலையை ஏற்படுத்திக்கொண்டிருந்தான்..
அவனது கதிர்கள் நேராக தரண்யனின் நெஞ்சில் பாய்ந்ததோ என்னவோ..
அவன் மனமானது எரிந்து கொண்டிருந்தது வெற்றி தன்னை ட்ரெயினில் அவமான படுத்தியதை நினைத்து..
தன்னைத் தானே சமன் செய்ய அவனது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் காலை ஏழு மணிக்கு இறங்கியவன் மணி மதியம் ஒன்றைத் தொட்ட போதும் வெளியே வராமல் இருந்தான்..
இந்த பன்னிரெண்டு வயது சிறுவனுக்குள் ஏன் இந்த கோபம்..??
“தரண்.. மணி ஒன்று.. இப்போ மட்டும் நீ கிணற்றுக்குள்ளிருந்து மேலே வரல நான் என்ன பண்ணுவேன்னே எனக்குத் தெரியாது..”, என்ற வெற்றியின் குரல் கேட்டு மேலும் வெறுப்பேறியது தரணுக்கு..
“நீ ஸ்கூலில் மட்டும் தான் எனக்கு டீச்சர்.. இங்க இல்லை.. நீ சொல்றதை எல்லாம் என்னால கேட்க முடியாது..”, ஆங்காரமாக உரைத்த தரண்யன் உள் நீச்சல் அடிக்கத் துவங்கினான்..
அவன் தான் சொன்னால் கேட்கமாட்டான் என உணர்ந்த வெற்றி கிணற்றுக்குள் குதித்து ஒற்றைக் கையால் அவனைத் தூக்கிக்கொண்டு அவன் திமுருவதை அடக்கி வீட்டிற்குள் தூக்கி வந்தான்..
“விடு.. விடுடா என்னை..”, என்று கத்திய தரணின் குரல் கேட்டு சமையில் அறையில் இருந்து வெளியே வந்த அவனின் அம்மா கீதாஞ்சலி இருவரையும் கண்டு சிரிக்கத் துவங்கினாள்..
“அம்மா.. சிரிக்காதே.. உன் தம்பியை கீழே இறக்கிவிட சொல்லு.. அவன் எப்பப்பாரு என்னை டார்ச்சர் பண்றான்..”, என்றான் வெற்றியின் கையிலிருந்து திமிரியபடியே..
“டேய் வெற்றி.. என்னடா இது சின்னப்புள்ளை மாதிரி எப்போ பார்த்தாலும் அவனோட மல்லுக்கட்டிக்கிட்டு..?? இறக்கி விடு அவனை..”,என்று இருவரையும் பிரித்தவர் இருவருக்கும் துவட்ட துண்டை எடுத்துக் கொடுத்தார்..
தனது தாய் மாமன் வெற்றியை முறைத்துக் கொண்டே துண்டை வாங்கிய தரண்யன் இருவரிடமும் எதுவும் பேசாமல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு அமைதியாக அவனது அறைக்குள் தஞ்சம் அடைந்தான்..
தரண்யன் அந்த இடத்தை விட்டு அகன்றதும்,”என்னடா இது..?? மறுபடியும் என்ன சண்டை..??”,என்று கேட்டார் கீதாஞ்சலி..
அன்று கல்க்கட்டாவில் நடந்ததை சுருக்கமாக அவரிடம் விளக்கியவன்,”அவங்களும் மனுசங்க தான்க்கா.. அந்த நிமிஷம் அவங்களை அவன் ட்ரீட் பண்ண விதம் ரொம்ப தப்பு.. அதே மாதிரி நானும் அவனை அடிச்சிருக்க கூடாது..”, என்றான் வருத்தமாக..
“ஒன்னும் வருத்தபடாதே.. அவன்கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சுப்பான்..”,என்றார் அவனது தோளைத் தட்டி..
“நான் அவனை அடிச்சதுக்கு..??”, இப்பொழுது தனது அக்காவை தயக்கமாக ஏறிட்டான் வெற்றி..
“எங்களை விட உனக்கு அவன் மேல உரிமை இருக்கு மாப்பிளை.. நீ அவனுக்கு நல்லது தான் பண்ணுவன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு..”,என்றார் இவர்களின் உரையாடலை அவ்வளவு அமைதியாக பின்னிருந்து கேட்டுக் கொண்டிருந்த பரத்வாஜ் கீதாஞ்சலியின் கணவர் தரணின் தந்தை..
“தாங்க்ஸ் மாமா..”, என்று பரத்வாஜரிடம் நெகிழ்ந்த வெற்றி,”நான் என் மருமகனை சமானப்படுத்தனும்..”என்று தரணின் அறைக்கு விரைந்தான்..
“டேய் தரண்யா.. போதும்டா.. உன்னுது வயிறா இல்லை வண்ணான் தாளியா.. இப்படி உள்ள தள்ளற..??”, சற்று தள்ளாடித் தான் கேட்டான் வெற்றி..
இருக்காதா பின்ன..?? தனது மருமகன் பர்ஸை அல்லவா காலி செய்து கொண்டிருக்கிறான்..
“பசி மாமா.. பசி..”,நக்கலாக உரைத்துவிட்டு நெருப்புக்கோழி போல் ஜிகிர்தண்டா க்ளாசில் முகம் புதைத்துக்கொண்டான்..
“இரண்டு ஜிகிர்தண்டான்னு தானேடா சொன்ன..?? இப்போ என்னடான்னா அசால்ட்டா அஞ்ச உள்ள தள்ளிட்டு இருக்க..??”, புலம்பித்தள்ளினான் வெற்றி..
அவனது புலம்பலை காதில் வாங்காமல்,“நீ தானே மாமா வாங்கி தரேன்னு கூட்டிட்டு வந்த..?? இப்போ இப்படி சொல்ற..??”, என்று வெற்றியை முறைத்தவன் பேரரிடம்,”அண்ணே.. இன்னும் ஒன்னு கொண்டு வாங்க..”, என்றான்..
“அட சாமி..”,என்று தனது பர்ஸை தடவிக்கொண்ட வெற்றியின் கண்களில் கல்க்கட்டாவில் கண்ட இரு நங்கைகளும் சிக்கினர்..
எதையோ வளவளத்துக் கொண்டிருந்த தரண் தனது மாமனின் கவனம் தன்னிடம் இல்லையென உணர்ந்து அவனது கண்களின் திசையைத் தொடர்ந்தான்..