"என்னடா?"
"நான் உன் மடியில படுத்துக்குறேன். அப்போ தான் குழந்தை அட்மாஸ்பியர் கிடைக்கும். நீயும் நல்லா உருகி உருகி பாட்டு பாடுவ" என்று வசந்தின் மடியில் படுத்துக்கொண்டான் ஜான்.
"இப்போ பாடு மம்மி"
வசந்த் தலையில் அடித்துக்கொண்டான். அமேலியா சிரித்தாள்.
காலைப் பொழுது. எரிந்துகொண்டிருந்த நெருப்பு அணைந்து புகைந்து கொண்டிருந்தது. பறவைகளின் ஒலி, அலைகளின் ஓசையையும் மீறி வசந்தின் தூக்கத்தை வேறொரு சப்தம் அதிகமாய் கலைத்தது.
கண்களைத் திறந்து முதல் பார்வையை அமேலியாவின் மீது வீசினான். பிறகு, தன் கவனத்தை சப்தம் வந்த திசையை நோக்கி திருப்பினான். ஜான் ஜெஸிகாவிற்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
வசந்திற்கு அது ஆச்சர்யத்தை கொடுத்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு வானை நோக்கினான். இரவில் மண் தரையில் படுத்து உறங்கியதால் உடல் வலித்தது.
கார் மரத்தின் மேல் வேகமாய் மோதி வசந்தை திடுக்கிடசெய்தது. அந்த சப்தத்தில் அமேலியாவும் எழுந்து கொண்டாள். அவளின் முதல் பார்வை வசந்தின் மேல் விழுந்து பிறகு காரை நோக்கியது.
"என்ன ஜெஸ்ஸி இப்படி பண்ணுற" என்று ஜான் கத்தினான்.
வசந்த் கொட்டாவி விட்டபடி எழுந்தான். "காலையிலேயே சண்டையை ஆரம்பிச்சிட்டாங்களா. அவங்கள திருத்தவே முடியாது"
"சாரி ஜான்"
"நல்லா வேகமா இடிக்க வேண்டியது தான? இப்போ என்ன செய்யுற, அதோ இருக்கு பாரு அந்த மரத்துல வேகமா போய் மோதுற"
"என்ன ஆச்சு இவனுக்கு? ஏற்கனவே ஒடஞ்சு போன காரை மறுபடியும் உடைக்குறானே. தூங்கும்போது மெண்டல் ஆகிட்டானா?" என்றபடி காரையும் நம்பரையும் நோக்கியவன் அதிர்ச்சி அடைந்தான். காரை நிறுத்தும்படி காரின் பின்னால் ஓடினான்.
அதை கண்ணாடியில் கவனித்த ஜெஸிகா, "ஜான், வசந்த் ஏன் ஓடி வரான்?"
"இது அவனுடைய கார் ஆச்சே. அதான் காப்பாத்த ஓடி வரான்"
"அடப்பாவி"
"ஐயோ! அந்த மரத்தை ஏன் விட்டுட்ட? இடிக்க வேண்டியது தான?"
"எனக்கு டிரைவிங் சொல்லி கொடுக்க தானே காரை எடுத்த?"
"அந்த பேராசை எல்லாம் எனக்கில்லை ஜெஸ்ஸி. இந்த காரை காலி செய்ய உன்னை விட்டா யாரால முடியும்?"
கார் மரத்தில் மோதியது. வசந்த் அதிர்ச்சி அடைந்தான்.
"அப்பாடா! சரியான அடி" என்று மகிழ்ந்தான் ஜான்.
"டேய் வண்டியை நிறுத்துடா"
"பாவம், ஜான் வண்டியை நிறுத்திடலாம்" ஜெஸிகா கெஞ்சும் தொனியில் கூறினாள்.
"நிறுத்திடலாம். அதோ தெரியுது பாரு, அது உச்சில போய் நின்னு செங்குத்தா நிறுத்திடலாம்"
அதற்குள் வசந்த் காரை நெருங்கி கதவை திறந்தான். "என்ன இதெல்லாம்?"
ஜான் காரை விட்டு இறங்கினான். "டிரைவிங்"
"என் காரை எப்படி எடுத்த? அது தான் பஞ்சர் ஆச்சே"
"நம்ம ரெண்டு பேரோட காரும் ஒரே மாடல் தானே. டயர் மட்டும் கழட்டி மாட்டினேன். வண்டி ஓடுது"
"கடவுளே!"
"நான் ஒண்ணும் உன் காரை இடிக்கல. ஜெஸிகா தான் ஓட்டிட்டு போய் ஒவ்வொரு மரமா இடிச்சா"
"நோ வசந்த்! எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை"
திருடனுக்கு தேள் கொட்டியது போல் வசந்த் அமைதியானான்.
அந்த நேரத்தில் வேன் ஒன்று அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஆட்கள் இறங்கினார்கள். அவர்கள் யாரென்று புரிந்துகொள்ள முடியாமல் அனைவரும் குழம்பினார்கள்.
"யார் நீங்க?"
"இந்த வீட்டை சீரமைக்க வந்திருக்கோம் சார்"
"வாங்க வாங்க" என்று அவர்களை அழைத்துக்கொண்டு சேதமான பகுதிகளை காட்டினான் ஜான். "எல்லாமே சரி செஞ்சிடுவீங்கல்ல?"
"நிச்சயமா சார். இரண்டு நாளுல முடிச்சிடுவோம்"
"அவ்ளோ நாள் ஆகுமா? இரவுக்குள்ள முடிச்சிடுங்களேன்"
"அவங்க என்ன சமையல் செய்யவா வந்திருக்காங்க?" என்றான் வசந்த்.
"இரண்டு நாள் கூட பல வருஷம் தொலைவுல இருக்க போல தெரியுது"
வேலையாட்கள் துளியும் தாமதிக்காமல் தங்களின் வேலைகளை துவங்கினர். ஜெஸிகா வசந்திடம் வந்தாள்.