"சொல்லு ஜெஸ்ஸி"
"மறந்துட்டியா?"
"புரியல"
"மறச்சு வை"
"எதை சொல்லுற?"
"அங்க பாரு" என்று அமேலியா இருப்பதை சைகையால் விளக்கினாள் ஜெஸிகா.
"ஐயோ! மறந்துட்டேன்" என்று அமேலியாவை நோக்கி சென்றான். "அமேலியா வா" என்றழைத்தான்.
அவளுக்கு புரியவில்லை. பதற்றத்தில் அவள் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்ல எத்தனிக்கையில் கார் ஒன்று அங்கு வந்து நின்றது. உடனே, அமேலியாவை அருகில் இருந்த பெரிய மரத்தின் பின்னால் மறைத்து காரை நோக்கி ஓடினான். டைரக்டர் விஷ்வாவும் அவரது காதலியும் இறங்கினார்கள்.
"வாங்க சார்"
"என்ன வசந்த், கொஞ்ச நாளா உன்னை பாக்க முடியல. அன்னைக்கு எங்க போன?"
"எப்போ சார்?"
"புயல் வந்த அன்னைக்கு"
"அவசரமான வேலை. அதான் சார் உடனே கிளம்ப வேண்டியதா போச்சு"
"அப்படியென்ன வேலை?"
வசந்த் என்ன பதில் கூறுவதென்று திணறினான். அப்பொழுது மாடல் பெண்ணை பார்த்து திடீரென கதை ஒன்றை உருவாக்கினான் வசந்த்.
"மேடம் விஷயமா தான் சார் போனேன்"
டைரக்டர் விஷ்வா ஆச்சர்யத்தில் புருவங்களை உயர்த்தினார்.
"தெளிவா சொல்லு"
"மேடம் தானே ஓவியரை பாக்க விரும்புனாங்க. அதான் அவரை பாக்க போனேன்"
"ஓவியரை பாத்திங்களா?" மாடல் பெண் ஆர்வத்தோடு கேட்டாள்.
"ஆமா மேடம்"
"எப்போ இன்ட்ரோ கொடுக்க போறிங்க?"
"இன்னும் ரெண்டு நாளுல" என்றபடி அமேலியா பதுங்கி இருந்த மரத்தை நோக்கினான் வசந்த். மாடல் பெண்ணும் நோக்கினாள்.
"என்ன இருக்கு அங்க?"
"ஒண்ணும் இல்லை மேடம்"
"நிறைய வேலை இருக்கு வசந்த். இந்த வாரத்துக்குள்ள நாம ஷூட் பண்ணி முடிச்சிருக்கணும்"
"சரிங்க சார்"
"ஜெஸ்ஸி"
"சொல்லுங்க சார்"
"நீ இங்கயே இருந்து எல்லாத்தையும் பாத்துக்க"
"சார்..." ஜெஸிகா இழுத்தாள்.
"என்ன?"
"நான் இங்கயே தான் ரெண்டுநாளா இருக்கேன். உடம்பு வேற சரியில்ல"
"நோ நோ! எந்த காரணமும் சொல்லாம நீ உதவி செய்யுற. ப்ராஜெக்ட் முடிஞ்சதும் உனக்கு எவ்வளவு லீவு வேணுமோ எடுத்துக்க"
மரத்தின் பின்னால் மறைந்திருந்த அமேலியா மாடல் பெண்ணை நோக்கினாள். 'இவளை தானே நாம் வரைந்தோம்' என்று எண்ணியவள், 'இன்றும் அவள் அதே போல் ஆபாச ஆடை அணிந்திருக்கிறாளே' என்று முகம் சுழித்தாள்.
"ஹாய் சார்!" என்றபடி டைரக்டரை நோக்கி வந்தான் ஜான்.
"வசந்த், இவனை ஷூட்டிங் நடக்குற வரைக்கும் எங்கயாச்சும் போய் இருக்க சொல்லு"
"கோவப்படாதிங்க சார். நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன்" என்றான் ஜான்.
டைரக்டர் டென்ஷனோடு மூச்சை வெளியேற்றினார்.
"நிஜமா தான் சொல்லுறேன் சார். நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்" என்றபடி மாடல் பெண்ணை நோக்கினான் ஜான்.
அவள் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
பின்னர் எல்லோரும் வீட்டை நோக்கி செல்ல வசந்த் மட்டும் அமேலியாவை நோக்கி சென்று அவள் கையை பிடித்து அழைத்து கடற்கரையை நோக்கி சென்றான்.
"நீ இங்கேயே இரு" என்று சைகையில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அமேலியாவிற்கு அவன் மேல் கோபமாக இருந்தது. தன்னை பற்றி சிந்திக்காமல் கைகளை பிடிப்பது என்ன பழக்கம் என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டாள்.
நீண்ட நேரம் அவள் கடற்கரையிலேயே காத்திருந்தாள். ஏகப்பட்ட சிந்தனைகள் கற்பனைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள். விட்டு சென்ற வசந்த் வரவே இல்லை. அவள் வெறுமையாக உணர்ந்தாள்.
கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள எத்தனிக்கையில், திடீரென, தன் அருகில் யாரோ நிற்பதை போல் உணர்ந்தாள். கண்களை திறந்தாள்.
வசந்த் அவள் கையை பிடித்தான்.
தொடரும்...
{kunena_discuss:983}