தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ
“விழியிலே விழியிலே சுயம்வரம் நடக்குதே
இதுஎன்ன இதுஎன்ன இருதயம் மிருதங்கம் இசைக்குதே
காதலா கைகோர்க்கும் காலம் வந்ததடா
காதோரம் உன் பேச்சும் கதை பேசும் உன்மூச்சும்
நாள்தோறும் வேண்டும் என்று கேட்கிறேன்
இதுபோதும் இதுபோதும் வேறென்ன இனி வேண்டும்
அன்பே உன் அன்பில் நானும் பூக்கிறேன்
உனைநான் காணும் முன்னே என் வாழ்கை வெள்ளைகோடு
புதிதாய் வர்ணம் தந்தாய் பல வானவில்லை வரை
எல்லாம் எல்லாம் எல்லாம் இந்த காதல் செய்யும்பாடு
அழகே அழகின் அழகே
என்னை எப்படி வென்றாய் எனக்கே தெரியாமலே …”
காலை ஏழு மணியளவில் திருநெல்வேலி ஸ்டேஷன் வர பெரியவர்களை திருமணத்ததிற்கு அழைத்து விடைபெற்று கூபேவின் வெளியே வர நிர்பயா அவனின் கைப்பற்றிக் கொண்டாள்..
“அடடா அந்த ரௌடிகளுக்கு கூட பயப்படல என் குடும்பத்துக்கு இவ்ளோ பயமா??”,என நக்கலடித்தவன் அவள் கையை இன்னும் அழுத்தமாய் பற்றத் தவறவில்லை..தமிழின் அம்மா அப்பா அண்ணா வந்திருப்பதை பார்த்து நிம்மதியடைந்தவள் மூவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்து ஆண்களை பார்த்து கைக் கூப்பினாள்..
வெற்றி தலையசைத்து சிரிக்க ,கேசவன் சிறு தலையசைப்போடு நகர்ந்தார்..சரோஜாவை கண்டதும் போய் சிறுபிள்ளையாய் கட்டிக் கொண்டவளை பார்த்தவனுக்கு மனம் கனிந்தது..
“ஹலோ உங்க புள்ளைநு ஒருத்தன் ஆறடில நிக்குறானே கண்ணுக்கு தெரியுதா??”
“தம்பி இது வெறும் ட்ரெய்லர் தான்..இனி நம்மயெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க வா வா வேலையப் பாப்போம்”, என வெற்றி அவனை அழைத்துச் சென்றான்..பத்து நிமிடத்தில் வீட்டை அடைய காரை விட்டு இறங்கியவளை அப்படியே நிற்கச் சொல்லிவிட்டு சரோஜா உள்ளே சென்றார்..இருவரையுமாய் சேர்த்து நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்..வீடுகள் நிறைந்த அகலமான தெரு பறவைகளின் ஓசையும் ஓரிரண்டு வாகன ஓசை தவிர வேறு இரைச்சல் இல்லாமல் அழகாய் இருந்தது..
வாசல் கதவை தாண்டியவுடன் திறந்த இடத்தை தாண்டி திண்ணையோடு கூடிய உள்கதவு வராண்டா அதை தாண்டி ஹால் அதன் இடபுறமாய் ஓர் அறை..அதை தொடர்ந்து ஸ்டோர் ரூம் இருக்க ஹாலிலிருந்து உள்ளே செல்ல டைனிங் ஹாலோடு கூடிய கிட்சன் இருந்தது..ராஜி வீட்டை சுற்றி காட்டிவிட்டு அவளிடம் ,
“மாடில உங்க ரூம் நிர்பயா..லக்கேஜ்லா அங்கேயே வச்சுக்கோ..நீ போய் ரெடி ஆய்ட்டு வா தம்பி இங்க கீழேயே குளிச்சுப்பாங்க..”,எனக் கூற ஹாலில் வந்து தன் பெட்டியை எடுத்தவள் வெளியே வர தமிழ் யாரிடமோ போனில் பேசிவிட்டு திரும்பினான்..
“ஃபீல் ஃப்ரீ நிரு..நீ போய் ரெடி ஆய்ட்டு வா..”,என்றவாறு அவள் படியேறும் வரை நின்றான்..வாசலில் இருந்த திறந்த இடத்திலிருந்து மாடிக்குப் படி கட்டுகள் செல்ல உள்ளே கதவை திறந்தாள்..அங்கு பெரிய ஹாலும் இரு அறைகளும் இருக்க ராஜி கூறிய அறைக்குச் சென்று குளித்து உடைமாற்றி வந்தாள்..
தயக்கமாய் கீழே வர அங்கு ஒரு படை பட்டாளமே இருப்பதை கண்டு செய்வதறியாமல் நின்றாள்..அதற்குள் சரோஜா அவளருகில் வந்து கைப்பிடித்து அவர்களிடம் அழைத்துச் சென்றார்..
“மதினி இவதான் கல்யாண பொண்ணு பேரு நிர்பயா..”,எனக் கூற அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்தாள்…
“நல்லாயிருக்கியா??ஒழுங்கா சாப்பிட மாட்டியோ இப்படி முருங்கைக்காய்க்கு கை கால் முளைச்சமாதிரி இருக்கியே போலீஸ்காரன எப்படி சமாளிக்க போற??”,என ஒரு பாட்டி கூற வெடிச் சிரிப்பு எழுந்தது..நிர்பயா பாவமாய் சரோஜாவை பார்க்க,
“அத்தை போதும் போதும் அவளுக்கு தமிழே கொஞ்சம்தான் தெரியும் இதுல நீங்க நம்ம பக்க பாசைல பேசுனா கிழிஞ்சுது..பாவம் பசியோட இருக்கா சாப்ட்டு வரட்டும் “,என விளையாட்டு போல் கூற,
“அது சரிதான்..போ போய் சாப்டு பொண்ணே இங்க பக்கத்துல தான இருக்கோம் வெயில் தாள அப்பறமா வரோம்”, என்றவாறு அனைவரும் கிளம்பினர்..
டைனிங் டேபிளில் அவளை அமர வைத்தவர் அனைவரையும் சாப்பிட அழைக்க தமிழ் அவன் தந்தை தமையனோடு வந்தமர்ந்தான்..பெண்கள் இருவரும் பரிமாற நிர்பயா தானும் அவர்களோடு சாப்பிடுவதாய் கூற, பரவால்லம்மா நீ சாப்டு டயர்டா தெரியுற பாரு என கேசவன் கூற மறுக்க தோன்றாமல் அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்..
ஏனோ கேசவனை பார்க்கும் போதெல்லாம் ஒருவித பயம் கலந்த மரியாதை தோன்றியது அவளுக்கு..அந்த நினைவோடேயே மெதுவாய் சாப்பிட,
“இங்க பாரும்மா..”என்ற அவர் குரலில் நிமிர்ந்தாள்..
“இது இனி உன் வீடு ஏன் ரொம்ப அன்கம்பர்டபிளா பீல் பண்ற..நாங்க எல்லாரும் உன்கூட இருக்கோம் அப்பா அம்மாவா நானும் சரோஜாவும் இருக்கோம்..தைரியமா சந்தோஷமா இருக்கனும்..உன் கஷ்டகாலமெல்லாம் முடிஞ்சுதுநு நினைச்சுக்கோ..போனவங்க வரப்போறதில்ல..ஆனா அவங்க உனக்காக இத்தனை உறவுகளை குடுத்துருக்காங்கல..