‘ஹரிஷ் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்’ பலமுறை சொல்லிக்கொண்டாள் தனக்குள்ளே.
.’என்னாச்சு அனு. ஏன் டென்ஷனா இருக்கே? என்ன நடக்குது அங்கே?’ கேட்டாள் கீதா.
‘பரம் ஏதோ தப்பா பேசறான் அண்ணி’ என்றாள் இவள் டி,வி.யிலிருந்து பார்வையை விலக்காமல்
அடுத்து நான்கு ஓவர்கள் இப்படியே கடக்க தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நினைத்து இவன் பெவிலியனை நோக்கி கையசைக்க அவனை நோக்கி வந்தது குடி நீர், தண்ணீர் பாட்டிலை இவன் வாயில் கவிழ்த்துக்கொள்ள அவனருகில் வந்தான் பரம்.
கண்களை மூடிக்கொண்டான் ஹரிஷ். எங்கே தட்டினால் ஹரிஷ் வீழ்வான் என நன்றாக அறிந்துதான் வைத்திருந்தான் பரம். அன்று பார்ட்டியில், அதன் பிறகு விமான நிலையம் என அனுவை பார்த்திருந்தான்தானே அவன். அவளை வைத்து ஹரிஷின் காதில் மட்டும் விழும் வகையில் சுருக்கென சீண்டினான் பரம்.
ஒரு ஆண்மகனாய் அவனது உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் சுள்ளென பொங்கி எழுந்தது. கையிலிருந்த தண்ணீரை அப்படியே தனது அருகில் நின்றவனின் முகத்தில் ஊற்றியிருப்பான்தான். அத்தனை காமெராக்களும் பார்த்துக்கொண்டிருக்க அவன் கன்னத்திலேயே நான்கு அறைகள் அறைந்திருப்பான்தான்.
தண்ணீரை ஊற்ற சட்டென முன்வந்த கையை உள்ளுக்குள்ளிருந்து தடுத்தது ஏதோ ஒன்று. அது அனுவின் தொடர் வேண்டுதலா தெரியவில்லை.
ஒரு ஆழ் மூச்சுடன் தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டு உள்ளுக்குள் எழுந்த உள்ளுக்குள் நெருப்பை அணைத்துக்கொள்ள இன்னுமாக தண்ணீரை கவிழ்த்துக்கொண்டான் ஹரிஷ்..
நூற்றில் ஒரு பங்கு கூட தணியவில்லைதான் கோபம். சொல்லப்போனால் இன்னமும் பன்மடங்காகி இருந்தது என்பதுதான் உண்மை..
‘யாரை பேசுகிறான்? என் அனுவையா? என் தேவதையையா? கொதித்து கொதித்து பொங்கியது அவனது உள்ளம். இருப்பினும் அதை வெளிப்படுத்தாமல் தனது இடத்திற்கு வந்திருந்தான் ஹரிஷ்
அங்கே பெவிலியனுக்குள் இருந்த மற்ற வீரர்களுக்கும், ஏன் பார்வையாளர்கள் சிலருக்கு கூட அங்கே நடப்பவை ஓரளவு புரியத்துவங்கி இருந்தது. அவர்களுக்குள் கிசுகிசுக்க துவங்கி இருந்தனர் அனைவரும்.
எதிர்முனையில் இருந்தவனின் முகத்தில் இருந்த எகத்தாள புன்னகை இவனை இன்னமும் கொதிப்பேற்றியது. இப்போது ஹரிஷை நோக்கி ஓடி வந்தார் அந்த தென் ஆப்பரிக்க வீரர்.. ஒரு முறை எதிரில் நின்றவனை பார்த்துக்கொண்டான் ஹரிஷ்.
இந்த பந்தினால் அப்படியே அவன் தலையை பிளந்து விட்டால்தான் என்ன என்றுதான் தோன்றியது ஹரிஷுக்கு. அவன் மனம் படித்தவள் போல் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள் அனுராதா.
பந்து அவனது பேட்டுக்கு வர பரம் சற்றுமுன் பேசிய வார்த்தைகள் காதில் ஒலிக்க மொத்த ஆத்திரத்தையும் சேர்த்து. நேரே குறி பார்த்துதான் அடித்தான் அந்த பந்தை. சரேலென பறந்து சென்று எதிர்முனையில் இருந்த ஸ்டம்பில் பட்டு அதே வேகத்தில் அந்த ஸ்டம்ப் தெறித்து மூன்று துண்டாக உடைந்திருந்தது
அருகிருந்த அம்பயரே சற்று திகைத்து விலகி இருந்தார். பரம் கிரீசுக்குள் நின்றிருந்ததாலும், பந்து எந்த எதிரணி வீரர்களின் கையிலும் படாததாலும் அவன் ஆட்டம் இழக்கவில்லை. இருப்பினும் சற்றே ஸ்தம்பித்துதான் போனான் பரம்.
ஹெல்மட்டை கழற்றிவிட்டு ஒரு முறை அவனை எரிக்கும் பார்வை பார்த்தான் ஹரிஷ்.
‘உனக்கு விழ வேண்டியதடா இது. உன் ஸ்டம்புக்கு விழுந்திருக்கிறது’ என்பதாக தனது ஆள்காட்டி விரலை பரமை நோக்கி சுட்டினான் அவன்.
வர்ணனையாளர்கள் இதை பற்றி பேசத்துவங்க, இவன் அனாயாசமாக ஹெல்மெட்டின் மீதிருந்த தூசியை ஊதிவிட்டு அதை மாட்டிக்கொண்டு அடுத்த பந்துக்கு தயாரானான் படு இயல்பாக.
கொஞ்சம் தணிந்திருந்தது அவன் கோபம். அதே நேரத்தில் சத்தியமாய் மூச்சு கூட அவள் வசமில்லை அனுராதாவுக்கு.
அடுத்து முழு வேகத்தில் இறங்கினான் ஆட்டத்தில். பரம் சரியாக ஒத்துழைக்காத போதிலும் கிடைத்த பந்தையெல்லாம் ஆறுக்கும் நான்குக்குமாக சுழற்றி இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றிருந்தான் ஹரிஷ். ஒரு நாள் ஆட்ட தொடரை வென்றிருந்தது இந்தியா.
அத்தனை ஆட்டக்காரர்களும் உள்ளே வந்து ஹரிஷை கொண்டாட ஆரம்பித்திருந்தனர். பொறாமை என்பதையும் தாண்டி வெறியின் உச்சத்தை தொட்டிருந்தான் பரம். அவனே அவன் வசம் இல்லைதான்.
சந்தோஷ குதூகலத்துடன் தனது ஹெல்மட்டை கையில் வைத்துக்கொண்டு எல்லாருடைய வாழ்த்தையும் பெற்று அவன் கைக்குலுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவன் எதிரே பார்த்திராத அந்த நொடியில் அவன் முகத்தில் படாரென அடித்தது பரமின் பேட்.
இவன் இன்னமுமாக ஒரு படி முன்னேறி விட்டதை தாங்கிக்கொள்ள முடியாதவனாக அவனை பேட்டால் அடித்திருந்தான் பரம்.