ஜெய்யின் காதல் கொண்ட மனம் அப்படிதான் எண்ணியது.
உடனே யஷ்விதாவிடம் பேசி இதற்கொரு முடிவுகாணும் நோக்கத்தோடு தூங்கி கொண்டிருந்த சரயூவின் அறைக்குள் பூனை போல் நுழைந்து அவளின் கைபேசியை எடுத்து கொண்டு வெளியேறினான். யஷ்விதாவை பற்றி மனைவியிடம் மறந்தும் கூட பேச விரும்பாதவன், கைபேசியிலிருந்து அவளின் எண்ணை தனக்கு வாட்ஸ்ஆப்-பில் அனுப்ப...அதிலிருந்த வேதிக்கின் படத்தை பார்த்து வியந்தான்.
ரூபின் அமெரிக்கா சென்ற சில மாதங்களிலியே வேதிக்கின் தொடர்பும் குறைந்து போனது. ஸோசியல் மீடியாவிலிருந்த அவனுடைய அனைத்து அக்கௌண்ட்களும் இன்ஆக்டிவ் ஆகியிருக்க, அலைபேசி எண்ணும் செயலிழந்திருந்தாகவும், அதன் பிறகு வேதிக்கை பற்றி எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ரூபின் சொல்லியிருந்தான். சரயூவின் ஃபோனில் அவனுடைய பெயரை பார்க்கவும் ஆச்சரியமாக இருந்தது.
எங்களையெல்லாம் மறந்துவிட்டு சரயூவிடம் மட்டும் பேசுகிறானா என்ற கேள்வியை பின்னுக்கு தள்ளி யஷ்விதாவின் பிரச்சனை நினைவுக்கு வரவும் இதை பிறகு பார்க்கலாமென்று, கைபேசியை அவன் எடுத்ததற்கான எந்த தடையமுமின்றி எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டான்.
அதன் பிறகு யஷ்விதாவிடம் பேசியவன், அவளை சந்திப்பதற்காக இப்போது காஃபி ஷாப்பிற்கு போய் கொண்டிருக்கிறான். கோயிலில் அவளிடம் தன் கோபத்தை காட்டியவனிடத்தில் இன்று அதைவிட பல மடங்கு கோபமிருந்தாலும் அமைதியாக இருக்க வேண்டுமென உரு போட்டபடி அந்த கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றான்.
ஜெய்யை காத்திருக்கவிடாது ஐந்து நிமிடத்தில் வந்த யஷ்விதா அவனெதிரே அமர்ந்தாள். முகத்தில் வழிந்த சந்தோஷமும் அதற்கு ஏற்றார் போல் பளீர் புன்னகையுமாக அவளை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவன் நடந்து கொண்ட முறைக்கு சத்தியமாக அவளிடம் இப்படியொரு எதிர்வினையை எதிர்ப்பார்க்கவில்லை. தன்னிடம் கோபப்படுவாளோ என்றிருந்தவனுக்கு அவளின் இந்த மலர்ந்த முகம் சற்று குழப்பத்தை கொடுத்தது.
இவன் அமைதியாக உட்கார்ந்திருக்க, அவளே, “சொல்லுங்க ஜெய்! பேசனும்னு கூப்பிட்டிட்டு அமைதியா இருக்கீங்க?” என்று மிகச் சாதரணமாக பேசியவளை கண்டு திகைத்தாலும் தன்னை சமாளித்து...
அவள் முகத்தை ஆராய்ந்தபடி, “ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கனும்...அதான்....” என்று இழுக்கவும்
“அதான் தெரியுமே” என்றாள் பட்டென.
‘எப்படி?!’ என்று ஆச்சரியத்திலிருக்க...
உற்சாகக் குரலில், “எப்படினு யோசிக்குறீங்களா ஜெய்? இத்தனை வருஷத்துல நீங்க எனக்கு ஃபோன் செய்ததேயில்லை. அப்படியிருக்க ஃபோன் செய்து பேசனும்னு சொல்லும்போதே புரிஞ்சுக்கிட்ட... சரி சொல்லுங்க அந்த முக்கியமான விஷயத்தை”
முகம் இறுக, “சரயூக்கு என்னாச்சு?” கேட்க...
“அவளுக்கு என்னாக போகுது! அந்த பைத்தியத்துக்கு இன்னும் வேற என்னாகனும்?” என்று சலிக்க....
கோபத்தை அடக்கி அடிக்குரலில், “வார்த்தைகளை பார்த்து பேசு யஷ்விதா! சரூவை ஏதாவது சொன்ன, அப்றம் நான் மனுஷனா இருக்க மாட்ட” என்று சீறினான்.
அதை அசட்டை செய்து, “இது நல்ல கதையா இருக்கே! நீங்களா வந்து அந்த பைத்தியத்தை பத்தி பேசுனு சொல்லுவீங்க...பேசினா அதை தப்புனு சொல்லுறீங்க” ஏளனத்தோடு போலியான ஆச்சரியத்தை வெளியிட்டவள்
“சரி! நான் கிளம்புறேன் ஜெய்” என்று முடித்துகொள்ள...
அவளின் வார்த்தைகளினால் ஏற்பட்ட சீற்றத்தை குறைத்து, “நாம இன்னும் பேசி முடிக்கல” என்றான் சமாதானக் குரலில்.
“நான் பேசுறதே பிடிக்கலைன்னும் போது நான் என்னத்த பேச....நீங்களே சொல்லுங்க” இமைதட்டி அவள் கேட்க....
சரயூவை பற்றி அவள் சொன்னதை நம்பாதவன் போல் பேசி விஷயத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்திருந்தவன், “அன்னைக்கு நீ சொன்னது பொய்னு எனக்கு தெரியும். இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகனும். நாலு வருஷமா சரூ உங்கிட்ட மட்டும்தா மனம்விட்டு பேசியிருக்கா! என்ன நடந்ததுனு உனக்கு நிச்சயமா தெரியும். அதை சொல்லிட்டா உனக்கு நல்லது இல்லைனா....” என்றவனின் கூர்மையான பார்வையை தாங்கியவள்...
“மிரட்டுறீங்களா ஜெய்! நீங்க என்ன செய்தாலும் எப்படி கேட்டாலும் என்னோட பதில் ஒன்னுதான்....அதையும் அன்னைக்கே சொல்லிட்ட...திரும்ப திரும்ப அவளை பத்தி பேச நான் விரும்பலை” என்று எழுந்து கொண்டாள்.
செல்லவிடாது அவள் கையை பற்றியவன், “ப்ளீஸ் யஷ்விதா!” என்று கண்களால் இறைஞ்சினான்.