(Reading time: 23 - 46 minutes)

மேலும் இரண்டு நாள் கழித்து சூர்யாவும், ஷியாமும் ஒரு ஜவுளி கடைக்கு சென்றிருந்தார்கள். காவ்யா "எனக்கு தலை வலிக்குது", என்று சொல்லி விட்டதால் மதியும் அவளுடன் இருந்து கொண்டாள். ஆண்கள் இருவருக்கும் அவர்கள் இல்லாமல் எங்கும் செல்ல பிடிக்காததால் அவர்களுக்கு உடை எடுக்க நினைத்து இங்கே வந்தார்கள். இருவருமே மூன்று மூன்றாக ஆறு சேலைகள் வாங்கினார்கள்.

வீட்டுக்கு சென்றதும் ஆளுக்கு ஒன்றாக சேலையை கொடுத்தான் சூர்யா. "தேங்க்ஸ் அத்தான்", என்று மதியும், "தேங்க்ஸ் அண்ணா", என்று காவ்யாவும் பெற்று கொண்டார்கள். காயத்ரி என்ன சொல்லுவாளோ என்ற பயத்துடன் தான் அவளிடம் ஒரு கவரை நீட்டினான் சூர்யா.

தனிமையில் இருந்ததால் அவள் மனது வெகுவாக மாறி இருந்தது. தான் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாலும் தன்னை அன்பாக அவர்கள் விசாரிப்பதில் அவள் மனதில் ஏற்கனவே யோசனை வந்திருந்தது.

அது மட்டும் அல்லாமல் இத்தனை நாள் தன் அண்ணன் மீதிருந்த மாய பிம்பமும் உடைந்திருந்தது. "அவன் சிகரெட் அடிப்பான், தண்ணி அடிப்பான்", என்று சித்தி சொன்ன அனைத்தும் இந்த நான்கு நாட்களில் அவளுக்கு பொய் என்று தான் தோன்றியது. அதற்கு காரணம் காவ்யா தான். 

ஒரு நாள் நால்வரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது காயத்ரி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவர்கள் பேச்சு அவள் காதிலும் விழுந்து கொண்டு தான் இருந்தது. காவ்யாவும் ஷியாமும் மாற்றி மாற்றி வார்த்தையால் சண்டை இட்டு கொண்டிருந்தார்கள். காவ்யாவின் கேலியை காயத்ரியுமே ரசிக்க தான் செய்தாள். அப்படி இருக்கும் போது தான் "ஷியாம் சார் உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். உங்களுக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? பாரின்ல எல்லாம் இருக்கீங்க? அதான் கேட்டேன்", என்று கேட்டாள் காவ்யா.

தன் அண்ணனுடைய பதிலுக்காக காயத்ரியும் காதை தீட்டி கொண்டு காத்திருந்தாள்.

அவனோ "ஏய், யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? நான் எப்படின்னு சூர்யா கிட்ட கேட்டு பாரு? நானும் சூர்யாவும் பிரண்ட்ஸ் ஆனதே எல்லாரும் தண்ணி அடிக்கிற காலேஜ் பார்ட்டில நாங்க விலகி இருந்ததுனால தான். அப்புறம் சிகரெட் சுமல் எனக்கு ஓத்தே வராது. எப்படியும் உனக்கு இதை நான் சொல்லி தான் ஆகணும். நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்லவன் மா. என்ன? ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் இருக்கு. அதுவும் இனி தான் பழகணும்", என்று காவ்யாவின் கண்களை பார்த்து கொண்டே சொன்னான்.

அவன் பார்வையில் தடுமாறினாலும் "என்ன அது?", என்று கேட்டாள். "லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும். அது தான் அந்த கெட்ட பழக்கம்", என்று சிரித்தான் ஷியாம்.

இந்த நிகழ்வில் இருந்தே தன்னுடைய அண்ணன் மீது அவளுக்கு நல்லெண்ணம் வந்திருந்தது. அது மட்டும் அல்லாமல் போனில் பேசும் போது மோகனும் விசாலாட்சி பத்தி கொஞ்சம் சொல்லி இருந்தார்.

சூர்யாவின் கரத்தில் இருந்த கவரை பெற்று கொண்ட காயத்ரி அவனை பார்த்து "தேங்க்ஸ் அண்ணா", என்றாள்

அப்போது தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளியே விட்டான் சூர்யா.

தித்திப்பு தொடரும்......

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1169}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.