மற்றவர்கள் போல் தவறாக நினைக்கவில்லையென்றாலும் துஷ்யந்திற்கும் கங்காவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை இளங்கோவும் அறிந்துக் கொண்டான். துஷ்யந்த் யார்? என்று கங்காவிடமே நேரடியாக கேட்டான். நண்பனிடம் கங்கா எதையும் மறைக்கவில்லை. அதே சமயம் அவனிடம் உண்மையையும் கூற முடியாதே.. அதனால் துஷ்யந்திடம் என்ன சொல்லியிருந்தாளோ அதை இளங்கோவிடமும் கூறியிருந்தாள். அதனால் தன்னை தவறாக நினைத்து இளங்கோ தன்னிடம் பேசவில்லையென்றாலும் கூட பரவாயில்லை என்று நினைத்து தான் அனைத்தையும் கூறினாள்.
“தப்பு செய்றவங்க எப்பவும் தப்பே செய்யணும்னு இல்ல.. அவங்க தன்னோட தப்பை சரி செஞ்சுக்க நினைச்சா அதுக்கு நாம வாய்ப்பு கொடுக்கணும்.. அவங்க தப்பானவங்கன்னு நாம ஒதுக்கினா அவங்க விரக்தில திரும்ப அதே தப்பை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. அதனால நாம அவங்களை சரியா புரிஞ்சிக்கணும்.” என்று இளங்கோவின் தந்தை அவனிடம் அடிக்கடி கூறுவார். அதை அவனும் சரியாக புரிந்துக் கொண்டதால், கங்கா தவறு செய்திருந்தாலும் அதை திருத்திக் கொள்ள நினைப்பதில் தவறில்லை என்று புரிந்துக் கொண்டான்.
தன் தோழியை துஷ்யந்த் தொந்தரவு செய்கிறானோ என்ற எண்ணத்தில் இளங்கோ துஷ்யந்திடம் பேசினான். ஒரு தோழனாய் இளங்கோவின் அக்கறை துஷ்யந்திற்கு பிடித்தது. தான் கங்காவை திருமணம் செய்துக் கொள்ளவே விரும்புகிறேன்.. அவளை விட்டு விலகி சென்றால் அது எளிதாக நடக்காது. அதனால் தான் கங்காவை தேடி அடிக்கடி வருகிறேன்..” என்று துஷ்யந்த் இளங்கோவிற்கு புரிய வைத்தான்.
துஷ்யந்த் சொல்வது போல் கங்கா துஷ்யந்தை மணந்தால் நல்லது தானே, ஒருமுறை வாழ்க்கை தவறிப் போனால் அதை சரி செய்துக் கொள்வதில் தப்பில்லையே.. அதுவும் துஷ்யந்தையே மணந்துக் கொண்டால் ஒருவிதத்தில் அவள் தவறுகள் சரியாகி விடுமே.. துஷ்யந்தும் ஒன்றும் தவறானவனாக தெரியவில்லையே.. என்று தான் இளங்கோ யோசித்தான். அன்றிலிருந்து இளங்கோ துஷ்யந்திற்கு நல்ல நண்பனாக மாறினான். மறைமுகமாக கங்காவின் மனதை மாற்ற தன்னால் ஆன முயற்சியும் எடுத்தான்.
தான் கங்காவிற்கு செய்ய நினைத்ததையெல்லாம் இளங்கோவை வைத்தே துஷ்யந்த் செய்ய ஆரம்பித்திருந்தான். முதலில் அவள் எழுதாமல் விட்டிருந்த பரிட்சையை எழுத வைத்தான். அடுத்து அவள் மேல் படிப்பு படிக்க தூண்டினான். யாரிடமோ வேலை செய்து அவர்கள் கேள்விப் பார்வைகளுக்கு ஆளாகாமல் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க யோசனை கூறினான். அதைப்பற்றி இளங்கோ கங்காவிடம் பேசியபோது, தனக்கு பிடித்த தையற் கலையை மற்றவர்களுக்கு கத்துக் கொடுக்க கங்கா விரும்பினாள். அதேபோல் அடிக்கடி வீடு மாறும் சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்ட போது, அவளுக்கென்று சொந்த வீடு வாங்க வழி செய்தான்.
ஒருப்பக்கம் கங்காவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு எல்லாம் செய்தவன், இன்னொரு பக்கம் தங்கள் சொத்து பிரச்சனை, தொழில் பிரச்சனைகளையும் சரி செய்தான்.
நாட்கள் வேகமாக ஓடியது. கங்கா, துஷ்யந்த் நிலைமையில் மாற்றங்கள் வந்திருந்தாலும், அவர்கள் உறவில் மாற்றங்கள் வரவில்லை. இளங்கோ, வாணி இருவரும் துஷ்யந்திற்கு ஆதரவாக இருந்தாலும் கங்கா இன்னும் அதே எண்ணத்தோடு தான் இருந்தாள். சில சமயம் அமைதியாக இருப்பாள் என்றால், சில சமயம் அவனிடம் கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவாள். அவனை விட்டு விலக தான் எப்போதும் நினைப்பாள். அவனோடு திரும்ப சேர முடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.
அப்படிப்பட்டவள், துஷ்யந்தை காதலாக பார்த்ததும், அவனுடன் வாழ முடியாதா? என்று ஏக்கம் கொண்டதும், அவனிடம் கோபம் கொள்ளாமல் இருந்ததும் என்று அவள் மாறிய காலமும் வந்தது. கங்காவை மரணத்திற்கு அருகில் பார்த்து துஷ்யந்த் மனதில் ஒரு பக்குவம் வந்தது என்றால், துஷ்யந்தை மரணத்திற்கு அருகில் பார்த்து தான் கங்காவின் மனதிலும் இந்த மாற்றங்கள் வர ஆரம்பித்தது.
ப்ரண்ட்ஸ் இன்னும் கொஞ்சம் ப்ளாஷ்பேக் இருக்கு கூடவே கங்காவை கண்டுபிடிச்சாங்களா என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறேன்.. நன்றி.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}