மறுநாளிலிருந்து அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் எழிலரசியிடம் அவள் வேலைக்கு செல்ல இருப்பதை பற்றி கூறினாள்.
“எதுக்கு இப்போ வேலைக்கெல்லாம், உன்னோட படிப்புக்கு எங்களால செலவு செய்ய முடியாதா? உன்னோட அப்பாவா அவருக்கு இந்த கடமை இருக்குல்ல.. நீ எந்த வேலைக்கு போக வேண்டாம்” என்று எழிலரசி திட்டவட்டமாக மறுத்தார்.
ஏதோ இங்கு வந்து விட்டதால் கடமைக்கென்று பார்க்காமல், தன் மீது இத்தனை அக்கறையாக இருக்கும் எழிலரசியை சுடருக்கு மிகவுமே பிடித்திருந்தது. இருந்தாலும் இன்னும் கூட எழிலிடம் சுடர் சகஜமாக பேசி பழகுவதில்லை. தன் தந்தைக்கு அது பிடிக்குமா? என்று தெரியாததால், எழிலிடம் கூட ஒதுங்கி தான் இருந்தாள்.
“நீங்க எனக்காக பார்க்க மாட்டீங்கன்னோ, எனக்கு செலவு பண்ண உங்களுக்கு கஷ்டம்னோ நான் நினைக்கல.. காலேஜ் ஜாயின் பண்ண இன்னும் ரொம்ப நாள் இருக்கு.. அதுவரைக்கும் இப்படி விட்டிலேயே அடைஞ்சுக் கிடப்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அதுக்காகவாவது நான் வேலைக்குப் போறேனே.. ப்ளீஸ்..” என்று சுடர் எழிலிடம் கெஞ்சலாக கூறவும், அவளுக்கும் அது சரியென்றுபட்டது.
இருந்தாலும் தங்களுக்கு பாரமாக இருப்பதாக சுடர் நினைத்துவிடக் கூடாதே என்ற கவலையும் எழிலுக்கு இருந்தது. மாலை வீட்டுக்கு வந்த கணவரிடம் இதைப்பற்றி அவள் பேச, “இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்க, பணம் வேணும்னா கேளு தரேன், இல்லை அவளுக்கு எது விருப்பமோ செய்யட்டும்” என்று கதிர் கூறவும்,
“இவர்க்கிட்ட இப்போ இதை சொன்னது என்னுடைய தப்பு தான்..” என்று எழில் சலித்துக் கொண்டாள். பின் மகியை அலைபேசியில் அழைத்து,
“சுடர் வேலை வேணும்னு கேட்டா எங்கிட்ட ஒருவார்த்தை சொல்லணும் தெரியாதா மகி.. அது நல்ல வேலை தானா? அவளுக்கு அங்கே பாதுகாப்பு இருக்கான்னு தெரியுமா? பின்னாடி ஏதாவது பிரச்சனை ஆகப் போகுது.. ” என்று அனைத்தையும் அக்கறையாக விசாரித்தாள்.
“எனக்கு தெரிஞ்ச ஸ்கூல் தான் அத்தை.. அங்க எந்த பிரச்சனையும் இருக்காது.. சுடர் சொன்னது போல பணத்துக்காக இல்லன்னாலும், வீட்லயே அடைஞ்சு கிடைக்காம ஒரு மாற்றமா வேலைக்கு போயிட்டு வரட்டுமே அத்தை..” என்று அவனும் அதையே கூறினான்.
“எல்லாம் சரி தான் மகி, இருந்தாலும் சுடர் வேலைக்கு போகறத பத்தி ஆனந்தி கேள்விப்பட்டா என்ன நினைப்பாங்க, ஆனந்திய கூட விடு, பொதுவா அக்கம்பக்கத்துல இருக்கவங்க கூட, அப்பாக்கிட்ட ஆதரவு தேடி வந்த பொண்ணை பார்த்துக்க கூட வழியில்லாம, அவளை வேலைக்கு அனுப்புறாங்கன்னு சொல்ல மாட்டாங்களா” என்றாள்.
“இப்போ உங்களால பார்த்துக்க முடியலன்னா அவங்களா வந்து உதவ போறாங்க.. இப்போ அக்கம் பக்கக்த்துல இருக்கவங்களுக்காகவோ, இல்ல மாமாவுக்காகவோ, இல்லை அந்த ஆனந்தி ஆன்டிக்காகவோவா நீங்க சுடர் இங்க வரட்டும்னா சொன்னிங்க.. உங்களுக்கே நியாயம்னு பட்டதால தான சுடரை இங்க வரவழைச்சீங்க.. மாமாவுக்கு விருப்பம் இல்லன்னு தெரிஞ்சும் உங்களுக்காக தான ஆனந்தி ஆன்ட்டி சுடரை இங்க அனுப்பி வச்சாங்க… அதனால மத்தவங்களை நினைச்சு தயங்காம சுடரை வேலைக்கு அனுப்புங்க..” என்று அவன் சொல்லவும், எழில் அதில் கொஞ்சம் தெளிந்தவள், மகியிடம் சரியென்று ஒத்துக் கொண்டாள்.
இத்தனை நாள் இங்கு வந்ததிலிருந்து ஒருவித வருத்ததோடும், தயக்கத்தோடும் இருந்த சுடருக்கு, நாளையிலிருந்து வேலைக்கு செல்ல இருப்பதில் மனதில் தோன்றிய சந்தோஷத்தில் படுத்ததுமே உறங்கிவிட்டாள்.
ஆனால் அங்கு மகியோ, சுடரை பற்றிய சிந்தனையில் ராத்திரி நேரம் தவறி தான் உறங்கச் சென்றான். அவள் ஏன் நாம் நினைத்தது போல் இல்லை என்பதை அவன் மனம் அடிக்கடி நினைத்து பார்த்தது.
அவள் இருக்கும் ஊர் லண்டன், அங்கே சிறு வயதிலிருந்தே வளர்ந்தவள் ஆயிற்றே அப்படியிருக்க இதெல்லாம் அந்த ஊரில் தவறொன்றும் இல்லையே என்று அவன் அதை சொல்லி மனதை திசை திருப்பினாலும், முன் அவளை பற்றிய் நினைப்பு இன்று மாறி போயிருந்ததில் அவன் மனது ஒருவித ஏமாற்றத்தை அடைந்த்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவள் யார்? அவள் எப்படிப்பட்டவளாக இருந்தால் எனக்கென்ன? இங்கே எல்லாம் அவளுக்கு பழகும் வரை நாம் உதவ போகிறோம் அவ்வளவு தான், அதற்கு எதற்கு இப்படி அதையே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று தன் மனதை திசை திருப்ப முயற்சித்தான்.
சுடரொளியின் ஓவியங்கள் அடங்கிய பையை வண்டியில் வைத்தவன், அவளை வீட்டில் கொண்டு போய் விடும்போது கொடுக்க மறந்திருந்தான். அவளுமே ஞாபகமாக அதை வாங்கியிருக்கவில்லை.
மறுநாள் புகழேந்தி வண்டி எடுக்கும் போது தான் அதை பார்த்து, பின் விஷயம் தெரிந்து மகியிடம் கொடுத்து பின் சுடரிடம் கொடுக்கச் சொன்னார். அவளுக்கு பழக்கமாகும் வரை வேலை செய்யும் இடத்திற்கு அவனே அழைத்து செல்வதாக கூறியிருந்தான்.
இருந்தும் அந்த நேரம் வேறு சில வேலைகளும் இருந்ததால், அவளது பையை அன்று அவனால் எடுத்து செல்ல முடியவில்லை. அவளை நேரில் பார்க்கும் போது அவனே அவளிடம் சொன்னான்.
அவளுக்குமே இரவு தான் பையை மறந்த விஷயம் நினைவு வந்ததாகவும், அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. மெதுவாகவே எடுத்து வரும்படியும் கூறினாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
தன் அறையில் தான் சுடரொளியின் ஓவியம் அடங்கிய பையை அவன் வைத்திருப்பதால், அன்று இரவு அவளது ஓவியங்களை சாதாரணமாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஓவியங்களை பார்க்கும் போதெல்லாம் அவள் திறமைகளை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.
அந்த ஓவியங்களோடு சேர்த்து சில டைரிகளும் இருந்தது. அதிலும் ஓவியங்கள் தான் வரைந்திருக்கிறாளா என்று எடுத்து பார்த்தால், அவள் தந்தையின் ஓவியங்களோடு சேர்த்து சில விஷயங்களை எழுதி வைத்திருந்தாள்.
தன் தந்தைக்கு கடிதம் எழுதுவதாக அவள் சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொரு டைரியாக எடுத்து கதிரவனை ஓவிய வடிவில் பார்த்தான். சிறு வயதில் வரைந்ததற்கும், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவள் திறமை மெருகேறியதற்கும் அவள் வரைந்த அவளது தந்தையின் ஓவியங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. எத்தனை தூரம் அவளுக்கு தன் தந்தையின் முகம் மனதில் பதிந்திருந்தாள். அதை அப்படியே ஓவியமாக வரைந்திருப்பாள்.
அப்படி தன் தந்தைக்கு கடிதமாக என்ன தான் எழுதியிருப்பாள்? என்ற நினைப்போடு அந்த கடிதங்களை வாசித்தான். அவள் சென்ற ஊரைப் பற்றியோ, இல்லை தனக்கு கிடைத்த நண்பர்களைப் பற்றியோ எழுதியிருப்பாள் என்று நினைத்து படித்தவனுக்கு, அதில் இருந்த விஷயங்கள் அனைத்தும் அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது.
அவளது தந்தை மேல் அவளுக்கு இருக்கும் பாசத்தை கண்டு அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. எந்த உரிமையில் அவள் தன் தந்தையோடு வந்து இருக்கக் கூடாது என்று தான் முன்பு கூறினோம் என்று வெட்கினான்.
நேற்று அவளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் வேறு மாதிரி நினைத்து கொண்டு உறங்காமல் இருந்தவன், இன்று அவளது மனமும் குணமும் புரிந்தவனாக அவளைப் பற்றிய வருத்தத்தில் முற்றிலுமே உறக்கம் வராமல்,
அவளை பற்றிய நினைவுகளோடு படுத்துக் கொண்டிருந்தான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.