அஷ்வின் வெளியூரில் நியுரோ ஸ்பெஷலைஷேசன் படிப்பதால், மித்ராவின் வரவேற்பிற்கு பிறகு இப்போது தான் ஊருக்கு வந்து இருந்தான்.
சண்டே எல்லோரும் வீட்டில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அஷ்வினோடு சபரி, முரளி எல்லோரும் வந்தனர். ரொம்ப நாள் கழித்து எல்லோரும் ஒன்று சேரவே அன்றைக்கு ஸ்பெஷலாக சமைக்க சொல்லிவிட்டு , அரட்டையில் மூழ்கினர்.
சிறியவர்கள் கிளாசில் இருந்து வரும்போது மித்ரா தன் அண்ணனைக் கண்டு சந்தோஷத்தோடு அருகில் வந்து அமர்ந்து கொள்ள, அஷ்வின் அவளோடு பேசிக் கொண்டு இருந்தான்.
அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த சைந்தவி
“ஹேய் சுமி.. இங்கே ஒரு சிவாஜி , சாவித்திரி சீன் ஓடிட்டு இருக்கே .. நீ பார்க்கலை “ என்று பேச,
அதற்குள் மித்ரா அவர்களின் பேச்சைக் கவனித்தவள்,
“ஏண்டி.. சிவாஜிய விட எங்க தாத்தா கூட இளையவர்தான். உனக்கு ஒரு தல, தளபதி யாரும் உதராணத்துக் கிடைக்கலியா? “
“இங்கே பாரு .. உனக்கு பழைய படம் வேண்டாம்னா சொல்லு.. புது பாசமலர் டிஜிட்டல் பிரிண்ட் போட்டு ரிலீஸ் பண்றேன். அதுக்காக உங்கண்ணனை எல்லாம் தல, தளபதி ஆக்க முடியாது?
அதற்கு அஷ்வின்
“குட்டிமா.. அவங்க வயசுக்கு தல தளபதி எல்லாம் தெரியுமா? சிவாஜிகும் முன்னாடி தியாகராஜ பாகவதர் தான் தெரிவாங்க. “
“அட டாக்டர் சார் ஒத்துக்கறார் பா. அவர் எம்.கெ.டி காலத்து ஆள் தான்.”
“அது சரி. நீ ஔவையார்னா , நான் எம்.கெ.டி யா இருந்துட்டு போறேன்”
இவர்கள் இருவரும் வழக்கடித்துக் கொண்டு இருக்கும்போது, ஷ்யாம் உள்ளே வர, அவனோடு சேகரும் வந்தான்.
ஷ்யாமை பார்த்தவர்கள் எல்லோரும் அதிர்ந்து அவனருகில் செல்ல, மித்ராவோ அசையாமல் நின்று இருந்தாள்.
ஷ்யாம் வலது கையில் முழங்கை வரை கட்டப்பட்டு தொட்டில் போடப்பட்டு இருக்க, தலையில் ஒரு சின்னக் கட்டு போடப்பட்டு இருந்தது
மைதிலி “ஷ்யாம்.. என்னாச்சுப்பா?” என்று கேட்க
ராம் “ரேஸ்லே விழுந்துட்டியா? “ என கேட்டான்.
இப்போது மித்ரா இன்னமும் அதிர்ந்து போய் நடுங்கி கொண்டு இருந்தாள்.
எல்லோர் கவனமும் ஷ்யாமின் மேல் இருக்கவே, அவளின் நிலை யாருக்கும் தெரியவில்லை
ராமின் கேள்விக்கு பதிலாக
“வேறே பைக் ஒன்றை முந்தும்போது ஓரத்தில் வைக்கப் பட்டு இருந்த டிவைடர் ஒன்றின் மேல் இடித்து விட்டேன். இடித்த வேகத்தில் நான் விழ, என் பைக் என் கையில் விழுந்து விட்டது. அதோடு டிவைடர் முனை ஒன்று என் நெற்றியில் கீறி விட்டது அவ்வளவு தான்.” என்று கூறும்போதே
மைதிலி “ஏண்டா.. இந்த பைக் ரேஸ் வேண்டாம் என்றால் கேட்கமாட்டாயா? வீட்டில் உள்ளவர்கள் எப்படி பயப்படுவோம் என்று உனக்கு புரியாதாடா?
என்று கேட்டவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக மித்ராவைப் பார்க்க, அவள் அப்படியே பின்னால் சரிய ஆரம்பித்தாள்.
வேகமாக சென்று சபரியும், மைதிலியும் மித்ராவை தாங்க, ஷ்யாமும் முடிந்த அளவு வேகமாக அவள் அருகில் வந்தான்.
உண்மையில் அவன் காலில் நல்ல ஸ்ப்ரைன். ஆனாலும் வீட்டினர் இதற்கே பயந்து விட்டனர். இந்த அடியும் சொன்னால், தன்னை புல் செக் செய்ய சொல்லி மருத்துவமனையில் சேர்த்து விடுவார்கள் என்று எண்ணித்தான் அவன் அதை சொல்லவில்லை.
மித்ரா விழவும், அவள் அருகில் செல்ல முடியாமல் தவிக்கையில், சேகர் ஒரு பக்கம் அவனைப் பிடித்து நடக்க, அதை பார்த்தவுடன் ராம், மறுபுறம் வந்து அவனைப் பிடித்துக் கொண்டான்.
ஒன்றுக்கு மூன்று டாக்டர்கள் இருக்கவே, மித்ராவின் மயக்கத்தை விரைவில் தெளிய வைத்தனர்.
அவள் கண் முழிக்கவும், அருகில் அமர்ந்து இருந்த ஷ்யாமின் கையைப் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள்.
அடிபடாத கையால் அவளை மெதுவாக அணைத்தவன்
“மித்துமா, பெரிய அடி எல்லாம் இல்லை. இவன் தான் நான் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்னுட்டு இவ்ளோ பெரிய கட்டு போட்டு விட்ருக்கான். நீ பயபடாதே.” என்று ஆறுதல் அளிக்க,
மற்றவர்கள் நாகரிகமாக சேகரிடம் பேச ஆரம்பித்தனர்.
ராம் “ஷ்யாம் எப்படி உன்கிட்ட வந்தான் சேகர்?