தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ
“உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
உறவே மனம் வேம்புதே.......
உசுர தர ஏங்குதே....
நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ”
தூரத்தில் கேட்ட சிறுவர்களின் குரலில் கலைந்தவன் தலையை உலுக்கியவாறு கடற்கரையிலிருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் இன்னுமே படபடப்பாய் தான் இருந்தது.அந்த ரௌடிகளிடம் சிக்கியது ஒரு காரணம் எனில் திவாவின் அருகாமை தந்த பதட்டமே அதிகம்.அத்தனை மாதங்களில் சற்று தெம்பாய் இருப்பதாய் நினைத்த இதயம் எத்தனை பலகீனமாக உள்ளது என்பதை இன்றே உணர்ந்திருந்தாள் வெண்பா.
அவன் கூறியது போல் இன்னும் பதினைந்து தினங்களில் தன்னால் அனைத்தும் மறந்து அவனோடு செல்ல முடியுமா என்பது பெரிய கேள்விக் குறியே.ஆனால் அப்படி போகாவிட்டால் திவாவின் முடிவு அதை ஏற்றுக் கொள்ளவும் மனம் முடியாமல் பாடாய்பட்டது.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஏதேதோ காரணம் கூறி இரவு சீக்கிரமே அறைக்குள் சென்று படுத்துக் கொண்டவள் மனபாரம் குறைய அழுது தீர்த்தாள்.
மறுநாள் விடியும்போதே மனதில் ஒருவித பயம் அப்பிக் கொண்டது.அவன் கூறிய பதினைந்து தினங்களில் ஒன்று குறைந்துவிட்டதே என.
சிந்தாம்மாவோடும் பேசத் தோன்றாமல் அமைதியாகவே கிளம்பி நடனப் பள்ளிக்குச் சென்றாள்.
அன்றைய நாள் முழுவதுமே ஒருவித பதட்டத்தோடும் சலிப்போடுமே செல்ல மதியத்திற்கு மேல் தலைவலி எடுக்க ஆரம்பித்தது.
அவள் முகத்தை பார்த்த மற்ற ஆசிரியர்கள் அவளை வீட்டுற்கு கிளம்புமாறு கூற தேவையில்லாமல் சிந்தாம்மாவை வருத்தப்பட வைக்க வேண்டாம் என எண்ணியவள் அங்கேயே ஓய்வறைக்குச் செல்வதாய் கூறிச் சென்றாள்.
சென்று கட்டிலில் படுத்தவளுக்கு அத்தனை நேரம் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் அதுவாய் கன்னம் நனைக்க ஆரம்பித்திருந்தது.
அழகான வாழ்க்கை அன்பான கணவன் அனைத்தையும் தானே அழித்துக் கொண்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி மருகி தீர்க்கவே முடிந்தது அவளால்.
அன்று..
சிந்தாம்மாவிடம் உடனே விஷயத்தை கூறி சம்மதம் வாங்குவான் என சற்றும் எதிர்பாராதவளுக்கு மனதில் காதலையும் தாண்டிய அவன் மீதான நம்பிக்கை பலமடங்கு அதிகரித்திருந்தது.
அதன் பின்னான ஒருவார காலம் காதலுக்கும் காதலர்களுக்குமே உரிய செல்ல செல்ல உரையாடல்களோடு இனிமையாய் நகர்ந்தது.திவ்யாந்த் கிடைத்த நேரங்களில் எல்லாம் அவளோடு குறுஞ்செய்தி வழியாகவோ அழைப்பு விடுத்தோ பேச ஆரம்பித்திருந்தான்.
அவனின் அந்த ஒவ்வொரு அழைப்புமே அவள் மீதான தன் காதலையும் அக்கறையையும் பிரதிபலிப்பதாகவே இருந்தது.அவளின் தனிமையை போக்க எண்ணுகிறான் என்பது நன்றாகவே புரிந்தது.
வெண்பாவுமே அவன் வாழ்வில் கிடைக்காத அத்தனை உறவுகளையும் அவனுக்கு கொடுத்துவிடவே துடித்தாள் இருந்தும் எதோ ஓர் விதத்தில் அவளால் நிச்சயம் திவா அளவிற்கு அன்பை வெளிக்காட்ட முடியாமல் தான் போனது.
இதற்கிடையில் சிந்தாம்மா தனக்கு தெரிந்த ஜோசியரிடம் தேதி கேட்கச் சென்று வந்தார் ஆடி மாதம் நடந்து கொண்டிருக்க அது முடிந்து வரும் முதல் முகூர்த்தமே நன்றாக இருப்பதாய் கூறினார்.