அவருக்கு அந்த தேதியே திருப்தியாய் இருக்க திவாவிடமும் வெண்பாவிடமும் அவர்களின் விருப்பத்தை கேட்க அவர்களுக்குமே சம்மதமாய் இருந்தது.
மிகுந்த ஆடம்பரம் ஏதுமின்றி அதே நேரம் மருத்துவ நண்பர்களை அழைக்க வேண்டியிருப்பதால் ஓரளவு சாதாரணமாய் ஒரு திருமண மண்டபத்தில் எளிமையாய் நடத்தலாம் என முடிவு செய்தனர்.
ஓரளவு திவா வட்டத்தில் விஷயம் தெரிய வர அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு ட்ரீட் பார்ட்டி என அவனை ஒரு வழி ஆக்க ஆரம்பித்தனர்.
இறுதியாய் சரி என ஒத்துக் கொண்டவன் அந்த வார இறுதியில் அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் அனைவருக்குமாய் ஒரு கெட் டூ கெதருக்கு ஏற்பாடு செய்தான்.
“கண்ணம்மா இந்தவாரம் கெட் டூ கெதர் இருக்கு..நாம கொடுக்குற பார்ட்டி தான் சோ நீயும் வரணும்.”
“ஐயோ திவா நானா..எனக்கு ஒருமாதிரி இருக்கு..நிறைய பேர் வருவாங்களா?'
“ஹார்ட்லி ஒரு 30-35 மெம்பர்ஸ் தான்..லேடிஸும் வருவாங்க சோ நோ ப்ராப்ளம் டா..அதுமட்டுமில்லாம நா இருக்கேன் அப்பறம் என்ன?”
“ம்ம் ஓ.கே தான் இருந்தாலும்..”
“அட நீயெல்லாம் துபாய் பொண்ணுனு சொல்லிராத..ஒரு கெட்டு கெதருக்கு இவ்ளோ யோசிக்குறியே!”
“யாரு சொன்னா நா துபாய் பொண்ணுனு நா தமிழ்நாட்டு பொண்ணு தான்.பக்கா பட்டிகாடு..இதெல்லாம் அலர்ஜியான விஷயம்தான்.”
“என் நாட்டிய மோகினிக்கு எவ்ளோ கோபம் வருது..நான் தான் சொல்றேன்ல நா இருக்கேன்னு அப்பறம் என்ன?”
“ம்ம் ஓ.கே திவா போலாம் டைமிங் அண்ட் அட்ரஸ் டெக்ஸ்ட் பண்ணிடுங்க”
“அதெல்லாம் எதுக்கு என் கண்ணம்மாவை நானே பிக்கப் பண்ணிக்குறேன்.சோ சர்டர் டே 7 பி எம் ரெடியா இரு ஓ.கே!பாய் டேக் கேர்..”
அவனின் ஒவ்வொரு கண்ணம்மாவும் அவளை அவன் மீது பித்து கொள்ளச் செய்து கொண்டேயிருந்தது.அவன் அழைக்கும் போது அதிலிருக்கும் காதல், வாழ்வின் அர்த்தமே நீ என்பதாய் இருக்கும் அந்த உச்சரிப்பு, நீயின்றி நானில்லை என்பதுவான குரல் ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாய் அவனிடத்தில் தன்னை தொலைக்க வைத்தது.
அவனை காதலிப்பதாய் கூறி அவன் காதலை பெற்றுவிட்ட இத்தனை நாட்களில் காதல் என்பதை உணர்ந்ததேயில்லை என்று தான் எண்ணிணாள்.அதையும் கடந்த அவனின் அக்கறை அன்பு அதையும் கடந்த அவனுக்கு கிடைத்த பொக்கிஷமாகவே அவளை பாவிக்கிறான் என்பது கண்கூடாய் தெரிந்தது.
பிறந்ததில் இருந்து இப்படியான ஒரு பாதுகாப்பு உணர்வையும் கள்ளங்கபடமற்ற அன்பையும் தனக்கே தனக்கான உறவையும் மொத்தமாய் திவாவிடத்தில் உணர்ந்தாள் அவனது வெண்பா.
தனிமையில் வளர்ந்தவனுக்கே உரிய பொறுமையும் மென்மையும் பக்குவமும் அவனது ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது.
அந்த சனிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து சீக்கிரமே வந்தவள் தன்னிடம் இருந்ததில் பார்ட்டிக்கு ஏற்றவாறான ஒரு டிசைனர் புடவையை எடுத்துக் கட்டினாள். மிதமான ஒப்பனைகளோடு அழகாய் தயாராகி திவாவிற்கு அழைத்தாள்.
“சொல்லு கண்ணம்மா ரெடி ஆய்டியா?”
“எப்படி திவா நீங்க இத்தனை பொறுமையா அழகா பேசுறீங்க ஓ காட் உங்க குரலுக்கே நான் ப்ளட்..”,இருந்த புத்துணர்வில் துள்ளலாய் அவள் கூற அதை கேட்டவனின் உதடுகளோ அழகான புன்னகையை உதிர்த்தது.
“நா கிளம்பிட்டேன் டா..இன்னும் 10 மினிட்ஸ்ல வந்து நேர்ல உனக்கு பதில் சொல்றேன்..பை..”
போனை வைத்தவளுக்கு அப்போது தான் அறிவுக்கு உரைத்தது.அவனுமே சற்று உற்சாகமாய் இருந்ததாய் தோன்றியதோ!!காரணம் சில நொடிகள் யோசித்தவளுக்கு சட்டென விஷயம் விளங்கியது காதலர்களாய் முதன்முறை அவனோடு வெளியே செல்லப் போகிறாள்.அன்றைய தினத்திற்கு பிறகு இப்போது தான் அவனை சந்திக்கப் போகிறாள்.அந்த நொடியே மனம் படபடக்க ஆரம்பீத்தது வெண்பாவிற்கு.
அவள் தன்னை சீர்படுத்திக் கொள்வதற்குள் வாசலில் கார் சத்தம் கேட்க தன் தோழியிடம் கூறிவிட்டு கிளம்பி வெளியே வந்தவளை காரினுள் அமர்ந்து ஆசைதீர விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.
அழகிய அடர்நீல நிற டிசைனர் புடவையில் வெள்ளை கற்கள் அலங்கரித்திருக்க முந்தானையை ஒற்றையாய் விட்டு தலையை விரித்துவிட்டு சென்டர் கிளிப் போட்டிருந்தாள்.அளவான ஒப்பனை காந்த கண்களை கருப்பு வைரமாய் மின்னச் செய்ய அத்தனை பாந்தமாய் தோன்றினாள் திவாவின் கண்களுக்கு.
உள்ளே அமர்ந்தவள் சிநேகப் புன்னகையோடு ஹாய் என்றுகூற சற்றே தெளிந்தவன் பதில் மென்னகையோடு ஹாய் கண்ணம்மா லுக்கிங் ஆசம் டா..என்று ரசித்து கூறினான்.
அங்கிருந்து ஹோட்டலை அடையும் வரையுமே அமைதி மட்டுமே பிரதானமாய் இருக்க அவ்வப்போது ஓரப்பார்வை பார்த்தவாறே வெளியே பார்த்து வந்தாள் வெண்பா.இதமான இசை மனதை நிறைக்க அத்தனை ரம்மியமாய் ஒவ்வொரு நொடியும் நகர்ந்தது இருவருக்கும்.