ரெஸ்ட்டாரண்டில் இருவரும் உட்கார்ந்திருக்க “என்ன சாப்பிட்ற சுடர்..” என்று அமுதன் கேட்டதை அவள் காதில் வாங்காமல் அமர்ந்திருந்தாள்.
மகியிடம் அப்படி பாராமுகமாக நடந்துக் கொண்டது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. இன்றே தான் சார்லியிடம் அனைத்தையும் கூற வேண்டுமா? எப்படியோ அவன் அவளுக்காக தானே வந்திருக்கிறான். மெதுவாக பேசியிருக்கலாம், ஆனால் இப்போது மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை அவனிடம் சொல்லிவிட மனம் துடித்தது.
அலைபேசியில் பேசியிருக்கலாம் தான், ஆனால் வெகு தொலவில் இருக்கும் அவனிடம் தன் வேதனையை கூறி அவனையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று தான் அவள் தவிப்போடு பொறுமையாக இருந்தாள். ஆனால் இப்போது நேரில் வந்தவனிடம் உடனடியாக பேசிட எண்ணியே மகியிடம் அப்படி நடந்துக் கொண்டாள். இதில் குடும்பம் தான் தனக்கு முதன்மை என்று கூறினான் அல்லவா, அந்த குடும்பத்தில் தன்னையும் அவன் இணைத்துக் கொள்ள விருப்பபடுவது போல் தெரியவில்லையே என்ற ஆதங்கமும் சேர்ந்து தான் அவள் இப்படி நடந்துக் கொண்டாள்.
“ஹலோ மேடம் என்ன சாப்ட்றீங்க..” என்று அமுதன் கத்தவும் நடப்புக்கு வந்தாள். பின் அவளுக்கு விருப்பமானதை சொல்லியதும்,
“ஆமாம் மகி கூட தான் பிரச்சனையா? அதுக்காகவா இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்க, காதலிக்க ஆரம்பிச்சிட்டா, இதெல்லாம் சகஜம் டியர், உங்களுக்குள்ள என்ன சண்டைன்னு சொல்லு, நான் சமாதானப்படுத்துறேன்..” என்று அவன் சொல்லவும்,
“ம்ம் மண்ணாங்கட்டி.. காதலே இருக்கான்னு தெரியலையாம்.. இதுல அதுக்குள்ள சண்டையாம்.. எல்லாம் உன்னால தான் வந்துச்சு, நீ மட்டும் ஏர்ப்போர்ட்ல வச்சு இப்படில்லாம் உளறாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.. நான் இப்படி தவிப்போடு இருந்திருக்க மாட்டேன்..” என்று சொல்லியவள், பின் அனைத்தையும் கூற,
“ஓ இதுதான் உன்னோட பிரச்சனையா? இங்கப்பாரு மகிக்கு உன் மேல காதல் இருக்கு, இப்போ நம்மல ஒன்னா பார்த்தப்பக் கூட அவன் கண்ணுல பொறாமை தெரிஞ்சுது.. நீ அவனை அவாய்ட் பண்ணும் போது கூட அவன் முகத்துல கவலை தெரிஞ்சுது தெரியுமா?”
“நீ சொல்றது போல மகி ஒருவேளை என்னை காதலிச்சாலும், அவங்க வீட்ல வேண்டாம்னு சொன்னா, என்னை விட்டுட்டு அவங்க அத்தை பொண்ணு அருளை கல்யாணம் செஞ்சுக்க ஓகே சொல்லிடுவான்..” என்றதும் அமுதன் திகைத்து பார்த்தான்.
விமானத்திலிருந்து இறங்கி இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அருள்மொழியின் நினைவு தானாகவே வந்து அவனுக்கு ஒட்டிக் கொண்டது.
“இந்நேரம் மொழியும் இலக்கியாவும் அவங்க படிப்பை முடிச்சிருப்பாங்க.. இண்டர்ன்ஷிப் மீதி நாளை ஒழுங்கா முடிச்சாங்களா? எக்ஸாம்ஸ் சரியா செஞ்சாங்களா?” என்று நினைத்துக் கொண்டான். அவர்களது அலைபேசி எண் இருந்தும், லண்டனுக்கு சென்றதிலிருந்து இப்போது வரை அவர்களிடம் அவன் பேசியிருக்கவில்லை.
“சும்மா டின்னர் சாப்பிடக் கூப்பிட்டதுக்கு வரல இல்ல..” என்ற கோபம் உள்ளுக்குள் இருக்க, அவர்களிடம் அதுவும் குறிப்பாக அருள்மொழியிடம் பேசிட வேண்டாம் என்று நினைத்தவன் வெறும் அவர்களை தன் நினைவில் கொண்டு வருவதோடு நிறுத்தியிருந்தான்.
இப்போது சுடர் அருள் என்ற பெயரை சொன்னதும், “ஒருவேளை அவள் தானோ..” என்று யோசித்தவனுக்கு என்னவோ அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மனதின் தவிப்புகள் சரியாக புரிந்திருந்தால், அடுத்து அவளை நேரில் சந்தித்து அதே அருள்மொழியை தான் பார்த்தோம் என்று உற்சாகப்பட்டவன், அடுத்து அப்படி ஒரு முட்டாள் தனத்தை செய்யாமல் தவிர்த்திருக்கலாம், ஆனால் அப்போது அவன் மனம் அவனுக்கே புரியவில்லையே!!
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}